இன்று கிளைமேக்ஸ்.. அதிமுக கூட்டணியில் பாஜக இருக்குமா? அண்ணாமலை எடுக்கும் முடிவு! ட்விஸ்ட் இருக்காமே?
சென்னை: அதிமுக - பாஜக கூட்டணி குறித்து பொது இடங்களில் பேச வேண்டாம் என்று அதிமுக தலைவர்களுக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ள நிலையில் அதிமுக பாஜக கூட்டணி தொடருமா என்று பாஜக தலைவர் அண்ணாமலை இன்று முடிவு எடுக்க உள்ளார்.
அதிமுக - பாஜக கூட்டணி முறிந்ததாக அதிமுக அறிவித்து உள்ளது. பாஜகவிற்கு இது பேரிடியாக மாறி உள்ளது. கூட்டணி முறிந்துவிட்டதாக அதிமுக ஏற்கனவே அறிவித்துவிட்டது. இதில் இனி பாஜக முடிவு எடுக்க எதுவும் இல்லை.

இருந்தாலும் பாஜக தலைவர் அண்ணாமலை இந்த கூட்டணி குறித்து ஆலோசனை செய்ய உள்ளார். பாஜக மூத்த தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் ஆகியோரிடம் ஆலோசனை செய்ய உள்ளார். இன்று நடக்கும் ஆலோசனைக்கு பின் அதிமுக - பாஜக கூட்டணி குறித்த முக்கிய முடிவை அறிவிப்பார். இன்றைய அறிவிப்பில் சில திருப்பங்கள் இருக்கலாம் என்கிறார்கள் பாஜக தரப்பினர். அண்ணாமலையின் தொடர் பேச்சுக்கள்தான் இந்த கூட்டணி முறிவிற்கு காரணம் ஆகி உள்ளது.
என்ன நடந்தது?: அதிமுக பாஜக இடையே தற்போது உச்சம் அடைந்து உள்ளது தற்போது முத்துராமலிங்கத் தேவருக்கு பயந்து ஓடியவர் அண்ணா என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதற்கு அதிமுக தலைவர்கள் கடுமையாக விமர்சனங்களை வைத்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வைத்த விமர்சனத்தில், எப்பேர்பட்ட அரசியல் கட்சிக்கு தலைவராக இருந்தாலும் சரி, மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது
அண்ணாவை பற்றி அவதூறாக பேசினால் பேசுபவர்களின் நாக்கு அழுகிவிடும் என்று செல்லூர் ராஜு காட்டமாக பேசி உள்ளார். இன்னொரு பக்கம் மாஜி அமைச்சர் சிவி சண்முகம் வைத்த விமர்சனத்தில், அண்ணாமலை செல்வது பாதயாத்திரை இல்லை வசூல் யாத்திரை. மோடி மீண்டும் பிரதமராவதில் அண்ணாமலைக்கு விருப்பமில்லை. அதனால்தான் அண்ணாமலை இப்படி பேசிக்கொண்டு இருக்கிறார், என்று சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
பதிலடி: இதற்கு அண்ணாமலை கொடுத்த பதிலடியில், சி.வி.சண்முகம் மாலை 6 மணிக்கு மேல் ஒரு மாதிரி பேசுவார். 6 மணிக்கு முன்பு ஒரு மாதிரி பேசுவார். கடும் சொற்களை எனக்கும் பயன்படுத்தத் தெரியும். 10 ஆண்டுகளாக துப்பாக்கி பிடித்த கை இது. நேர்மையாக இருப்பவன் நான். சிவி சண்முகம் எனக்கு பாடம் எடுக்கக் கூடாது என்று கடுமையாக பேசினார்.
இந்த பேச்சுதான் கூட்டணி முறிவிற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதையடுத்தே அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை. இது அதிமுகவின் முடிவு என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
திடீர் திருப்பம்: இந்த நிலையில் திடீர் திருப்பமாக கூட்டணி குறித்தோ, பாஜக குறித்தோ பொதுவெளியில் கருத்து தெரிவிக்க வேண்டாம் என அதிமுக தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது. கூட்டணி நிலைப்பாட்டை தலைமை ஏற்கெனவே கூறிவிட்ட நிலையில் வேறு யாரும் பேசக்கூடாது; கூட்டணி மற்றும் பாஜக பற்றி பேசினால் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இப்படி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ள நிலையில் அதிமுக பாஜக கூட்டணி தொடருமா என்று பாஜக தலைவர் அண்ணாமலை இன்று முடிவு எடுக்க உள்ளார்.












Click it and Unblock the Notifications