"மோடி இருக்காரு".. ஸ்டாலின் ஏன் டெல்லிக்கு போகலை? திடீரென எடுத்த முடிவிற்கு இதுதான் காரணம்?
சென்னை: முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் நடக்கும் இந்திய கூட்டணி மீட்டிங்கிற்கு செல்லாததற்கு பின் முக்கியமான சில காரணங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தேசிய அளவில் லோக்சபா தேர்தல் தீவிரம் இன்னும் முடியவில்லை. லோக்சபா தேர்தலுக்கான கொண்டாட்டங்கள், பிரச்சாரங்கள் மிக தீவிரமாக நடந்தபடியே இருக்கின்றன. இறுதிக்கட்ட வாக்குபதிவிற்கான பிரச்சாரங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன.

தற்போதைய மக்களவை தேர்தலில் ஏழாவது மற்றும் கடைசி சுற்று வாக்குப்பதிவு நடைபெறும் நாளில்.. அதாவது நாளை எதிர்கட்சிகளின் கூட்டணியான இந்திய கூட்டணி முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது. இந்திய கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் டெல்லியில் கூடுவார்கள் என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
கலந்து கொள்ள மாட்டார்; இந்த நிலையில்தான் இதில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொள்ள மாட்டேன் என்று அறிவித்து இருந்தார். அதன்படி டெல்லியில் வரும் 1ம் தேதி நடைபெற உள்ள இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் குறித்து முன்பே என்னிடம் தெரிவிக்கப்பட்டது.
அன்று மேற்கு வங்கத்தில் சில தொகுதியில் தேர்தல் நடப்பதாலும், புயல் நிவாரணப் பணிகள் காரணமாகவும் என்னால் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க முடியாது. எனது முன்னுரிமை புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதுதான் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
மம்தா முடிவு குழப்பம்: ஏற்கனவே நடந்து வரும் மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் செல்லப் போவதில்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்து விட்டார். அங்கே காங்கிரஸ் - திரிணாமூல் ஒன்றாக நிற்கவில்லை. அதோடு பாரத் ஜோடோ நியாய யாத்திரை குறித்து தனக்குத் தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் புலம்பி இருந்தார்.
ஸ்டாலின் முடிவு; இப்படிப்பட்ட நிலையில்தான், பிரதமரை தேர்வு செய்ய போகும் கூட்டமாக கருதப்படும் இந்தியா கூட்டணியின் ஜூன் 1 மீட்டிங்கிற்கு செல்ல மாட்டேன் என்று முதல்வர் ஸ்டாலின் எடுத்து உள்ளார். பிரதமரை முடிவு செய்யும் கூட்டமாக பார்க்கப்படும் இந்த கூட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொள்ளாதது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்டாலினுக்கு பதிலாக திமுக சார்பாக டி ஆர் பாலு கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் நடக்கும் இந்திய கூட்டணி மீட்டிங்கிற்கு செல்லாததற்கு பின் முக்கியமான சில காரணங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அதன்படி தமிழ்நாட்டில் பிரதமர் மோடி இருக்கிறார். இங்கே பாஜக சார்பாக பல்வேறு மீட்டிங்குகள் நடக்கின்றன. அமித் ஷா வேறு வந்துவிட்டு சென்று இருக்கிறார். தமிழ்நாட்டின் மீது பாஜக தீவிரமாக கவனம் செலுத்துகிறது. இதனால் தமிழ்நாட்டில் இருக்க வேண்டும்.
அதோடு தமிழ்நாட்டில் இந்த தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும் அதற்காக தீவிரமான ஏற்பாடுகளை, தயார் நிலைகளை ஆளும் திமுக செய்து வருகிறதாம். தேர்தல் முடிவுகளை மனதில் வைத்தே ஜூன் 1 ஆம் தேதி காணொலிக் காட்சி வாயிலாக தி.மு.க மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள், தலைமை முகவர்கள், வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கலந்தாலோசனை கூட்டம் நடைபெறும் என பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இதில் ஸ்டாலின் கலந்து கொள்ள வேண்டும்.
டெல்லியில் நடக்கும் மீட்டிங்கிற்கும் பெரிய மாநில முதல்வர் யாரும் செல்லவில்லை. கெஜ்ரிவால் செல்ல முடியாது, மம்தா செல்லவில்லை. அப்படி இருக்க ஸ்டாலின் சென்றால் அது மரியாதையாக இருக்காது என்று முதல்வர் ஸ்டாலின் இந்த முடிவை செய்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications