அமெரிக்க "ட்ரிப்".. திரும்பி வந்ததும் மக்கள் மன்றத்தை கலைத்த ரஜினி.. என்ன நடந்தது? பின்னணி
சென்னை: அமெரிக்காவிற்கு மருத்துவ சிகிச்சைக்காக சென்று திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது அரசியல் என்ட்ரி, அண்ணாத்த படம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இது போக வேறு 2 விஷயங்கள் குறித்தும் இதில் ஆலோசனை செய்யப்பட்டது. இந்த ஆலோசனைக்கு பின்பே மக்கள் மன்றம் கலைக்கப்பட்டுள்ளது.
Recommended Video
நடிகர் ரஜினிகாந்த் ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவிற்கு சிகிச்சை மற்றும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள செல்வது வழக்கம். எல்லா வருடமும் மே - ஜூன் மாதங்களில் இவர் சிகிச்சைக்காக செல்வது வழக்கம்.
இந்த வருடம் அண்ணாத்த படப்பிடிப்பை முடித்துவிட்டு ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றார். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை சென்னை வந்த ரஜினிகாந்த் இன்று கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்தார்.

கேள்விகள்
ரஜினிகாந்த் இந்த சந்திப்பில் தனது தொடங்கப்படாத அரசியல் பயணம் குறித்தும், அண்ணாத்த சினிமா, விநியோகம், அடுத்தகட்ட சினிமா பிளான்கள் குறித்தும் பேசினார். நடிகர் ரஜினிகாந்த் இன்று ஆலோசனைக்கு முன் அளித்த பேட்டியிலும் கூட, அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என்பது குறித்தும் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு முடிவெடுக்கப்படும்.

பணி என்ன
மக்கள் மன்றத்தைத் தொடரலாமா? அதனுடைய வேலை என்ன? என்பது குறித்து இதில் ஆலோசிக்கப்படும் என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் ரஜினிகாந்த் 2 முக்கியமான விஷயங்களை ரசிகர்களிடம் பேசி இருக்கிறார். முதல் விஷயம், ரசிகர்களிடம் ரஜினி தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். அரசியலுக்கு வருவதாக கூறிவிட்டு, கடைசி கட்டத்தில் ரஜினிகாந்த் விலகினார்.

விலகல்
ரசிகர்களுடன் ஆலோசனை செய்துவிட்டு விலகி இருந்தாலும் கூட பெரிய அளவில் ரசிகர்கள் இந்த முடிவை விரும்பவில்லை. முக்கியமாக மக்கள் மன்ற நிர்வாகிகள் தேர்தலில் ரஜினி நிற்பார் என்று ஆசையாக இருந்துவிட்டு கடைசியில் ஏமாந்து போனார்கள். ஒரே ஒரு பிரஸ் மீட்டில் ரஜினிகாந்த் மொத்தமாக நிர்வாகிகளின் கனவை சுக்குநூறாக உடைத்தார். இந்த நிலையில் ரஜினிகாந்த் தனது முடிவு குறித்து இன்று விளக்கம் அளித்தார்.

உணர்வுபூர்வம்
தனது ரசிகர்களிடம் மீண்டும் நெருக்கமாகும் வகையிலும், அதிருப்தியில் இருப்பவர்களை சமாதானம் செய்யும் வகையிலும் உணர்வுபூர்வமாக இன்று ரஜினி பேசியதாக கூறப்படுகிறது. இந்த விளக்கத்திற்கு தான் கடமைப்பட்டு இருப்பதாக ரஜினி நினைத்தால், மீட்டிங்கில் அது குறித்து பேசினார். அதோடு தன்னுடைய உடல்நிலை குறித்து கவலையில் உள்ள ரசிகர்களுக்கும் ரஜினிகாந்த் சில பர்சனல் தகவல்களை பகிர்ந்துள்ளார். இதெல்லாம் போக இரண்டாவது விஷயம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

வர மாட்டார்
ரஜினி அரசியலுக்கு வரவில்லை, இனி வரவும் வாய்ப்பு இல்லை. ரஜினி இந்த வாரமே இளம் இயக்குனர் ஒருவருடன் அடுத்த படத்திற்கு கையெழுத்து போட உள்ளார். இதனால் மக்கள் மன்றம் இனியும் நீடிக்க வேண்டுமா, அதை கலைத்துவிட்டு "ரசிகர்" மன்றம் மட்டுமே தொடர்ந்தால் என்ன என்ற ரசிகர்களிடம் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

கலைக்க முடிவு
இதனால் மக்கள் மன்றம் தொடர வேண்டுமா அல்லது மொத்தமாக கலைத்து விடலாமா என்று இன்று ஆலோசனை கேள்வி எழுப்பி உள்ளார். இதை கேட்ட மக்கள் மன்ற நிர்வாகிகள் பெரிதாக அதிர்ச்சி அடையவில்லை என்று கூறப்படுகிறது. மக்கள் மன்றம் ஏற்கனவே கலைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே இன்று ரஜினியும் பேசியதால், மக்கள் மன்றத்தை கலைக்க நிர்வாகிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஒப்புக்கொண்டனர்
எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் நிர்வாகிகள் கிரீன் சிக்னல் கொடுத்துள்ளனர். மக்கள் மன்ற மூத்த நிர்வாகிகள் பலர் தேர்தலுக்கு முன்பே நீக்கப்பட்டுவிட்டனர். இப்போது இருக்கும் பலர் புது நிர்வாகிகள் என்பதால் இந்த மன்றம் நீடிப்பதை ரஜினி பெரிதாக விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்தே தற்போது மக்கள் மன்றம் கலைக்கப்பட்டு, ரசிகர் மன்றம் மட்டும் தொடரும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications