இருங்க இருங்க.. பிரதமர் மோடி எடப்பாடியை சந்திக்காததற்கு இதுதான் காரணம்.. செங்கோட்டையன் பரபர விளக்கம்
சென்னை: அதிமுக - பாஜக இடையே எவ்வித முரண்பாடுகளும் இல்லை என்றும், நேரமின்மை காரணமாகவே பிரதமர் மோடி - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நடைபெறவில்லை என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
2 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று தமிழ்நாட்டுக்கு வந்தார். ஹைதராபாத்தில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் பிரதமர் மோடி நேற்று மதியம் சென்னை வந்தடைந்தார். சென்னையில் 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி விமானம் மூலம் இரவு மைசூருக்கு சென்றார். சென்னை வந்த பிரதமர் மோடியை சந்திக்க அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தனித்தனியே நேரம் கேட்டிருந்தனர்.
பிரதமரை சந்திக்க எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தனித்தனியே நேரம் கேட்டிருந்த நிலையில் இந்த சந்திப்பு ரத்தாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீர் செல்வத்தையும் பிரதமர் மோடி சந்திக்கவில்லை. இது அதிமுக - பாஜக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பிரதமர் மோடி எடப்பாடி பழனிசாமியை சந்திக்காததன் காரணம் என்ன என்பது குறித்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் கொடுத்துள்ளார். ஈரோட்டில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை படிவம் விநியோகித்த பிறகு முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில், போதிய நேரமின்மை காரணமாக மட்டுமே பிரதமர் மோடி எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவில்லை. அதிமுக மற்றும் பாஜகவுக்கு இடையில் எந்தவித முரண்பாடும் கிடையாது என்று கூறியுள்ளார்.

ஆனால், ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி இரு தரப்பும் இணைந்து செயல்படுவதை பாஜக விரும்புவதால்தான் அவர்களை தனித்தனியாக சந்திக்க பிரதமர் மோடி விரும்பவில்லை என்றும், கர்நாடகா தேர்தல் முடிந்த பிறகு சந்தித்துக் கொள்ளலாம் என பிரதமர் மோடி முடிவெடுத்ததாகவும் தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications