அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம் ஏன்? ஆளுநர் ஆர்என் ரவி சொல்லும் காரணம் இதுதான்!
சென்னை: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் தமிழ்நாடு அமைச்சரவையில் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்ந்தார். இந்நிலையில் தான் திடீரென்று அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்துள்ள ஆளுநர் ஆர்என் ரவி அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இந்நிலையில் தான் அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறையில் வேலை தருவதாக கூறி லஞ்சம் பெற்றதாக செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக விசாரணை நடத்திய அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியை அதிரடியாக கைது செய்தனர். இதையடுத்து நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு சென்னை காவேரி மருத்துவமனையில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
தற்போது அவர் மருத்துவமனையில் நீதிமன்ற காவலில் உள்ளார். இதற்கிடையே தான் செந்தில் பாலாஜி வசம் இருந்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமிக்கும் வழங்க முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்என் ரவிக்கு பரிந்துரைத்தார். இதற்கு அவர் ஒப்புதல் வழங்கினார்.
இருப்பினும் செந்தில் பாலாஜியை துறைகள் இல்லாத அமைச்சராக தொடர முதல்வர் ஸ்டாலின் பரிந்துரைத்ததை ஆளுநர் ஆர்என் ரவி ஏற்கவில்லை. இருப்பினும் அரசாணை மூலம் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பார் என தமிழக அரசு அதிரடியாக அறிவித்தது.
இந்நிலையில் தான் ஆளுநர் ஆர்என் ரவி இன்று அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்குவதாக அறிவித்துள்ளார். இது தமிழக அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு ராஜ்பவன் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
‛‛வேலைக்கு பணம் வாங்கியது மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் உள்பட பல்வேறு சீரியஸான கிரிமினல் வழக்குகளை அமைச்சர் செந்தில் பாலாஜி எதிர்கொண்டுள்ளார். இத்தகைய சூழலில் அவர் அமைச்சராக இருந்தால் தனது செல்வாக்கை பயன்படுத்தி சட்டம் மற்றும் நீதிக்கான விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படலாம்.
மேலும் தற்போது அவர் அமலாக்கத்துறையின் வழக்கில் நீதிமன்ற காவலில் உள்ளார். அவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் மாநில போலீசார் வசம் சில கிரிமினல் வழக்குகள் உள்ளன. இத்தகைய சூழலில் அமைச்சரவையில் செந்தில் பாலாஜி தொடர்வது என்பது அரசியலமைப்பு சட்டத்தின் செயல்முறையை மோசமாக பாதிப்பதற்கான அச்சம் உள்ளது. இதனால் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக ஆளுநர் ஆர்என் ரவி டிஸ்மிஸ் (நீக்கம்) செய்துள்ளார்'' என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications