ஆர்என் ரவியை விமர்சித்த சுகி சிவம்.. திருவள்ளுவருக்கு ஏன் காவி போடக்கூடாது? விளக்கம் தந்து விளாசல்
சென்னை: ‛‛ஆளுநர் ஆர்என் ரவி அசட்டுத்தனங்களை பண்ணுகிறார். அவருக்கு தமிழ் பற்றி தெரியுமா? எல்லை மீறி பேசுவதால் நான் சாடை மாடையாக அவரை குத்திப்பேசுகிறேன்'' என கூறியுள்ள பேச்சாளர் சுகி சிவம், திருவள்ளுவருக்கு காவி உடை ஏன் அணிவிக்க கூடாது என்பது பற்றி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக ஆளுநராக ஆர்என் ரவி செயல்பட்டு வருகிறார். இவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த வேளையில் சனாதன தர்மம் பற்றி அவர் பேசி வருகிறார். மேலும் திருவள்ளுவர் பற்றி அவர் கூறும் கருத்துகள் அவ்வப்போது விவாதத்தை கிளப்பி வருகின்றன.

சமீபத்தில் ஆளுநர் மாளிகை சார்பில் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது. இதற்கான அழைப்பிதழில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும் ஆளுநர் மாளிகை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‛‛திருவள்ளுவர் தினத்தில், ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையைச் செலுத்துகிறேன் என ஆர்என் ரவி தெரிவித்ததாக கூறப்பட்டு இருந்தது. இதுவும் விவாதத்தை கிளப்பியது.
இந்நிலையில் தான் தனியார் யூடியூப் சேனலுக்கு பேச்சாளர் சுகி சிவம் அளித்த பேட்டியில் திருவள்ளுவருக்கு ஆளுநர் ஆர்என் ரவி காவி உடை அணிவித்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ‛சொல் வேந்தர்' என்று அழைக்கப்படும் சுகி சிவம் இந்து சமயச் சொற்பொழிவாளராகவும், எழுத்தாளராகவும் உள்ள நிலையில் திருவள்ளுவருக்கு ஏன் காவி உடை அணிவிக்க கூடாது? என்பது பற்றியும் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக சுகி சிவம் கூறியதாவது:
கவர்னர் சில அசட்டுத்தனங்களை பண்ணுகிறார். அதை நான் சுட்டிக்காட்டுகிறேன். திருவள்ளுவருக்கு காவி போடக்கூடாது. அவர் ஒரு இல்லறத்தான். இல்லறத்தானுக்கு எப்படி காவி உடை போட முடியும்?. தனக்கு தோன்றுவதை அவர் (ஆளுநர் ஆர்என் ரவி) செய்கிறார். அவருக்கு தமிழ் பற்றி தெரியுமா?. ஒப்பிலக்கணம் பற்றி பேசலாமா?. கால்டுவெல் ஒப்பிலக்கணம் பற்றி ரவிக்கு தெரியுமா?. அவர் எல்லை மீறி பேசுகிறார். அதனால் சாடை மாடையாக நான் அவரை குத்திப்பேசுகிறேன்.

இந்த வேளையில் தொகுப்பாளர், ‛‛நீங்கள் திருவள்ளுவருக்கு வெள்ளை உடை போட்டு அழகு பார்க்கிறீர்கள். அவர் காவி உடை போட்டு அழகு பார்க்கிறார்'' என்று கூறினார். அதற்கு சுகி சிவம், ‛‛தவறு சார். அவங்க அவங்களுக்கு ஒரு மரியாதை உள்ளது. அவர் (திருவள்ளுவர்) இல்லறத்தான். துறவு பெற்ற பிறகு தான் காவி வாங்க வேண்டும். இந்து மத மரபையே அவர் (ஆர்என் ரவி) மாற்றுகிறார். திருவள்ளுவர் சன்னியாசம் வாங்கியதாக எங்கேயாவது குறிப்பு உள்ளதா?'' என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு தொகுப்பாளர், ‛‛திருவள்ளுவர் வெள்ளை உடை அணிந்தார் என்று குறிப்பு உள்ளதா?'' என கேள்வி எழுப்பினார். அதற்கு சுகி சிவம், ‛‛திருவள்ளுவர் இல்லறத்தில் இருந்துள்ளார். அவரது கொள்கை என்பது ‛அறம் எனப்பட்டதே இல்வாழ்க்கை'.
திருவள்ளுவர் இல்வாழ்க்கையை ஒப்புக்கொள்வர். துறவை ஒப்புக்கொள்பவர் இல்லை. துறவை ஏற்றுக்கொண்டவர் என்றால் காமத்துப்பால் பாடியிருப்பாரா?. திருவள்ளுவர் மதம் கடந்தவர். எல்லா மதத்துக்கும் போய் மதம் கடந்த ஆன்மிகவாதியாக உள்ளார். மேலே சென்ற மனிதனை பிடித்து கீழே இழுத்து ஒரு மதத்துக்குள் ஏன் கொண்டு வறீங்க?'' என விளாசினார்.












Click it and Unblock the Notifications