இவ்வளவு தாராள மனம் கூடாது அப்பா.. ஸ்டாலின் எடுத்த 'அந்த' முடிவு.. உக்கிரமான உதயநிதி.. மோதல்!
சென்னை: சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்குப் பிறகு, அறிவாலய வட்டாரங்களில் புகைந்து கொண்டிருந்த உட்கட்சிப் பூசல் இப்போது அனல் பறக்கும் விவாதமாக மாறியிருக்கிறது. திமுகவின் தோல்விக்கான காரணங்களை ஆராய மு.க.ஸ்டாலின் அமைத்த 38 பேர் கொண்ட கள ஆய்வுப் பிரிவின் அறிக்கை, தற்போது கட்சிக்குள் ஒரு பெரிய பூகம்பத்தையே வெடிக்கச் செய்திருக்கிறது.

"இவ்வளவு தாராள மனம் கூடாது அப்பா..." - உக்கிரமான உதயநிதி!
கள ஆய்வு குழுவினர் 234 தொகுதிகளிலும் ரகசியமாகத் திரட்டிய விவரங்களை மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையைப் படித்துப் பார்த்த ஸ்டாலின், "இப்போதைக்கு யார் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டாம்; எல்லோரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும்" என்று ஒரு மென்மையான உத்தரவைப் பிறப்பித்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவல் வெளியே கசிந்ததும், கட்சியின் இளைஞரணிச் செயலாளரும் உதயநிதி ஸ்டாலின் கடும் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்துள்ளார்.
நேரடியாக ஸ்டாலினிடமே தன் அதிருப்தியைக் கொட்டிய உதயநிதி, "யார் மீதும் நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என்றால், பிறகு எதற்காக இந்த உயர் மட்டக் குழுவை அமைத்தீர்கள்? தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தப்பவிட்டால், அடிமட்டத் தொண்டர்களின் மனநிலை என்னவாகும்? தொண்டர்களின் கருத்துக்களை தொடர்ந்து புறக்கணித்தால், அவர்கள் மீண்டும் எப்படி களப்பணிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள்?" என அடுக்கடுக்கான கேள்விகளால் தலைமைக்கு நெருக்கடி கொடுத்துள்ளதாக அறிவாலய உள்வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.
99% தொண்டர்களின் ஒற்றைப் பகை
இந்தத் தேர்தல் தோல்விக்கு மாவட்டச் செயலாளர்களை விட, தி.மு.க.வின் தேர்தல் வியூகக் குழு ஒன்றின் மீது தான் முதன்மைக் காரணம் என்று 99 சதவீதத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கடுமையான கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. வேட்பாளர் தேர்வில் தொடங்கி, தொகுதிகளின் கள நிலவரம் வரை அனைத்திலும் இந்த வியூகக் குழு தங்களுக்கு சாதகமாக, சுயலாபத்திற்காகப் பொய் அறிக்கைகளைத் தலைமைக்குக் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
"கள நிலவரத்தை முழுமையாக மறைத்து, பண பலம் மற்றும் வேண்டியவர்களுக்கு மட்டுமே சீட் கொடுத்தது இந்தடீம் தான். அடிமட்டத் தொண்டர்களின் உழைப்பை உறிஞ்சி, கட்சியைப் பாதாளத்தில் தள்ளிய இந்த வியூகக் குழுவை உடனடியாகக் கலைக்க வேண்டும். இனிமேலாவது கார்ப்பரேட் நிறுவனங்களை நம்பாமல், ரத்தமும் சதையுமாக உழைக்கும் கட்சி நிர்வாகிகளின் பேச்சைக் கேட்க வேண்டும்" என்கிற முழக்கம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தி.மு.க. தொண்டர்களிடையே ஒற்றைக் குரலாக எதிரொலிக்கிறது.
25 மாவட்டச் செயலாளர்களுக்கு 'கெட்ட நேரம்'?
கள ஆய்வுப் பிரிவின் அறிக்கையின்படி, சுமார் 25-க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக, உள்ளடி வேலைகளிலும் துரோகங்களிலும் ஈடுபட்டது ஆவணப்பூர்வமாகத் தெரியவந்துள்ளது. எதிரணிக்கு ரகசியமாக நிதியுதவி செய்தது, தேர்தல் பிரசாரத்தில் தொய்வு காட்டியது என இவர்களின் துரோகப் பட்டியல் நீள்கிறது.
கட்சியைக் காப்பாற்ற வேண்டுமானால், இந்த 25 மாவட்டச் செயலாளர்களையும் உடனடியாகப் பதவியிலிருந்து தூக்க வேண்டும் என்பதில் உதயநிதி பிடிவாதமாக இருக்கிறார். ஆனால், ஸ்டாலினோ கட்சியின் மூத்த தலைவர்களைப் பகைத்துக் கொள்ள அஞ்சுகிறார். "அரவணைப்பு அரசியலா" அல்லது "அதிரடி சுத்திகரிப்பா" என்ற இந்த இருமுனைப் போட்டியில், தி.மு.க.வின் அடுத்தகட்ட நகர்வு என்னவாகப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications