எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணையா?.. புது சிக்கல்.. ஆறுமுகசாமி ஆணையத்தில் நாளை புகழேந்தி வாக்குமூலம்
ஜெ.மரணம் தொடர்பாக புகழேந்தி நாளைய தினம் வாக்குமூலம் அளிக்கிறார்
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண விவகாரத்தில், நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் முன்பு, நாளை காலை 10:30 மணிக்கு அஇஅதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் வா.புகழேந்தி வாக்குமூலம் அளிக்க உள்ள நிலையில், அதிமுகவில் டென்ஷன் எகிறி உள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை முடங்கியிருந்த நிலையில், திமுக மீண்டும் ஆட்சியை எட்டிப் பிடித்ததற்கு பிறகு, சூடு பிடித்துவிட்டது.
அந்தவகையில், சமீபத்தில் ஆறுமுகசாமி ஆணையம், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸிடம் விசாரணை நடத்தியது.. அந்த விசாரணை நாட்களில் ஓபிஎஸ் சொன்ன பெரும்பாலான வார்த்தை "எனக்கு எதுவும் தெரியாது" என்பதுதான்.

அப்பல்லோ மருத்துவமனை
"அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதா நன்றாக இருப்பதாக ஒருசில முறை சசிகலா என்னிடம் சொன்னார்.. அதைத்தாண்டி எனக்கு எதுவும் தெரியாது.. அரசு பணிகள் தொடர்பாக ஜெயலலிதா கூறியதாக சசிகலா எந்த தகவலையும் என்னிடம் சொல்லவில்லை.. அவருக்கு என்னென்ன உணவுகள் வழங்கப்பட்டது என்பது குறித்தும் எனக்கு எதுவும் தெரியாது.,. அப்போதைய ஆளுநர் பிரதாப் ரெட்டியை சந்தித்தது கூட எனக்கு நினைவில்லை... CPR சிகிச்சை செய்தது பற்றிகூட எனக்கு எதுவுமே தெரியாது" என்று ஓபிஎஸ் பதில்களை கூறியிருந்தார்.

எடப்பாடி பழனிசாமி
இதனிடையே, ஜெ.மரணம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியையும் விசாரிக்க வேண்டும் என்று அதிமுகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி கோரிக்கை வைத்து கொண்டே இருக்கிறார்.. இது தொடர்பாக ஆணையத்திடமும் புகழேந்தி மனு அளித்துள்ளார்.. அந்த மனுவில், "ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆணையம் அமைத்து உத்தரவிட்ட, அன்றைய முதல்வர் பழனிசாமியிடம் விசாரணை நடத்த வேண்டும்... சிகிச்சையிலும், அவரது மரணத்திலும் தனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை என்று ஓபிஎஸ் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சி அளிக்கிறது.

சிக்கல் கூடுகிறது
அதனால், இது தொடர்பாக, முன்னாள் தலைமை செயலர் ராமமோகனராவ், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் மறு விசாரணை நடத்த வேண்டும்" என்று புகழேந்தி மனுவில் கூறியிருந்தார்... இந்த மனு மீதான விசாரணை கடந்த வாரம் நடந்த நிலையில், இதுகுறித்து விளக்கம் அளிக்க ஏப்ரல் 26ம் தேதி நேரில் ஆஜராகுமாறு, புகழேந்திக்கு ஆணையம் உத்தரவிட்டிருந்தது.. மேலும், அன்றைய தினம் எடப்பாடியிடம் விசாரணை குறித்தும் ஆணையம் முடிவு செய்யும் என்றும் கூறியிருந்தது.

எடப்பாடி பழனிசாமி
அதன்படி, புகழேந்தி தாக்கல் செய்த மனுமீதான விசாரணை நாளைய தினம் நடக்கிறது.. இது தொடர்பாக புகழேந்தி ஆணையத்தின் முன்பு நேரில் ஆஜராகி வாக்குமூலமும் தர உள்ளார்.. மேலும், எடப்பாடி பழனிசாமியை விசாரிப்பது குறித்தும் நாளைய தினம் அறிவிப்புகள் ஏதாவது வெளியிடக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து எடப்பாடிக்கு சிக்கல் கூடிவருகிறது.. காரணம், செய்தியாளர்களை சந்திக்கும்போதெல்லாம் புகழேந்தி சொல்வது பெருலும் எடப்பாடி பழனிசாமி குறித்துதான்..

ஆணையம்
"இப்படி ஒரு ஆணையத்தை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டதே எடப்பாடி பழனிசாமிதானே.. ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது, எடப்பாடி பழனிசாமியுடன் நானும்தான் மருத்துவமனையில் இருந்திருக்கிறேன்.. நடந்தவை எல்லாமே எடப்பாடிக்கு நன்றாகவே தெரியும்... 2016ம் ஆண்டு ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும்போது நடைபெற்ற காவிரி விவகாரம் தொடர்பான கூட்டத்தில் அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றாரா?

ஆறுமுகசாமி
அப்போது என்ன நடந்தது? என்பன உள்ளிட்ட விவரங்கள் தொடர்பாகவே ஆணையம் அவரிடம் விசாரிக்க வேண்டும்" என்ற வாதங்களையும் தொடர்ந்து முன்வைத்து வருகிறார் புகழேந்தி... இந்நிலையில், நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் முன்பு, நாளை காலை 10:30 மணிக்கு அதிமுகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் வா.புகழேந்தி வாக்குமூலம் அளிக்க உள்ளது, அதிமுக மேலிடத்துக்கு மேலும் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications