செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதி திடீரென விலகியது ஏன்? இனி என்ன நடக்கும்? வழக்கறிஞர் தமிழ்மணி பேட்டி
சென்னை: செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதி திடீரென விலகியது ஏன் என்பது குறித்து வழக்கறிஞர் தமிழ்மணி பிரபல ஊடகம் ஒன்றுக்கு பதில் அளித்துள்ளார்.
சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கப் பிரிவினரால், நேற்றிரவு கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தனது கணவரை அமலாக்கப் பிரிவினர் சட்டவிரோத காவலில் வைத்துள்ளதாகவும், அவரை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் திமுக எம்.பி.யும், மூத்த வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சுந்தர் மற்றும் சக்திவேல் அமர்வில் முறையிட்டார்.
அப்போது அவர், நேற்று காலை 7 மணி முதல் அமலாக்கப்பிரிவினர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தியுள்ளனர் எனவும், விசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்பு அளித்த நிலையில், சட்டவிரோதமாக காவலில் வைத்திருப்பதாக தெரிவித்தார்.
கைது செய்த போது உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும், கைது குறித்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என குற்றம் சாட்டிய அவர், இந்த வழக்கை அவசர வழக்காக இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இந்த முறையீட்டை கேட்ட நீதிபதிகள், மனுவுக்கு எண்ணிடப்பட்ட விஷயத்தை, நீதிமன்றத்தில் தெரிவித்தால், வழக்கு பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவித்து இருந்தனர். இந்த வழக்கை விசாரிக்க நீதிபதி சுந்தர், நீதிபதி சக்திவேல் ஆகிய இரு நீதிபதிகள் அமர்வு அமைக்கப்பட்டிருந்தது. அந்த அமர்வில் இருந்த நீதிபதி சக்திவேல் வழக்கில் இருந்து விலகிவிட்டார். இதையடுத்து மீண்டும் தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டு வேறு நீதிபதிகள் கொண்ட அமர்வில் பட்டியலிடப்படும்.
இந்த சூழலில் வழக்கறிஞர் தமிழ்மணி ஊடகம் ஒன்றுக்கு செந்தில் பாலாஜி வழக்கு குறித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், நீதிபதிகள் விலகல் என்பது வெகு சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. உச்ச நீதிமன்றத்திலேயே 10முறை நடந்திருக்கிறது. உயர்நீதிமன்றத்தில் எண்ணிலடங்கா அளவுக்கு நடந்திருக்கிறது. ஏதோ ஒரு விதத்தில் அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபரோடு ஏதோ ஒரு காலத்தில் எப்படியோ ஒரு தொடர்பு இருந்திருக்கலாம். எனவே தான் கேட்கக்கூடாது என்று விலகிக்கொள்வது மரபு. அதை ஒரு நீதிபதி செய்திருக்கிறார். இது தவறல்ல..
அனேகமாக அவரது உடல் நிலை காரணமாக இன்னொரு நீதிபதியை அமர வைத்துவிடுவார்கள். இதில் நீதிபதி சுந்தர் அவர்கள் தான் சீனியர். இன்னொரு நீதிபதியை அவருடன் அமர வைப்பது என்பது கடினமான செயல் அல்ல.. ஒரு அரை மணிநேரம் ஆகலாம்... தலைமை நீதிபதி புதிய நீதிபதியை அமர வைத்துவிடுவார். இன்னொரு நீதிபதியை அமர வைப்பது எளிது. செந்தில் பாலாஜிக்கு உடல் நிலை சரியில்லை என்பது கிட்டத்தட்ட நிரூபணம் ஆகிவிட்டது. எனக்கு தெரிந்தவரை, அவருக்கு எல்லாவிதமான சிகிச்சையும் அளிக்க உத்தரவிடுவதற்கு வாய்ப்பு இருக்கிறதே தவிர, அதேநேரம் அவரை கைது செய்தது தவறு என்று சொல்வதற்கு வாய்ப்பு இல்லை என்றே கருதுகிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications