சமூக நீதிக்கு எதிரானது.. நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்ப ஆளுநர் ரவி சொன்ன காரணம் என்ன தெரியுமா?
சென்னை: தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர். என் ரவி திருப்பி அனுப்பி உள்ளார். இதற்கான காரணத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராக குரல்கள் மீண்டும் கடுமையாக வைக்கப்பட்டு வருகிறது. நேற்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தொடங்கி திமுக எம்பி டி ஆர் பாலு வரை நாடாளுமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக பேசினார்கள்.
நீட் தேர்வில் விலக்கு பெற வேண்டும் என்பதற்காக 10 நாட்களுக்கும் மேலாக காத்திருந்து திமுக எம்பி டி ஆர் பாலு உள்ளிட்ட தமிழ்நாடு எம்பிக்கள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தனர். நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு கொண்டு வந்த மசோதாவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வந்தனர் .

கோரிக்கை
நீட் தேர்வுக்கு எதிராக மாநில அரசு மசோதா இயற்றி உள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அவையில் இது தொடர்பான சட்ட மசோதாவை தாக்கல் செய்தார். கடந்த செப்டம்பரில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அதன்பின் ஆளுநர் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. மசோதா தாக்கல் செய்யப்பட்டு சரியாக 4 மாதங்கள் அது கிடப்பில் போடப்பட்டது.

மறுப்பு
இதையடுத்தே நீட் மசோதாவை ஏற்க வேண்டும். இதற்கு ஒப்புதல் அளித்து உடனே குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டன. ஆனால் ஆளுநர் மசோதாவை ஏற்கவில்லை. மாறாக சமீபத்தில் நீட் தேர்வுக்கு ஆதரவாகவும் பேசி இருந்தார். தமிழ்நாடு ஆளுநர் குடியரசு தினவிழாவையொட்டி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் நீட் குறித்தும், இந்தி மொழி குறித்தும் பேசி இருந்தார். மற்ற மாநில மாணவர்களை போல தமிழ்நாடு மாணவர்களும் பிற மொழிகளை கற்க வேண்டும். நீட் தேர்வு மூலம் தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை உயர்ந்துள்ளது என்று ஆளுநர் ஆர். என் ரவி குறிப்பிட்டார்.

நீட் மசோதா
தமிழ்நாட்டில் நீட் எதிர்ப்பு, இந்தி திணிப்பு எதிர்ப்பும் கடுமையாக நிலவி வரும் நிலையில் ஆளுநர் ஆர். என் ரவி இப்படி பேசியது பெரிய அளவில் சர்ச்சையானது. இதனால் தமிழ்நாடு அரசின் நீட் மசோதாவை அவர் ஏற்க மாட்டார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில்தான் தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர். என் ரவி திருப்பி அனுப்பி உள்ளார். இதற்கான காரணத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார். நீட் மசோதாவை தமிழக சபாநாயகருக்கே திருப்பியனுப்பி உள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

விளக்கம்
பிப்ரவரி 1ம் தேதியே தமிழக அரசுக்கு விளக்கம் அளித்துவிட்டதாக ஆளுநர் குறிப்பில் தகவல் வெளியிட்டு இருக்கிறார். இதற்கு இரண்டு விதமான காரணங்களை ஆளுநர் ஆர். என் ரவி குறிப்பிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு அரசு அமைத்த நீட் உயர் மட்ட குழு அறிக்கையையும், அதை அடிப்படையாக வைத்து இயற்பட்ட தமிழ்நாடு அரசின் மசோதாவையும் ஆய்வு செய்தேன். நீட் தேர்வுக்கு முந்தைய காலகட்டம், நீட் தேர்வுக்கு பிந்தைய காலகட்டத்தில் மாணவர் சேர்க்கையை ஒப்பிட்டு பார்த்தோம்.

சமூக நீதி
அப்படி பார்க்கையில் இந்த மசோதா சமூக நீதிக்கு எதிரான மசோதாவாக அறியப்படுகிறது. அதிலும் கிராமத்தில் வரும் மாணவர்களுக்கும், பொருளாதார ரீதியாக வசதி குறைந்த மாணவர்களுக்கும் எதிரான மசோதாவாக இது உள்ளது,. அதனால் இந்த மசோதாவை திருப்பி அனுப்புகிறேன். அதேபோல் நீட் மசோதா உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானதாக இருக்கிறது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு
வேலூர் சிஎம்சி கல்லூரி மற்றும் மத்திய அரசு இடையிலான வழக்கில் ஏற்கனவே நீட் தேர்வுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக இந்த மசோதா உள்ளது. அதில் கிராமத்தில் வரும் மாணவர்களுக்கும், பொருளாதார ரீதியாக வசதி குறைந்த மாணவர்களுக்கும் ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மசோதா அந்த தீர்ப்பிற்கு எதிராக உள்ளது. அதனால் இதை திருப்பி அனுப்பி உள்ளோம் என்று ஆளுநர் தனது விளக்கத்தில் குறிப்புட்டுள்ளது. இதையடுத்து தமிழ்நாடு அரசின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications