ஆர்ஆர்ஆருக்கு போட்டியாக ரரக்கள் போடும் மாஸ் செட்! QR கோட் ரெடி! அதிமுக பொதுக்குழுவில் என்ன நடக்கும்?
சென்னை: அதிமுக பொதுக்குழு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த முறை பொதுக்குழு உறுப்பினர்கள் வருகையை உறுதி செய்ய புதிய விதமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ரெடி.. கேமரா.. ஆக்சன்.. என்று அதிமுக பொதுக்குழு தற்போது ஆக்சன் மோடிற்கு தயாராகிக்கொண்டு இருக்கிறது. உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் நடந்து வந்தாலும்.. முழு நம்பிக்கையோடு அதிமுக பொதுக்குழுவிற்கான ஏற்பாடுகளை எடப்பாடி பழனிசாமி தரப்பு செய்து வருகிறது.
ஜூலை 11.. எனக்குத்தான் வின்னு என்ற நம்பிக்கையோடு எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு வேலைகளை பார்த்து வருகிறார். கடந்த பொதுக்குழுவை விட பெரிதாக இதை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

பிரம்மாண்ட செட்
பிரம்மாண்டமான ஆர்ஆர்ஆர் படத்திற்கே சவால் விடும் வகையில் அதிமுக ரரக்கள் தற்போது செட் போட்டு வருகிறார்கள். அதிமுக பொதுக்குழுவிற்காக 36000 சதுர அடியில் செட் போடப்பட்டு வருகிறது. மேடை 4 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கீழே உறுப்பினர்கள் அமரும் மேடை 2 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. சுற்றி அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டு, மிக பிரம்மாண்டமாக வெள்ளை நிற தோரணம் போடப்பட்டுள்ளது.

அலங்காரம் ரெடி
சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கட் அவுட்கள் வைக்கப்பட்டு பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு மேடைக்கு செல்லும் வழியில் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட உள்ளது. இந்த முறை ஓபிஎஸ் போட்டோ கட் அவுட்டில் இடம்பெறாது என்று கூறப்பட்டுள்ளது. மாறாக எடப்பாடி பழனிசாமி முகம் மட்டும் பெரும்பாலான கட் அவுட்களில் இடம்பெறும் என்கிறார்கள். இதில் பொதுச்செயலாளர் என்ற வாசகமும் இடம்பெற உள்ளதாம்.

கடந்த முறை மோதல்
கடந்த முறை அதிமுக பொதுக்குழுவில் முறைகேடு புகார்கள் வந்தன. அதிமுக பொதுக்குழுவில் இல்லாத உறுப்பினர்கள், கலர் ஜெராக்ஸ் அடித்து பொய்யான அழைப்பிதழுடன் பொதுக்குழுவிற்கு வந்ததாக கூறப்பட்டது. கிட்டத்தட்ட 500க்கும் அதிகமான நிர்வாகிகள் இப்படி பொய்யான கலர் ஜெராக்ஸ் மூலம் பொதுக்குழுவிற்கு வந்ததாக கூறப்படுகிறது. அதில் சிலர் "கலகம்" செய்ய வேண்டும் என்ற திட்டத்தோடு பொதுக்குழுவிற்கு வந்ததாக ஓபிஎஸ் தரப்பு புகார் வைத்தது.

புக்கை காணோம் பாஸ்
அதோடு கடந்த முறை பொதுக்குழுவில் அட்டென்டன்ஸ் காணாமல் போன சம்பவமும் நடந்தது. பொதுக்குழுவிற்கு வரும் பொதுக்குழு உறுப்பினர்கள் வருகை பதிவேட்டில் கையெழுத்து போட வேண்டும். ஆனால் இந்த வருகை பதிவேடு புத்தகம் கடந்த பொதுக்குழுவில் சில மணி நேரங்கள் காணாமல் போனது. இந்த இடைப்பட்ட கேப்பில் பல கருப்பு ஆடுகள் பொதுக்குழுவிற்குள் நுழைந்ததாக புகார் வைக்கப்பட்டது. ஓபிஎஸ் தரப்பு இதற்கு எதிராக போர்கொடியும் தூக்கியது.

QR கோட் ரெடி
இந்த நிலையில்தான் இந்த முறை அது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை மட்டுமின்றி, அதோடு QR கோட் அடங்கிய அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த கோடில் எல்லா விவரங்களும் அடங்கி இருக்கும். பொதுக்குழு உறுப்பினரின் புகைப்படம், அவரின் பெயர், மாவட்டம் எல்லாம் இந்த கோடிற்கு உள்ளே இடம்பெற்று இருக்கும்.

ஏன் இப்படி
இதனால் இந்த கோட் மூலம் எளிதாக அட்டென்டன்ஸ் எடுக்க முடியும். இந்த கோடை ஸ்கேன் செய்தால் போதும் அதுவே தானாக வருகையை பதிவு செய்துவிடும். ஒரு ஆள் ஏற்கனவே வந்துவிட்டால் அந்த கோட் காலாவதி ஆகிவிடும். இதனால் ஒரே கோடில் இரண்டு பேர் வர முடியாது. அதேபோல் பொய்யாக கோட் உருவாக்கி ஆட்கள் வர முடியாது. எனவே இந்த முறை பொதுக்குழுவில் வெளியாட்கள் நுழைவது மிகவும் கடினம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications