45 ஆண்டுகளில் எந்த முதலமைச்சருக்கும் இல்லாத தைரியம்.. ஒரே மாதத்தில் செய்த விஜய்.. அன்புமணி பாராட்டு
சென்னை: சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணிகளை தோற்கடித்து தவெக ஆட்சியமைத்துள்ளது. தவெக தலைமையில் புதிய கூட்டணி உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பாமகவும், தவெகவுடன் இணக்கமான போக்கை கடைபிடித்து வருகிறது. கடந்த 45 வருடங்களாக எந்த முதலமைச்சரும் செய்யாத விஷயத்தை, பதவியேற்ற ஒரு மாதத்தில் விஜய் தைரியமாக செய்ய முன் வந்துள்ளார் என்று அவருக்கு அன்புமணி ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், "எங்கள் மருத்துவர் ஐயா 1980 ஆம் வருடத்தில் வன்னியர் சங்கத்தை தொடங்கி முதல் மாநாட்டை நடத்தினார். அதில் முதல் 3 தீர்மானங்கள் மிகவும் முக்கியமானது. வன்னியர்களுக்கு 20 விழுக்காடு ஒதுக்கீடு, தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அனைத்து சமுதாயத்தினருக்கும் சமூக நீதி இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும், பட்டியலின மக்களுக்கு 2 விழுக்காடு கூடுதல் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

யாருக்கும் துணிச்சல் இல்லை
46 வருடங்களுக்கு முன்பு நடத்திய வன்னியர் சங்க மாநாட்டில் இதை மருத்துவர் பேசினார். அதன் பிறகு எத்தனையோ முதலமைச்சர்கள் வந்தனர். எம்ஜிஆர் அவர்களை நம் மருத்துவர் பலமுறை சந்தித்து இந்த கோரிக்கையை வலியுறுத்தினார். கருணாநிதி, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் ஆகியோர் முதலமைச்சராக இருந்தபோதும் பலமுறை சந்தித்து பேசினோம். எப்படியாவது கணக்கெடுப்பு நடத்தி அனைத்து மக்களுக்கும் சமூகநீதி வழங்குங்கள் என்றோம்.
அவர்களிடம் அதிகாரம் இருந்தும், ஆட்சி இருந்தும், சட்டம் இருந்தும் இதை செயல்படுத்த மனமில்லை. ஆனால் ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திலேயே முதலமைச்சர் விஜய் தைரியமாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதற்கு நாம் உண்மையிலேயே அவரை பாராட்ட வேண்டும். இது ஏதோ என் பிரச்சனை, உங்கள் பிரச்சனை இல்லை. இது தமிழ்நாட்டின் பிரச்சனை. இவ்வளவு நாட்களாக கணக்கெடுப்பு நடத்த அவர்களுக்கு தைரியம் இல்லை.
விஜய்யின் தைரியம்
இன்றைக்கும் அரசு அதிகாரிகள், சார் இது வேண்டாம். பிரச்சனை வரும். கணக்கெடுப்பு நடந்தால் ஆளாளுக்கு ஏதாவது கேட்பார்கள். அதனால் தான் கடந்த காலங்களில் அதை கொண்டு வரவில்லை என்று முதலமைச்சரிடம் சொல்லியுள்ளனர். கடந்த திமுக ஆட்சியில் ஸ்டாலினும் எங்களிடம் கணக்கெடுப்பு நடத்துவதாக கூறினார். அதிகாரிகள் தான் அதை தடுத்தினார். முதலமைச்சர் விஜய், எந்த பிரச்சனை வந்தாலும் பரவாயில்லை என்று இதை செயல்படுத்த முன் வந்துள்ளார்" என்றார்.












Click it and Unblock the Notifications