கேரளாவுக்கு ரூ. 25 லட்சம்; தமிழ்நாட்டுக்குப் பூஜ்ஜியம்! - கமல்;ரஜினி வெள்ள நிவாரண அரசியல்
சென்னை: 'மிக்ஜாம்' வெள்ள நிவாரணத்திலிருந்து சென்னை மக்களை மீட்பதற்காக சினிமா நடிகர்கள் சிலர் அமைச்சர் உதயநிதியைச் சந்தித்து நிதி அளித்து வருகின்றனர்.
கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி சென்னையை மிக்ஜாம் புயல் தாக்கியது. அப்போது மணிக்கு சுமார் 80 முதல் 90 கி.மீ வேகத்துடன் காற்று வீசியது. இந்த மிக்ஜாம் புயலின்போது பெய்த மழையின் அளவு கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவு மிகப் பெரிய அளவில் மழைபெய்துள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.

ஆனால், கடந்த 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2023இல் பெய்த மழையின் அளவு குறைவு என்று அதிமுகவினர் தொடர்ந்து கருத்து கூறி வருகின்றனர்.
மழையின் பாதிப்பை எப்படிச் சரி செய்யலாம் என்பதில் அக்கறைகாட்டுவதைவிட, அதை வைத்து அரசியல் செய்யவே பலரும் முயன்று வருகின்றனர். இதனால், சென்னை மக்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மக்களின் நிலையை அறிந்து சினிமா நட்சத்திரங்கள் பலரும் அமைச்சர் உதயநிதியைச் சந்தித்து தங்களால் முடிந்த தொகையைக் காசோலையாக அளித்து வருகின்றனர். மற்றும் சில தனியார் நிறுவனங்களும் நிதியை அளித்து வருகின்றனர்.

நடிகர் வடிவேலும் கடந்த 15 ஆம் தேதி அமைச்சர் உதயநிதியைச் சந்தித்து நிவாரண நிதிக்கான காசோலையை உதயநிதியிடம் வழங்கினார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் உதயநிதி, "மிக்ஜாம் புயல் மற்றும் கன மழையால் ஏற்பட்ட பாதிப்பைச் சீரமைக்க, கழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
இந்தச் சூழலில், அரசின் மீட்பு - நிவாரணப் பணிகளுக்கு உதவிடும் வகையில், 'முதலமைச்சரின் பொது நிவாரண நிதி'-க்கு திரைக்கலைஞர் அண்ணன் வடிவேலு அவர்கள் ரூ.6 லட்சத்துக்கான காசோலையை இன்று நம்மிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும்" என்று தெரிவித்துள்ளார்.
இவரைப் போலவே நடிகர் சூரியும் அமைச்சரிடம் நிவாரண நிதிக்கான காசோலையைக் கடந்த 14 ஆம் தேதி வழங்கி இருக்கிறார். அது குறித்து உதயநிதி, "நடிகர் சூரி மதுரை அம்மன் உணவகம் சார்பில் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வெள்ள நிவாரணப் பணிகளுக்காக 'தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி'-க்கு நம்மிடம் வழங்கினார்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மிக்ஜாம் புயல் வெள்ளத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட நடிகர் விஷ்ணு விஷால். அவரது வீடும் வெள்ளத்தில் மூழ்கியது. அவர் வீட்டுக்கு விருந்தினராக வந்திருந்த பாலிவுட் நடிகர் அமீர்கான் கூட மழை வெள்ளத்தில் சிக்கினார். ஆனால், தனது துயரத்தைக் கடந்து விஷ்ணு விஷால் ரூ 10 லட்சத்திற்கான காசோலையை உதயநிதியைச் சந்தித்துக் கடந்த 12 ஆம் தேதி வழங்கினார்.
திரைத்துறையினர் பலரும் உதயநிதியைச் சந்தித்து வெள்ள நிவாரண மீட்புப் பணிகளுக்காக நிதியை அளித்து வரும்போது நடிகரும் இயக்குநருமான அமீர், நேரடியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து ரூ.10 லட்சத்திற்கான காசோலையைக் கடந்த 15 ஆம் தேதி வழங்கி இருக்கிறார்.
அது குறித்த புகைப்படத்தை முதல்வர் ஸ்டாலின் அவரது எக்ஸ் தளத்தில்கூட பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

சினிமா துறையினர் மத்தியில் முதல் வரிசையில் நின்றவர்கள் கார்த்தியும் சூர்யாவும்தான். அண்ணனும் தம்பியும் சேர்ந்து அரசுக்கு ரூ10 லட்சம் நிதி உதவி அறிவித்தனர்.
அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன். அவர் கடந்த 10 ஆம் தேதியே உதயநிதியைச் சந்தித்து ரூ.10 லட்சத்துக்கான காசோலையை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காகக் காசோலையை வழங்கினார்.
இவர்களைவிட எல்லாம் சின்ன நடிகர் கேபிஒய் பாலா, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாகவே சென்று உதவினார். அதற்கான புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வெளியானபோது பலரும் அவரது சேவையைப் பாராட்டிப் பதிவுகளை வெளியிட்டனர்.
ஆனால், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் இந்த மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரணத்திற்காக இதுவரை நிதியளிக்க முன்வர வில்லை.

இந்தப் பெரிய நடிகர்களைப் போலவே அடுத்த வரிசையில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவரும் நிவாரணத்திற்கு நிதியளிக்கவில்லை.
ஒரு அரசியல் கட்சியின் தலைவராக உள்ள கமல்ஹாசன் மக்கள் படும் கஷ்டத்திற்கு தன்னால் இயன்ற உதவியைச் செய்ய முன்வராமல் வெறுமனே வந்து வெள்ளச்சேதத்தைப் பார்வையிட்டுச் செல்வது எந்தவகையில் நியாயம் என்கிறார்கள் திரைத்துறையைச் சேர்ந்த பலர்.
"மிக்ஜாம் புயல் சென்னையைத் தாக்கி 2 வாரங்களுக்கு மேல் ஆகப் போகிறது. ஆனால், மக்களின் கண்ணீரைத் துடைக்க இந்த 4 முன்னணி நடிகர்களும் களத்திற்கு வரவே இல்லை. இவர்கள் நாளை அரசியலுக்கு வந்தால் என்ன செய்துவிடுவார்கள்" எனக் கேள்வி எழுப்புகிறது கோடம்பாக்க வட்டாரம்.

இவர்கள் சொல்வதைப் போன்று கமல்ஹாசன் இரண்டு வாரம் கழித்துத்தான் எண்ணூர் எண்ணெய் கசிவை நேரடியாக ஆய்வு செய்யச் சென்றார். அப்போது அவர் அங்குள்ள அவலநிலையைப் பார்த்து நிதியுதவி செய்ய முன்வரவில்லை.
ஆனால், கமல்ஹாசன் கேரளாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெள்ளம் ஏற்பட்டபோது வெள்ள நிவாரண நிதியாக 25 லட்சம் ரூபாய் வாரி வழங்கினார். அந்தத் தொகை போதாது பலரும் மேலும் ரசிகர்கள் அதிக நிதி வழங்க முன்வர வேண்டும் என்றும் பேசினார்.

அதே 2015 ஆம் ஆண்டு சென்னை வெள்ளத்தில் தத்தளித்தபோது அவர் நிதி வழங்கவில்லை. அப்போது செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, "நான் வருமான வரி செலுத்தவில்லையா? மக்கள் செலுத்தும் வரிப்பணம் எல்லாம் என்ன ஆனது?" என்று எதிர்க் கேள்வி எழுப்பினார்.
அப்போது அவர் இரட்டை வேடம் போடுவதாகச் சர்ச்சைகள் எழுந்தன. அதைப்போன்றே இதுவரை மிக்ஜாம் புயலால் தமிழ்நாட்டின் தலைநகர மக்கள் தத்தளிக்கும் போது ஒரு ரூபாய் கூட இதுவரை அவர் நிதி வழங்க முன்வரவில்லை. அவரைப் போலவே உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்தும் அமைதி காத்து வருகிறார்.

விரைவில் அரசியல் அவதாரம் எடுப்பார் என எதிர்பார்க்கப்படும் நடிகர் விஜய்கூட இதுவரை நிதி அளிக்கவில்லை. அவரது ரசிகர்களை உதவும்படி வேண்டுகோளை மட்டும் வெளியிட்டார். அதில், 'கைகோர்ப்போம் துயர் துடைப்போம்' என்றார்.
அவரது பேச்சைக் கேட்டு ரசிகர்கள் சிலர் விஜய் புகைப்படத்தை கைகளில் பிடித்தபடி உதவிகளைச் செய்த புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளத்தில் வெளியாகி, பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.

"தமிழ் ரசிகர்களிடம் இருந்து பல கோடிகளைச் சம்பாதிக்கும் இந்த முன்னணி நட்சத்திரங்கள், இந்தப் பேரிடர் காலத்தில்கூட உதவ முன்வரவில்லை என்பதற்குப் பின்னால் ஏதோ ஒரு அரசியல் ஒளிந்திருக்கிறது" என்கிறார் பழம்பெரும் தயாரிப்பாளர் ஒருவர்.












Click it and Unblock the Notifications