விஜயை தவறாக வழிநடத்திய புள்ளி.. சிறுபிள்ளைத்தனமாக செய்த தவறு.. இப்போது முதல்வர் சீட்டுக்கே சிக்கல்!
சென்னை: தமிழக அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத ஒரு உச்சகட்டப் பரபரப்பில் சிக்கியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகரை இரண்டு முறை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். தமிழகத்தின் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்திருக்கும் நிலையில், விஜய் முதல்வராகப் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட தருணத்தில், ஒரு சிறிய சட்ட நுணுக்கம் மற்றும் அவர் செய்த சிறுபிள்ளைத்தனமான தவறு இப்போது அவருக்குப் பெரும் தடையாக மாறியுள்ளது.
தனிப்பெரும் கட்சிக்கு அழைப்பு விடுக்காதது ஏன்?
சட்டப்படி, ஒரு மாநிலத்தில் எந்தக் கட்சிக்கும் முழு பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் (Hung Assembly), ஆளுநர் அந்தச் சபையின் 'தனிப்பெரும் கட்சி'யை (Single Largest Party) ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்பது மரபு. அவர்களுக்குப் போதிய இடங்கள் இல்லாவிட்டாலும், பதவிப் பிரமாணம் செய்து வைத்துவிட்டு, குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடலாம்.

தற்போதைய நிலவரப்படி, விஜய்யின் தவெக 107 இடங்களுடன் (விஜய் இரு தொகுதிகளில் வென்றதால் ஒன்று குறைகிறது) தனிப்பெரும் கட்சியாக உள்ளது. எனவே, விஜய் எந்த ஆதரவுக் கடிதமும் தராமல், "நாங்கள் தான் தனிப்பெரும் கட்சி, எங்களை ஆட்சி அமைக்க அழையுங்கள்" என்று மட்டும் கோரிக்கை வைத்திருந்தால், ஆளுநர் அவரை அழைப்பதில் சட்டச் சிக்கல் இருந்திருக்காது.
விஜய் செய்த அந்த ஒரு 'தவறு'!
ஆனால், அவசரத்தில் விஜய் ஒரு தவறை செய்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். ஆளுநரைச் சந்தித்தபோது விஜய் தனது 107 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன், காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுக் கடிதத்தையும் இணைத்து மொத்தம் 112 பேரின் ஆதரவு தனக்கு இருப்பதாகக் கடிதம் அளித்துள்ளார்.
இங்குதான் சிக்கல் ஆரம்பமானது. ஒருவேளை விஜய் ஆதரவுக் கடிதமே தராமல் இருந்திருந்தால், ஆளுநர் அவரைத் தனிப்பெரும் கட்சித் தலைவராகப் பார்த்திருப்பார். ஆனால், விஜய் தானாகவே முன்வந்து கூட்டணிக் கணக்கைக் காட்டியதால், "ஏன் 118 வரவில்லை?" என்ற கேள்வியை ஆளுநர் எழுப்ப வழிவகை செய்துவிட்டார். 112 என்பது ஆட்சியமைக்கத் தேவையான 118-ஐ விட 6 இடங்கள் குறைவு என்பதால், "முழு பெரும்பான்மை இல்லாத ஒருவரை எப்படி அழைப்பது?" என ஆளுநர் தரப்பு பிடிவாதம் காட்டத் தொடங்கியுள்ளது.
ஆளுநரின் பிடிவாதமும்.. சட்ட வல்லுநர்களின் ஆலோசனையும்!
ஆளுநர் ஆர்லேகர் தற்போது இந்த விவகாரத்தில் மிகவும் கவனமாகக் காய்களை நகர்த்தி வருகிறார். "விஜய் சமர்ப்பித்த கடிதத்திலேயே 118 இடங்கள் இல்லை என்பது உறுதியாகிவிட்டது. எனவே, குதிரைப் பேரத்திற்கு வழிவகுக்காமல், தெளிவான பெரும்பான்மை இருந்தால் மட்டுமே அழைக்க முடியும்" என்ற நிலைப்பாட்டில் அவர் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் டெல்லியில் உள்ள சட்ட வல்லுநர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
அந்த 6 பேர் யார்? வி.சி.க மற்றும் இடதுசாரிகளுக்கு குறி!
இந்த 6 இடங்கள் குறைந்ததால், ஆட்சிப் பீடத்தில் அமர வேண்டிய விஜய் இப்போது இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளார். தற்போது வி.சி.க, சி.பி.எம் மற்றும் சி.பி.ஐ போன்ற கட்சிகளின் பக்கம் தவெக தனது பார்வையைத் திருப்பியுள்ளது. இந்தக் கட்சிகளின் ஆதரவு கிடைத்தால் மட்டுமே 118 என்ற மேஜிக் எண்ணைத் தொட முடியும்.
ஆனால், கொள்கை ரீதியாக மாறுபட்ட இந்தக் கட்சிகள் விஜய்க்கு ஆதரவு அளிக்குமா அல்லது ஆளுநர் மாளிகையில் மீண்டும் இழுபறி நீடிக்குமா என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும். 'சட்ட நுணுக்கங்களைச் சரியாகக் கையாளாமல் விஜய் கோட்டை விட்டுவிட்டாரா.. அவரை தவறாக வழிநடத்தியது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது என்ற விவாதம் தற்போதைய அரசியல் சூழலில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications