பூனைக்குட்டி வெளியே வந்தது.. சசிகலா ஒதுங்க காரணமே பாஜகவா.. நக்கீரன் வெளியிட்ட பரபர சர்வே
சசிகலா அரசியலை விட்டு ஒதுங்க காரணம் என்ன என்று நக்கீரன் சர்வே எடுத்துள்ளது
சென்னை: சசிகலா மீண்டும் புலியென பாய்வார்.. மீண்டும் அரசியலுக்கு வருவார். நிச்சயம் அதிமுகவைக் கைப்பற்றுவார். அவர் அரசியலை விட்டு ஒதுங்க பாஜகவின் நிர்ப்பந்தமே முழுக் காரணம் என்று நக்கீரன் நடத்திய சர்வேயில் அதன் வாசகர்கள் தெரிவித்துள்ளனர்.
நக்கீரன் இதழ் சட்டசபைத் தேர்தலையொட்டி பல்வேறு சர்வேயை நடத்தி வருகிறது. தற்போது சசிகலாவை வைத்து ஒரு சர்வேயை நடத்தியுள்ளது. இதன் முடிவுகள் அதிரடியாக உள்ளன.
சசிகலாவை ஒரு ஆளுமையாக மக்கள் பார்ப்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது. மேலும் அவர் அரசியலுக்கு மீண்டும் வருவார், அதிமுகவை தன் வயப்படுத்துவார் என்றும் மக்கள் நம்புகின்றனராம்.

நக்கீரன்
இதுதொடர்பாக நக்கீரன் சர்வேயில் கொடுக்கப்பட்டுள்ள விவரம் பின்வருமாறு: நான் அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன்' என சசிகலா அறிவித்தாலும், அவர் உண்மையிலேயே ஒதுங்குகிறாரா? அல்லது பாய்வதற்காகப் பதுங்குகிறாரா? என்பது புரியாமல் இருக்கிறார்கள் தமிழக மக்கள். "30 ஆண்டுகள் ஜெ.வின் நிழலாக இருந்து அரசியலில் ஆதிக்கம் செலுத்திய சசிகலாவின் அரசியல் துறவறம் பற்றி தமிழக மக்கள் என்ன நினைக்கிறார்கள்' என ஒரு பெரிய கருத்துக் கணிப்பைத் தமிழகம் முழுவதும் நக்கீரன் நடத்தியது.

லாபம்?
சசிகலா ஒதுங்கியது ஏன்? சசிகலா மீண்டும் அரசியலுக்கு வருவாரா? மீண்டும் வந்தால் அ.தி.மு.க.வை வசப்படுத்துவாரா? சசிகலா ஒதுங்கியதால் யாருக்கு லாபம்? சசிகலாவின் அரசியல் துறவு என்ன பாதிப்பை ஏற்படுத்தும்? என ஐந்துவிதமான கேள்விகளுடன் தமிழக மக்களின் மனதை படம்பிடித்தோம். "சசிகலா ஒரு நிழலுலக ஆளுமை தான். மேலோட்டமாகப் பார்த்தால் தமிழகத்தை கொள்ளையடித்த மன்னார்குடி மாஃபியாவின் தலைவி என்பதோடு கடந்து போய்விடும்.

அதிமுக
ஆழமாகச் சிந்தித்தால் ஜெயலலிதாவிற்காகவும் அ.தி.மு.க.விற்காகவும் தனது இளமைக்கால சுக துக்கத்தை துறந்து கணவனைக் கூடப் பிரிந்து துறவற வாழ்க்கையை வாழ்ந்தவர். "கடைசியாக ஜெ.வுடன் சேர்ந்து செய்த குற்றத்திற்காக நான்காண்டு சிறைத் தண்டனை அனுபவித்துவிட்டு வந்தவர். திடீரென அரசியலில் இருந்து துறவறம் பெற்று ஒதுங்கிவிட... அவர் சாதாரணமான ஆளுமை இல்லை, அவர் பிரம்மாண்டம்'' என்கிறார் திருவிடைமருதூர் ஜெய்சங்கர்.

காரியம்
"எங்க கிராமங்களில் ஒருசிலரை அவங்க வயனமிருக்காங்கன்னு சொல்லுவாங்க... எதுக்கு தெரியுமா?
ஒரு காரியத்தை நெனைச்சா அதைச் செய்து முடிக்கிறதுக்குத் தேவையான சக்தியைப் பெற அமைதியாக இருப்பதற்கு அர்த்தம்தான் வயனம் காப்பாத்துறது. அதுபோல யானை தனது கோவத்தைக் கடவாயில் ஒதுக்கிவச்சிருக்கும். சமயம் வரும்போது பழி தீர்த்திரும். அது போல சசிகலாவின் அரசியல் துறவறம்'' என்கிறார்கள் நெல்லை, தூத்துக்குடி மக்கள்.

பாஜக
சசிகலா ஏன் அரசியலை விட்டு ஒதுங்கினார் என்ற கேள்விக்கு எல்லோரும் பாஜகவைக் கை காட்டியுள்ளனர். இது ஆச்சரியமாக இருக்கிறது. பாஜகவின் நிர்ப்பந்தமே சசிகலா அரசியலை விட்டு ஒதுங்க முக்கியக் காரணம் என்று 30 சதவீதம் பேர் சொல்லியுள்ளனர். முதல்வர் எடப்பாடியார் காட்டிய பிடிவாதம் காரணம் என சொல்லியிருப்போர் 26 சதவீதம் பேர் ஆவர்.

தினகரன்
அவராகவே அதாவது சுய விருப்பத்தின் பேரில் ஒதுங்கியிருப்பதாக 18 சதவீதம் பேரும், என்னன்னு தெரியலை என்று 15 சதவீதம் பேரும் கருத்து கூறி உள்ளனர். அதேசமயம், தினகரன் போக்கு பிடிக்காமல், அவரது அடாவடி செயல்களே காரணம் என்றும் கணிசமான அளவிலான பேர் கருத்து சொல்லியுள்ளனர். அதாவது 11 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications