"மகனின் மருத்துவ கனவு.." ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் புதிய வாக்குமூலம்
சென்னை: ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியது ஏன் என்று போலீஸ் காவலில் உள்ள கருக்கா வினோத் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார். கருக்கா வினோத் போலீசாரிடம் அளித்த வாக்கு மூலத்தின் விவரங்களை பார்க்கலாம்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை மீது கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி மதியம் ஒருவர் பெட்ரோல் வெடிகுண்டை வீசினார். அவரை போலீசார் மடக்கி பிடித்த போது அவர் சரித்திர குற்றவாளி கருக்கா வினோத் என தெரியவந்தது. நீட் தேர்வை ரத்து செய்ய ஆளுநர் மறுப்பதால் பெட்ரோல் குண்டை வீசியதாக வினோத் போலீஸ் வாக்குமூலத்தில் தெரிவித்தார். இதையடுத்து அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கருக்கா வினோத் யார் என்பது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. கடந்த 21 ஆம் தேதி புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த கருக்கா வினோத், அதே நேரத்தில் ஜாமீனில் வெளியே வந்த பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினருடன் வந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியானது.
போலீஸ் காவல்: எனவே கருக்கா வினோத்திற்கு பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புடன் என்ன தொடர்பு? பலமுறை சிறை சென்ற கருக்கா வினோத்தை சிறையிலிருந்து ஜாமீனில் எடுத்தது யார், அவருக்கு தேவையான நிதியுதவிகளை வழங்குவது யார் போன்ற விவரங்களை என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே கருக்கா வினோத்தை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி அளித்தது.
கருக்கா வினோத் வாக்குமூலம்: இந்த நிலையில், ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியது ஏன் என்பதற்கு போலீஸ் காவலில் உள்ள கருக்கா வினோத் வாக்குமூலம் அளித்து இருக்கிறார். கிண்டி போலீசார் கருக்கா வினோத்திடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகர தகவல்களை கருக்கா வினோத் தெரிவித்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருக்கா வினோத் அளித்த வாக்குமூலம் குறித்த விவரம் வருமாறு:- ஜெயிலில் இருந்த போது எனக்கு தினமும் பேப்பர் படிக்கும் பழக்கம் இருந்தது. அப்போது நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட செய்தியை பார்த்து மிகுந்த மன உளைச்சல் அடைந்தேன். எனவே, நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவுக்கு ஆளுநர் கையெழுத்திட வேண்டும் எனக் கோரி பெட்ரோல் குண்டு வீச திட்டமிட்டதாக கருக்கா வினோத் கூறியுள்ளார்.
மருத்துவ கனவு: மேலும், தனது மகன் 6-ஆம் வகுப்பு படித்து வருவதாகவும், மெடிக்கல் காலேஜில் மகனை படிக்க வைக்க திட்டமிட்டு இருந்ததாகவும் நீட் தேர்வு இருந்தால் மருத்துவ கனவு பறிபோய்விடும் என்பதால் ஆளுநர் நீட் விலக்கு கோப்பில் கையெழுத்திட வேண்டும் என்பதற்காக பெட்ரோல் குண்டு விசீயதாக கருக்கா வினோத் கூறியுள்ளார். மேலும், ஜெயிலில் இருந்து வெளியே வந்த போது யாரையும் சந்திக்கவில்லை என்றும் பி.எப்.ஐ அமைப்பினருக்கும் தனக்கும் எந்த வித தொடர்பும் இல்லை எனவும் கருக்கா வினோத் கூறியுள்ளார்.
அது மட்டும் இன்றி 10 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருக்கும் கைதிகள் மிகவும் மன உளைச்சலில் இருப்பதாகவும் அவர்களை வெளியே விடும் கோப்புகளில் ஆளுநர் கையெழுத்திட வேண்டும் எனவும் கருக்கா வினோத் வாக்கு மூலம் அளித்துள்ளார். கருக்கா வினோத்திடம் இன்றும் நாளையும் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications