பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பெயர் திடீரென நீக்கப்பட்டது ஏன்? பின்னணியில் இப்படி ஒரு காரணமா?
சென்னை: பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முதல்வர் ஸ்டாலின் உடன் வெளிநாடு செல்வதால்தான், மதுரையில் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பிடிஆரின் பெயர் இடம் பெறவில்லை என்றும், இதில் வேறு எந்த காரணமும் இல்லை என்றும் திமுகவினர் சிலர் சமூக வலைதளங்களில் கூறி வருகிறார்கள்.
தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நிதி நிபுணராக பல்வேறு வங்கிகளில் பணியாற்றியவர் ஆவார். இவர் தமிழகத்தின் நிதியமைச்சராக பொறுப்பேற்ற போது, பலரும் பாராட்டினார்கள். அதேநேரம் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து புள்ளி விவரங்களோடு கேள்விகளை தொடர்ந்து கேட்டு பாஜகவிற்கு நெருக்கடியும் கொடுத்துள்ளார்.மேலும் ஜிஎஸ்டி வரி பங்கீடு தொடர்பாக மத்திய அரசை பிடிஆர் கடுமையாக கேள்விகளை எழுப்பி வந்தார்.

இந்நிலையில் அண்மையில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக இரண்டு ஆடியோக்கள் அடுத்தடுத்து வெளியானது. முதல் ஆடியோவில் "உதயநிதியும், சபரீசனும் கடந்த 60 ஆண்டுகளில் அவர்களின் தாத்தாக்கள் சம்பாதித்தை விட, இந்த ஒரு வருடத்தில் அதிகமாக சம்பாதித்து விட்டார்கள். ஏறத்தாழ 30 ஆயிரம் கோடி வரை சம்பாதித்துள்ளார்கள். இப்போது அதனை மறைக்க முடியாமல் பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார்கள்," என்று இருந்தது.
இரண்டாவது ஆடியோ பதிவில், "ஒரு நபர் ஒரு பதவி என்ற கொள்கைக்கு நான் அரசியலுக்கு வந்த நாள் முதலே ஆதரவளித்து வருகிறேன். பா.ஜ.கவிடம் எனக்குப் பிடித்த விஷயம் இதுதான். கட்சியையும் மக்களையும் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு பிரிந்திருக்க வேண்டுமல்லவா? எல்லா முடிவுகளையும் அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும்தான் எடுக்கின்றனர். நிதியை மேலாண்மை செய்வது சுலபம். இப்படி ஒரு அமைப்பு இருக்க முடியாது. They are taking the bulk of the spoils. முதல்வரின் மகனும் மருமகனும்தான் கட்சியே. அவர்களை நிதியளிக்கச் சொல்லுங்கள்" என்று இருந்தது.
இந்த ஆடியோக்களில் இரண்டாவது ஆடியோவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலையே நேரடியாக வெளியிட்டார். இந்த ஆடியோ பொய்யானது என்று கீழ்தரமான அரசியல் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமும் அளித்தார். அதன் பின்னர் திமுக தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டது. எனினும் திமுகவின் சொத்துப்பட்டியல் என்று கூறி அண்ணாமலை வெளியிட்ட தகவலுக்காக அவர் மீது வழக்கு தொடரப் போவதாக அறிவித்த அக்கட்சி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் விஷயத்தில் கட்சி சார்பில் வழக்கு தொடுக்கப்படாது என்று நேரடியாகவே அறிவித்தது. திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் இதுதொடர்பாக அளித்த பேட்டியில் பிடிஆரின் சொந்த விஷயம் என்று கூறி முடித்துக் கொண்டார்.
இந்த சூழலில் முதல்வர் ஸ்டாலினும் அண்மையில் வெளியிட்ட வீடியோவில் "இந்த ஆடியோ குறித்து அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஏற்கனவே 2 முறை விளக்கம் அளித்துவிட்டார். இந்த மட்டமான ஆடியோ அரசியல் பற்றி நான் பேச விரும்பவில்லை. மக்களுக்கான பணிகளை செய்யவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது. மட்டமான அரசியல் செய்யும் நபர்களுக்கு நான் விளம்பரம் தேடித்தர விரும்பவில்லை" என்று கூறினார். முதல்வர் ஸ்டாலின் பேச்சு காரணமாக பிடிஆர் ஆடியோ லீக் சர்ச்சை முடிந்துவிட்டதாகவே கருதப்படுகிறது.

இந்த நிலையில் திமுக அரசு பொறுப்பேற்று 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டங்கள் நடத்த திமுக தலைமை உத்தரவிட்டிருந்தது. இதற்காக குறிப்பிட்ட நாட்களை ஒதுக்கி அந்த நாட்களில் தமிழ்நாடு முழுவதும் பொதுக் கூட்டங்கள் நடைபெறும்.3 நாட்களில் மாற்றம்: அதில் சிறப்பு பேச்சாளர்கள் பங்கேற்பார்கள் என அதற்கான பட்டியல் முரசொலி நாளிதலில் கடந்த மே 3 ஆம் தேதி வெளியாகியிருந்தது. அதில் மதுரை மாநகர் சார்பில் காமராஜபுரம் பகுதியில் ஆனந்தன், வில்லாபுரம் பகுதியில் ரகுபதி, சிம்மக்கல் பகுதியிஸல் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், திருப்பரங்குன்றம் வடக்கு ஒன்றியத்தில் வாசு முத்துசாமி ஜீவா நகர் பகுதியில் சரவணன், பெத்தாணியாபுரம் பகுதியில் அப்துல்காதர், அண்ணாநகர் பகுதியில் முகவை க ராமர் உள்ளிட்டோர் பங்கேற்பர் என பெயர்களும் வெளியிடப்பட்டிருந்தன.
இந்த நிலையில் நாளை மாலை சிம்மக்கல் பகுதியில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ஜெயரஞ்சன் அந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்பார் என போஸ்டர்களும், நிகழ்ச்சி நிரலும் அச்சிடப்பட்டுள்ளது. பிடிஆர் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்ட நிலையில் 3 நாட்களில் அவருடைய பெயர் நீக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதில் ஜெயரஞ்சன் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதாம்.
இந்நிலையில் முதலீட்டாளர்களை சந்திக்க தமிழ்நாடு முதலமைச்சரோடு, நிதியமைச்சர் வெளிநாடு செல்கிறாராம். எனவே கூட்டங்களில் அவர் கலந்துக் கொள்ள முடியாது என்றும் அதனால் தான் அவர் பெயர் நீக்கப்பட்டிருக்கலாம் என்று திமுகவினர் சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். இது உண்மை என்பது தெரியவில்லை. முதல்வர் பயணம் மே 23ம் தேதி தான் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிகாரப்பூர்வமாகவும் இதுவரை அறிவிப்பு வெளியாகவிலலை. எனவே இப்போதைய சூழலில் பிடிஆர் பெயர் சேர்க்கப்படாதது சமூக வலைதளங்களில் சலசலப்பையே ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications