நர்ஸ் அல்ல, இன்னொரு தாய்.. பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த தினம் செவிலியர் தினமாக கொண்டாடப்படுவது ஏன்?
சென்னை: ஒவ்வொரு ஆண்டும் மே 12 உலகெங்கிலும் சர்வதேச செவிலியர் தினமாக (Nurses Day) கொண்டாடப்படுகிறது. 1820ம் ஆண்டு மே 12ம் தேதி பிறந்த புளோரன்ஸ் நைட்டிங்கேல் (Florence Nightingale) (கை விளக்கேந்திய காரிகை) பிறந்த நாளை இது நினைவுகூர்கிறது. ஏன் அவருக்கு மட்டும் இத்தனை முக்கியத்துவம்? பார்க்கலாம், வாருங்கள்.
Recommended Video
சுகாதார சேவையில் செவிலியர்களின் முக்கிய பங்கு, செவிலியர் தினம் மூலம், சமூகத்திற்கு நினைவுபடுத்தப்படுகிறது செவிலியர் தினம்.
முதன் முதலில், 1953 ஆம் ஆண்டில், அமெரிக்க சுகாதாரம், கல்வி மற்றும் நலத்துறையின் அதிகாரியான டோரதி சதர்லேண்ட், செவிலியர் தினத்தை அறிவிக்கும் தீர்மானத்தை முன்மொழிந்தார்.
ஆனால் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. சர்வதேச செவிலியர் கவுன்சில் (ஐ.சி.என்) - 1965 ஆம் ஆண்டு முதல் இந்த நாளை செவிலியர் தினமாக கொண்டாடியது. இருப்பினும், ஜனவரி 1974 இல், மே 12 சர்வதேச அளவில் செவிலியர் தினம் தேர்வு செய்யப்பட்டது.

அதிக முக்கியத்துவம்
இதுவரை கூட, செவிலியர் தினம் பெரும்பாலானோர் கவனத்தை ஈர்த்ததில்லை. மருத்துவத் துறையினருக்கான தினமாக மட்டுமே எஞ்சியது. ஆனால்,
COVID-19 தொற்றுநோயை உலகம் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், செவிலியர் தினம் முக்கியத்துவம் பெறுகிறது.
பலராலும் கவனிக்கப்படுகிறது.

நவீன நர்சிங்கின் தாய்
புளோரன்ஸ் நைட்டிங்கேலுக்கு அப்படி என்ன முக்கியத்துவம் என்கிறீர்களா. இவர் ஒரு பிரிட்டிஷ் செவிலியர், புள்ளியியல் நிபுணர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி. நவீன நர்சிங் என்று நாம் இப்போது பார்க்கிறோமோ, அதற்கான, அடித்தளத்தை அமைத்தவர். ஒரு கட்டமைக்கப்பட்ட, முறையான நர்சிங் செயல்முறையை உருவாக்கியவர். நைட்டிங்கேல் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பு, செவிலியர் துறையில், இதுபோன்ற நெறிப்படுத்தப்பட்ட அமைப்பு அல்ல.

செல்வந்தர் வீட்டு பெண்
இத்தாலி நாட்டை சேர்ந்தவர் பிளாரன்ஸ் நைட்டிங்கேல். செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர். இளமையிலேயே பழமொழிகளை திறம்படக் கற்றுத் தேர்ந்தவர். ஆதரவற்ற எளியவர்களுக்கு உதவி செய்வதே இந்த பிறவியின் பேரின்பம் என்ற கொள்கை கொண்டவர். ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்ய ஏற்ற தொழில் செவிலியர் என்பதால் அதற்கான பயிற்சியில் சேர்ந்தார். லண்டனில் பல ஆண்டுகள் மருத்துவம் மேற்பாளராக பணியாற்றினார். 1854 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் கிரிமியன் போர் மூண்டது. இதில் இங்கிலாந்தும் ஈடுபட்டது. இந்த போரில் பலர் இறந்தனர். பலர் காயமுற்றனர். மருத்துவ விடுதிகளில் சேர்க்கப்பட்டவர்களுக்கு போதிய வசதி இல்லை. தரையில் படுத்து கிடந்தனர் நோயாளிகள். மருந்து வசதியும் கிடையாது.

துணிகளை துவைத்துக் கொடுத்தார்
காயமடைந்த நோயாளிகளை கரப்பான்பூச்சிகள் கடித்தன. தூய்மை இல்லை என்பதால், காலரா பரவி பலரை பலி எடுத்தது. இந்த நிலையில்தான் போர்முனை மருத்துவ விடுதியில் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பணியாற்றி மாபெரும் தொண்டு செய்தார். நோயாளிகளின் ஆடைகளை இவரே சுத்தம் செய்தார். உணவு கிடைக்க வழிவகை செய்தார். சுத்தம், தூய்மை உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து தன்னையே தள கர்த்தாவாக மாற்றினார். இதனால் அங்கு காலரா பரவல், நின்றது. காய்ச்சல் குறைந்தது. மன அமைதி பிறந்தது. நோயாளிகள் விரைந்து குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர்.

கை விளக்கேந்திய காரிகை
நைட்டிங்கேல் பல மணிநேரங்களை வார்டுகளில் கழித்தார், இரவு மின்சார வசதியில்லாத நிலையில், ஒரு கையால் விளக்கை உயரமாகப் பிடித்துக் கொண்டு, மறு கையால் மருத்துவம் பார்த்தார். எனவேதான், இவர் கை விளக்கு ஏந்திய காரிகை என அழைக்கப்பட்டார். "லேடி வித் தி லேம்ப்" என்பார்கள் ஆங்கிலத்தில்.

கருணை உள்ளமே
இவரது கருணை உள்ளம் அத்தனை செவிலியர்களுக்கும் ஒரு ஆதர்ஷமாக மாறிப் போனது. இதனால்தான் இவருக்கு இத்தனை முக்கியத்துவம்.
நர்சிங் கல்வியை முறைப்படுத்த அவர் முயன்றார். 1860 ஆம் ஆண்டில் லண்டனில் உள்ள செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் முதல் அறிவியல் அடிப்படையிலான நர்சிங் பள்ளியான நைட்டிங்கேல் ஸ்கூல் ஆஃப் நர்சிங் நிறுவ உதவினார்.

கொண்டாடுங்கள்
பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் ஆர்டர் ஆஃப் மெரிட் (1907) வழங்கப்பட்ட முதல் பெண்மணி அவர் என்பதில் ஆச்சரியமில்லை. ஆண்டுதோறும் மே 12 அன்று அனுசரிக்கப்படும் சர்வதேச செவிலியர் தினம், நைட்டிங்கேலின் சேவையை நினைவுகூர்கிறது, மற்றும் சுகாதார சேவையில் செவிலியர்களின் முக்கிய பங்கைக் கொண்டாடுகிறது. நீங்களும், புகழப்படாத இந்த நிஜ கதாநாயகன்-கதாநாயகிகளை கொண்டாடுங்கள்.












Click it and Unblock the Notifications