இப்ப வேண்டாங்க.. ஓபிஎஸ் வீட்டில் பதறிய "வாய்ஸ்".. அதிமுக வழக்கில் இன்னும் மேல்முறையீடு பண்ணாதது ஏன்?
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓ பன்னீர்செல்வம் இன்னும் மேல்முறையீடு செய்யவில்லை. இதற்கு பின் வேறு காரணங்கள் இருப்பதாக அவருக்கு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவில் வார வாரம் பல்வேறு திருப்பங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த வாரம் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஜூலை 11ம் தேதி நடந்த திமுக பொதுக்குழு செல்லும். இந்த பொதுக்குழு செல்லாது என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறோம் என்று உயர் நீதிமன்ற 2 நீதிபதி அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் வழக்கில் காலை இந்த தீர்ப்பை வழங்கி உள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு இந்த தீர்ப்பு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

ஓ பன்னீர்செல்வம்
இந்த வழக்கில் தீர்ப்பு வந்ததுமே மேல்முறையீடு செய்வேன் என்று ஓ பன்னீர்செல்வம் உறுதியாக சொல்லிவிட்டார். அதன்படியே ஓ பன்னீர்செல்வம் நேற்று மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. திங்கள் கிழமை வழக்கில் மேல்முறையீடு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கருதப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்தன. எடப்பாடி பழனிசாமி தரப்பும் இந்த மேல்முறையீட்டை எதிர்பார்த்து காத்து இருந்தது.

எடப்பாடி பழனிசாமி
ஓ பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்வார் என்ற எதிர்பார்ப்பில் எடப்பாடி பழனிசாமி தரப்பு கேவியட் மனுவும் தாக்கல் செய்தது. இந்த நிலையில்தான் நேற்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு வழக்கில் எந்த மேல்முறையீடும் செய்யவில்லை. நேற்று மாலை வரை ஓ பன்னீர்செல்வம் தரப்பில் இருந்து மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை. இது அதிமுக வட்டாரத்தில் பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஓ பன்னீர்செல்வம் வட்டாரத்தில் விசாரித்தோம்.

வழக்கறிஞர்கள்
அதன்படி ஓபிஎஸ் வழக்கறிஞர்கள் மனோஜ் பாண்டியன், அரவிந்த் பாண்டியன் ஆகியோர் ஓபிஎஸ் சார்பாக மனு தாக்கல் செய்யும் திட்டத்தில் உள்ளனர். இவர்கள் இருவரும் மூத்த வழக்கறிஞர்கள். இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பில் இருக்கும் ஓட்டைகளை இவர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். இது தொடர்பாக ஓ பன்னீர்செல்வத்தின் தேனி வீட்டில் நேற்று பதற்றத்துடன் கூடிய பரபர ஆலோசனை நடந்துள்ளது. நேற்றே மேல்முறையீடு செய்ய வேண்டும் என்பதற்காக ஆலோசனை செய்துள்ளனர். ஓ பன்னீர்செல்வம் போன் மூலம் இந்த ஆலோசனையை செய்துள்ளார். அப்போது வேறு சில வழக்கறிஞர்கள் ஓபிஎஸ் அருகே இருந்து ஆலோசனை செய்துள்ளனர்.

அவசரப்பட வேண்டாம்
அவசரப்பட வேண்டாம் என்று முக்கியமான நபர் ஒருவர் ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது. அதில், தீர்ப்பில் பல விஷயங்கள் உள்ளது. அனைத்தையும் ஆய்வு செய்த பின்பே வழக்கு தொடுக்க வேண்டும்.உச்ச நீதிமன்றம்தான் கடைசி ஆப்ஷன். அதனால் இன்று மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்று நேற்று முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இன்று அல்லது நாளை வழக்கில் மேல்முறையீடு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முழு ஆய்விற்கு பின்பே வழக்கில் மேல்முறையீடு செய்யப்படும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications