முதல்வர் ஸ்டாலின், கனிமொழி- பிரசாரத்திற்கு போகாதது ஏன்? மக்களை சந்திக்க பயம்.. ஜெயக்குமார் விளாசல்
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்திற்கு வரவில்லையே ஏன் என முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. அதில் இன்றைய தினம் முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. வரும் 9 ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலில் நேற்று முன் தினத்துடன் பிரச்சாரம் ஓய்வு பெற்றது. இந்த நிலையில் இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு நேர்மையாக நடைபெறவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

செய்தியாளர்கள்
இதுகுறித்து அவர் பட்டினம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் ஜனநாயக ரீதியில் தேர்தலை நடத்தாமல் எப்படியாவது குறுக்கு வழியில் வெற்றி பெற வேண்டும் என திமுக கருதுகிறது. இதற்காகத்தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்திற்கே செல்லவில்லை.

சிலிண்டர் மானியம்
ஏன் என்றால் பிரச்சாரத்திற்கு போனால் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லையே என மக்கள் இவர்களை கேட்பார்கள். மாதம் ரூ 1000 கொடுப்பதாக சொன்னீர்களே அது என்னவாயிற்று? நீட் தேர்வு ரத்து என்னவாயிற்று என கேட்பார்கள், முதியோர் உதவித் தொகை, டீசல் விலை குறைப்பு, சிலிண்டர் மானியம் ரூ 100, நகைக் கடன் தள்ளுபடி என்னவாயிற்று? என கேட்பார்கள்.

திராணி
இது போல் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு மக்களை சந்திக்க திராணி இல்லாமல் மாநில தேர்தல் ஆணையம், ஜனநாயக விரோத செயல்களை மட்டுமே திமுக நம்பி உள்ளது. இது ஜனநாயக நாடு, மன்னராட்சி இல்லை. திமுக தலைவர் ஸ்டாலினின் நிலை இன்று சாயம் போன நதியாகவும் காலுடைந்த பரியாகவும்தான் இருக்கிறது. தேர்தலுக்கு 48 மணி நேரத்திற்கு முன்னரும் தேர்தல் நடக்கும் நாளில் வாக்குச் சாவடி மையத்திற்கு 200 மீட்டர் தொலைவிற்குள் தேர்தல் பிரச்சாரம் இருக்கக் கூடாது.
Recommended Video

தேர்தல் ஆணையம்
ஆனால் கோவிலம்பாக்கத்தில் ஒரு திமுக நிர்வாகி வாக்கு சேகரிப்பில் இன்று ஈடுபட்டுள்ளார். இதை எப்படி காவல் துறை அனுமதித்தது? இதை தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கிறது? இது போன்று பல இடங்களில் முறைகேடுகள் அரங்கேற்றப்பட்டு ஒரு ஜனநாயகத்தை குழித்தோண்டி புதைத்து எப்படியாவது வெற்றி பெற முயற்சித்துள்ளார்கள். தேர்தலை நியாயமாக நடத்துவதற்காகத்தான் நீதிமன்றங்கள் உள்ளன. நாங்கள் அந்த நீதிமன்றத்தை அணுகாதவாறு அவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications