ஷ்ஷ்! அட்வைஸ் செய்த டெல்லி.. முட்டிக்கொண்ட ‘தலை'கள்.. அங்கயே போயிருச்சாமே.. பாஜகவின் 'பிளான் பி'!
அதிமுக உடனான மோதலால் கூட்டணியை உதறுமா பாஜக என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை : அதிமுக எடப்பாடி பழனிசாமி தரப்பின் செயல்பாடுகள் பற்றி பாஜக தலைமைக்கு தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் புகார்களை தட்டிய நிலையில், அவர்களை அமைதிப்படுத்தியுள்ளதாம் டெல்லி தலைமை. அதிமுக தங்களுடன் கூட்டணியில் இருப்பது அவசியம் என பாஜக தலைமை நினைக்கிறதாம்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தங்கள் கூட்டணிக்கு சாத்தியமுள்ள செல்வாக்கு மிக்க கட்சியான அதிமுகவை உதறிவிட பாஜக தலைமை ரெடியாக இல்லையாம்.
எனவே, டெல்லி பாஜக தலைமை, தங்கள் கட்சி நிர்வாகிகளை அமைதி காக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளதாம்.

பாஜகவில் புகைச்சல்
பாஜகவில் இருந்து அண்மையில் வெளியேறிய கட்சி நிர்வாகிகள் நேராகச் சென்று அதிமுகவில் இணைந்தனர். அதிலும் குறிப்பாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதுதான் இப்போது பாஜகவினர் மத்தியில் புகைச்சலை உண்டாக்கி இருக்கிறது. அதிருப்தியால் கட்சி தாவுவது சகஜம் என்றாலும், கூட்டணிக் கட்சியான பாஜகவில் இருந்து வந்த நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமியே நேரடியாக வரவேற்றது பாஜகவினருக்கு ஷாக் கொடுத்தது. அதுவும் அவர்கள் அண்ணாமலையை நேரடியாக குற்றம்சாட்டிவிட்டு வந்தவர்கள்.

வேண்டா விருந்தாளி
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின்போதே இரு கட்சிகளுக்கும் இடையே மோதல்கள் வெளிப்பட்டன. தேர்தல் பணிமனையில் பாஜக தலைவர்களின் படம் இடம்பெறாமல் இருந்து பின்னர் அழுத்தம் காரணமாக படத்தைச் சேர்த்தனர். இரட்டை இலை யாருக்கு என்று தெரியாமல் இருந்த நிலையில் ஓபிஎஸ்ஸையும் ஈபிஎஸ்ஸையும் பாரபட்சமில்லாமல் சந்தித்துப் பேசினார் பாஜக தலைவர் அண்ணாமலை. பின்னர் குழப்பங்களுக்கு மத்தியில் தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் நின்றதும் அவருக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரமும் மேற்கொண்டார். வேண்டா விருந்தாளியாகவே அண்ணாமலையை ட்ரீட் செய்தது ஈபிஎஸ் அணி.

சூடான அண்ணாமலை
தேர்தல் முடிவு வெளியாகி, அதிமுக பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய நிலையில், "அதிமுகவில் ஒற்றுமை இல்லாததே இந்த தோல்விக்குக் காரணம். ஒருங்கிணைந்த, பலமான அதிமுகவையே பாஜக விரும்புகிறது" என்று கூறினார் அண்ணாமலை. அண்ணாமலை இப்படிப் பேசியது ஈபிஎஸ் தரப்பை கொந்தளிக்க வைத்தது. இதன் தொடர்ச்சியாகவே பாஜக நிர்வாகிகளை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றார் எடப்பாடி பழனிசாமி. இந்தச் செயலால் சூடான அண்ணாமலை, "ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு" என்று சீறினார்.

அவசர அவசரமாக
பாஜகவை விமர்சனம் செய்வது ஒருபுறம் என்றால் பாஜகவை சேர்ந்த நிர்வாகிகளை கூட்டணி கட்சியில் இருக்கும் அதிமுகவே அடுத்தடுத்து இழுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜகவும் இதற்கு கடுமையாக எதிர்வினை ஆற்றிய நிலையில், அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களும் பாஜகவை காட்டமாக விமர்சித்தனர். இந்த மோதல்கள் சில நாட்களாகத் தொடர்ந்து வந்த நிலையில், பாஜக - அதிமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்ட சூழலில், இந்தக் கூட்டணி தொடரும் என அவசர அவசரமாக இரு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் அறிவித்தனர்.

தலைமைக்கு தகவல்
தொடர்ச்சியாக பாஜக அதிமுக உறவில் விரிசல் அதிகரிக்க எடப்பாடி பழனிசாமி தரப்பு எடுத்த பல்வேறு செயல்பாடுகளே காரணம் என தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் பல்வேறு புகார்களை டெல்லி தலைமைக்கு அடுக்கி இருக்கிறார்களாம். சமீபத்தில் தமிழ்நாட்டுக்கு வந்த பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டாவிடம் ஈரோடு இடைத்தேர்தல் முதற்கொண்டு அதிமுக எடப்பாடி பழனிசாமி தரப்பு பாஜகவினரிடம் நடந்துகொண்ட விதம் பற்றி புகார் கூறியிருக்கின்றனராம் பாஜக நிர்வாகிகள்.

பாஜக தலைமை அட்வைஸ்
ஆனால், டெல்லி தலைமை தமிழ்நாடு பாஜகவை அமைதி காக்கும்படி கேட்டுக்கொண்டிருக்கிறதாம். அதிமுக பாஜக கூட்டணி உடையும் பட்சத்தில் அது ஆளும் திமுக கூட்டணிக்கு சாதகமான விளைவையே ஏற்படுத்தும். 2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், நமக்கு தமிழ்நாட்டில் சீட் கன்வெர்ட் ஆகவேண்டும் என்றால் அதிமுக கட்டாயம் தேவை, எதிரணியான திமுக பலமாக இருக்கும் சூழலில் நாம் அதிமுகவை பகைத்துக்கொள்வது தேர்தலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும், அதிமுக விவகாரத்தை தலைமை பார்த்துக்கொள்ளும், நீங்கள் எந்தச் சிக்கலையும் ஏற்படுத்திவிடாதீர்கள் என அட்வைஸ் செய்துள்ளதாம்.

பிளான் பி
அதேசமயம், எடப்பாடி பழனிசாமியை தங்கள் கட்டுப்பாட்டில் வைப்பதற்காக பிளான் பி-யை கையில் எடுத்துள்ளது என்கிறார்கள் பாஜகவினர். எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த மாஜிக்கள் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளதாகவும், பாஜகவில் இருந்து நிர்வாகிகளை இழுக்கும் பிளானுக்கு முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தல் வரை ஈபிஎஸ்ஸை கைக்குள் வைத்திருக்க சில மூவ்களை பாஜக தலைமை மேற்கொள்ளும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications