மனமகிழ் மன்றங்கள் நடத்துவோருக்கு ஐகோர்ட் குட்நியூஸ்.. யூடியூபர்கள், சமூக ஆர்வலர்களுக்கு அதிரடியாக தடை
மதுரை: தமிழ்நாடு மனமகிழ் மன்றங்களின் உரிமையாளர்கள் சங்க தலைவர் வீரபாண்டியன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், ஆளுங்கட்சி நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் போன்ற போர்வையில் சிலர், யூடியூபர்கள் என கூறிக்கொண்டு மனமகிழ் மன்றத்திற்கு வந்து அவதூறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். ஆய்வு நடத்துகிறோம் எனக்கூறி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வெளியிட்டு அவதூறு பரப்புகின்றனர். பணம் கேட்டு மிரட்டுகிறார்கள் என்று கூறியிருந்தார்.இதையடுத்து மனமகிழ் மன்றங்களில் ஆய்வு என்ற பெயரில் ரீல்ஸ் வீடியோக்களை எடுத்து பதிவு செய்வதற்கு தடை விதித்து மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
தமிழகத்தில் தற்போது டாஸ்மாக் நிர்வாகம் சில்லறை விற்பனை மது கடைகளை நடத்தி வருகிறது. இவைதவிர, கிளப் என்று கூறப்படும் மனமகிழ் மன்றங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளிலும் அங்கு வரும் விருந்தினர்களுக்கு மது விநியோகம் செய்யப்படுகிறது.இந்த மனமகிழ் மன்றங்கள், விடுதிகள் டாஸ்மாக் நிர்வாகம் வாயிலாகவே மதுபானம் கொள்முதல் செய்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த மனமகிழ் மன்றங்களில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும். ஆனால் மதுபானங்களை டாஸ்மாக் கடைகளை போல் விற்பனை செய்வதாக குற்றச்சாட்டுகள் உள்ளது. இதனை காரணம் காட்டி சில யூடியூபர்கள் மற்றும் செய்தியாளர்கள் மற்றும் ஆளும் கட்சியினர் மனமகிழ் மன்றங்களை மிரட்டுவதாக புகார்கள் அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மனமகிழ் மன்றங்களின் உரிமையாளர்கள் சங்க தலைவர் வீரபாண்டியன், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறுகையில், "தமிழ்நாடு முழுவதும் மனமகிழ் மன்றங்களில் விதிமுறைகளை பின்பற்றி மதுபானக்கூடங்களை (பார்) நடத்துவதற்கு முறையாக அனுமதி பெற்று உள்ளோம். எங்களுடைய சங்க உறுப்பினர்கள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையிடமிருந்து சட்டப்பூர்வ உரிமம் பெற்று மனமகிழ், விளையாட்டு மன்றங்களை நடத்தி வருகின்றனர்.
ஆனால் அண்மை காலங்களில்ஆளுங்கட்சி நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் போன்ற போர்வையில் சிலர், யூடியூபர்கள் என கூறிக்கொண்டு மனமகிழ் மன்றத்திற்கு வந்து அவதூறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். ஆய்வு நடத்துகிறோம் எனக்கூறி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வெளியிட்டு அவதூறு பரப்புகிறார்கள். அத்துடன் மனமகிழ் மன்றங்களின் உரிமையாளர்களிடம் பணம் கேட்டு மிரட்டுகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் கூமாப்பட்டி மற்றும் திருச்சி மாவட்டத்திலுள்ள மனமகிழ் மன்றத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆய்வு என்ற பெயரில் அனுமதியின்றி நுழைந்து, அங்கிருப்பவர்களிடம் கேள்வி எழுப்பியதோடு மன்றத்தின் செயல்பாடுகளில் தலையிட்டு வருகின்றனர். இதனால் மனமகிழ்மன்றங்களின் உரிமைகள் பறிபோகிறது எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்"இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இதுகுறித்து முறையாக அரசு தரப்பில் பதில் அளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி சரவணன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி இந்த விவகாரம் தொடர்பாக பதில் அளிக்க அவகாசம் வேண்டும் என்றார். இதையடுத்து, மனமகிழ் மன்றங்களில் அந்த துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மட்டுமே ஆய்வு செய்யவேண்டும்.
யூடியூபர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் அந்த துறைக்கு சம்பந்தமில்லாத நபர்கள் அத்துமீறி உள்ளே நுழைந்து ரீல்ஸ் என்ற பெயரில் வீடியோக்களை பதிவு செய்ய இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவை முறையாக நிறைவேற்றியதை அந்த துறை அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டும்" இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.














Click it and Unblock the Notifications