கமிஷனர் வந்ததுமே என்ன ஏதுனு கூட கேட்காம இந்த 3 வார்த்தைகள் தான் சொல்லியுள்ளார்.. பாஜக குழு புகார்!
சென்னை: பாஜக கொடிக் கம்பம் நடப்பட்ட இடத்திற்கு கமிஷனர் வந்ததுமே என்ன ஏதென விசாரிக்காமல் மூன்று வார்த்தைகள் தான் சொன்னார் என பாஜக தலைவர் புரந்தேஸ்வரி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை பனையூரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் வீடு முன்பாக அனுமதி இல்லாமல் 50 அடி உயர கொடிக்கம்பம் நிறுவப்பட்டது. இதனை அகற்றுவதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பாஜகவினர் கூண்டோடு கைது செய்யப்பட்டனர். பின்னர் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டோர் சிறையில் இருந்து வருகின்றனர். இதையடுத்து, தமிழ்நாட்டில் பாஜகவினருக்கு திமுக அரசால் அச்சுறுத்தல் கொடுக்கப்படுகிறதா என ஆய்வு செய்ய சதானந்த கவுடா, புரந்தேஸ்வரி, சத்ய பால் சிங், பிசி மோகன் ஆகியோர் கொண்ட குழுவை அமைத்தது பாஜக தலைமை.

பாஜக மேலிட உத்தரவின்படி சென்னைக்கு வந்து, பாஜக கொடிக்கம்பம் அகற்றப்பட்ட விவகாரத்தில் காவல்துறை நடந்துகொண்ட விதம், பாஜகவினர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்து ஆய்வு செய்ததோடு, கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்றும் விசாரித்தது பாஜக மேலிடம் அமைத்த நால்வர் குழு. இந்தக் குழுவினர், பனையூரில் உள்ள அண்ணாமலையின் வீட்டுக்கும் சென்று, கொடிக்கம்பம் அமைக்கப்பட்டிருந்த இடத்தை நேரில் பார்வையிட்டு, நடந்த விவரங்கள் குறித்துக் கேட்டறிந்தனர்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய, குழு உறுப்பினரும், ஆந்திரா பாஜக தலைவருமான புரந்தேஸ்வரி பேசுகையில், "அண்ணாமலை வீட்டுக்கு வெளியே பாஜக கொடிக் கம்பம் அமைத்த உடனேயே அங்கு போலீசார் வந்து, பாஜகவினரை அள்ளிக்கொண்டு போய் திருமண மண்டபத்தில் அடைத்தனர். 6 பேர் மீது ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் இப்போது ஜெயிலில் இருக்கிறார். ஈசிஆர் எதிரே பள்ளிவாசல் இருக்கிறது. அங்குள்ள சிறுபான்மையினர், பள்ளிவாசலுக்கு எதிரே பாஜக கொடி இருப்பதா என முறையிட்டதாக காரணம் சொல்கின்றனர். ஆனால், பள்ளிவாசலுக்கு எதிரிலேயே திமுக, எஸ்.டி.பி.ஐ கொடிகளும் இருக்கின்றன. அவற்றை ஏன் அகற்றவில்லை.
திமுக மற்றும் மற்ற கட்சி கொடிகள் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கின்றன. ஆனால், பாஜகவின் கொடிக்கம்பம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வீட்டை ஒட்டியே இருக்கிறது. பிறகு ஏன் அதை மட்டும் அகற்ற வேண்டும்? பாஜகவினர் 120 பேர் கைது செய்யப்பட்டு மொத்தமாக அடைக்கப்பட்டனர். அவர்களில் 19 பேர் பேர் பெண்கள். அவர்களுக்கு கழிவறை வசதி கூட இல்லை. உணவு வழங்கவில்லை. எந்த உதவியும் செய்யவில்லை. இதை பொறுக்கவே முடியாது.
மேலும், சம்பவ இடத்திற்கு உடனடியாக கமிஷனர் வந்துள்ளார். கமிஷனர் வரும் அளவுக்கு இது பெரிய பிரச்சனை கிடையாது. ஆனால், அவர் வந்ததுமே, என்ன ஏதென்று கூட கேட்காமல் "அரெஸ்ட் பண்ணுங்க.. லத்தி சார்ஜ் பண்ணுங்க.. தூக்கி பஸ்ஸுக்குள்ள போடுங்க" என்றுதான் கூறினார். கமிஷனர் வந்ததுமே சொன்ன வார்த்தைகள் இவைதான். காவல்துறை அப்பட்டமாக திமுகவின் தொண்டர்களைப் போல செயல்படும் நிலைமை தமிழ்நாட்டில் இருக்கிறது.
இந்த 2 ஆண்டுகளில் பாஜக தொண்டர்களுக்கு எதிராக 409 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுபற்றி ஆய்வு செய்துள்ளோம். இது தொடர்பான ரிப்போர்ட்டை தேசிய தலைவர் ஜேபி நட்டாவுக்கு அளிப்போம். ஆளுநரை சந்தித்து புகார் மனுவை அளித்து, நிலையை பற்றி எடுத்துரைத்தோம். ஸ்டாலின், திமுகவுக்கு மட்டுமே முதலமைச்சராகச் செயல்படுகிறார். தமிழ்நாட்டு மக்களுக்கு முதல்வராகச் செயல்படவில்லை, மற்ற கட்சியினரை பாதுகாக்க நினைக்கவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications