பரிதாப நிலையில் சென்னை.. சீனுக்குள் வரும் பரந்தூர் ஏர்போர்ட்! ஓவர்டேக் செய்யும் ஹைதராபாத்! என்னாச்சு
சென்னை: நாட்டின் மிக முக்கிய விமான நிலையங்களில் ஒன்றான சென்னை ஏர்போர்ட் இப்போது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான நிறுவனங்களின் ரேடாரில் விலக ஆரம்பித்துள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
பல நிறுவனங்கள் சென்னை ஏர்போர்ட்டில் தங்கள் சேவையைக் குறைக்க ஆரம்பித்துள்ளன. சென்னையில் சர்வதேச விமானங்களைக் காட்டிலும் உள்நாட்டு விமானச் சேவை அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை இல்லை என்றால் சென்னை ஏர்போர்ட்டிற்கு மிகப் பெரிய நஷ்டம் ஏற்படும் என எச்சரிக்கின்றனர்.

விமான சேவை குறைந்தது: சிரியம் என்ற சர்வதேச நிறுவனம் வெளியிட்டுள்ள டேட்டாபடி, கடந்த 2019 பிப், மாதத்துடன் ஒப்பிடுகையில் சென்னையில் இருந்து இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை 15 சதவிகிதம்... (அதாவது 1000 விமானங்கள்) குறைந்துள்ளது. கடந்த பிப்ரவரி 2019இல் சென்னை ஏர்போர்ட்டில் இருந்து 6,682 விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில், இப்போது 5,678 விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. சர்வதேச விமானங்கள் மட்டுமின்றி உள்நாட்டு விமான சேவையும் கடுமையாகக் குறைந்துள்ளது.
சென்னையில் இருந்து டெல்லிக்கு ஒரு மாதத்திற்கு 140 விமானங்களை ஏர் இந்தியா இயக்கி வந்த நிலையில், அது இப்போது 116ஆகக் குறைந்துள்ளது. அதேபோல ஹைதராபாத் விமானங்கள் 36இல் இருந்து 25ஆகவும் அந்தமானுக்குச் செல்லும் விமானங்கள் 44இல் இருந்து 29 ஆகவும் குறைந்துள்ளது. அதேபோல இண்டிகோ நிறுவனமும் பெங்களூர், கோவை உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்லும் விமானங்கள் எண்ணிக்கையைக் குறைத்துள்ளன. ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கூட பல ரூட்களில் விமானத்தை மொத்தமாக நிறுத்துவிட்டன.
உள்நாட்டு விமானங்கள்: தற்போதைய சூழலில் டெல்லிக்குக் குறைந்த அளவு விமானங்களைக் கொண்ட முக்கிய மெட்ரோ நகரமாகச் சென்னை இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுபோக கோ ஏர், ஜெட் ஏர்வேஸ் என முன்பு சென்னையில் இருந்து இயங்கி வந்த விமான நிறுவனங்கள் இப்போது முடங்கிப் போனதும் விமானங்கள் எண்ணிக்கை குறைய முக்கிய காரணமாக இருக்கிறது.
சர்வதேச விமானங்களின் எண்ணிக்கையும் கூட கணிசமாகக் குறைந்துள்ளது. கேத்தே பசிபிக் ஏர்வேஸ் தனது ஹாங்காங் விமானங்களைப் பாதியாகக் குறைத்துள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் கொழும்புக்கான விமானங்கள் 30 சதவீதம் குறைத்துள்ளது. சில ரூட்களில் புது விமானச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது சர்வதேச விமானங்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இதுபோக தனது சென்னை டூ ஜெர்மனி விமானச் சேவையையும் குறைக்கவுள்ளதாக லுஃப்தான்சா நிறுவனம் அறிவித்துள்ளது.
காரணங்கள் என்ன: சென்னை ஏர்போர்ட்டில் சர்வதேச விமானங்கள் குறைக்கப்படுவது தொடர்பாக திமுக எம்பி வில்சனும் ராஜ்யசபாவில் கேள்வி எழுப்பி இருந்தார். சென்னையில் விமான எரிபொருள் விலை அதிகமாக இருப்பதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. இதனால் பல விமானங்கள் ஹைதராபாத் பக்கம் செல்கிறது. ஏர்போர்ட் அத்தாரிட்டியால் நிர்வகிக்கப்படும் சென்னை விமான நிலையத்தில் கட்டணமும் அதிகம் எனச் சொல்லப்படுகிறது. குறிப்பாக இரவு நேரத்தில் விமானங்களை நிறுத்தி வைக்கும் கட்டணம் அதிகம் என கூறப்படுகிறது.
இது தவிரச் சர்வதேச விமானங்களுக்கு போதுமான ஏரோபிரிட்ஜ்கள் இல்லை என்றும் கூட சிலர் கூறப்படுகிறது. இவை எல்லாம் தான் சென்னையில் இயக்கப்படும் விமானங்கள் எண்ணிக்கை குறையக் காரணமாக இருக்கிறது. ஆசியாவின் டாப் 50 ஏர்போர்ட்களில் ஒன்றாகச் சென்னை இருக்கும் நிலையில், ஆண்டுக்கு சுமார் 1.8 கோடி பேர் பயன்படுத்துகின்றனர்.
பல சர்வதேச விமான நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் சேவையை விரிவுபடுத்தவே விரும்புகின்றனர். இருப்பினும், மேல் சொன்ன காரணங்களால் சென்னையை விடப் பெங்களூர் மற்றும் ஹைதராபாத் நகரங்கள் அவர்கள் சாய்ஸாக இருக்கிறது. அடுத்த சில ஆண்டுகளுக்கு இதே நிலை தொடர்ந்தால் சென்னை ஏர்போர்ட்டிற்கு இது மேலும் இழப்புகளையே தரும்.
எனவே, இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை தேவை என்று வல்லுநர்கள் வலியுறுத்துகிறார்கள். நகருக்குள் அமைந்துள்ளதால் சென்னை மீனம்பாக்கம் ஏர்போர்ட்டை விரிவுபடுத்த முடியாமல் இருக்கும் நிலையில், உடனடியாக பரந்தூரில் புதிய ஏர்போர்ட் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications