பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்ததிற்கு தடை வருமா? இன்று பிற்பகல் அவசர வழக்காக ஹைகோர்டில் விசாரணை
சென்னை: போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் இன்று பிற்பகல் அவசர வழக்காக விசாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் அமல் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய பணப் பலன்களை வழங்குதல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை அரசு ஏற்க மறுத்ததை அடுத்து, இன்று முதல் (ஜனவரி 9) வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக டிசம்பர் 19ஆம் தேதி அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., பாட்டாளி, பி.எம்.எஸ்., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ். உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கின. இந்த வேலை நிறுத்தத்தில் தொமுச மற்றும் ஐ.என்.டி.யு.சி. ஆகிய தொழிற்சங்கங்கள் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில், வேலைநிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில், மூத்த வழக்கறிஞர் P.R.ராமன் ஆஜராகி முறையீடு செய்தார். பொங்கல் பண்டிகை நெருங்கிவரும் நிலையில், போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது தொடர்ந்தால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என கூறி, இதுதொடர்பாக தாக்கல் செய்ய உள்ள வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.
அதனை ஏற்ற தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வு, மனுவாக தாக்கல் செய்யும்பட்சத்தில் பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளனர். வழக்கின் மனுவை அரசு தரப்பிற்கும், போக்குவரத்து கழகங்கள் மற்றும் சம்பந்தபட்ட தொழிற் சங்கங்களுக்கு வழங்கவும் உத்தரவிட்டுள்ளனர்.

முன்னதாக போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம் தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பான பிரச்சினையில் கடந்த அதிமுக ஆட்சியில் தீர்வு காணாமல் விட்டு விட்டார்கள். இப்போது செய்யுங்கள் என்று அதிமுக தொழிற்சங்கத்தினர் கூறுவது வேடிக்கையாக, விந்தையாக இருக்கிறது. ஏனெனில் அதிமுகவினரால் செய்ய முடியாது என்று விட்டுட்டாங்க. அதற்காக நாங்கள் செய்ய முடியாது என்று சொல்லவிலலை. நிதிநிலை சீரான பிறகு அதை நிச்சயம் செய்கிறோம் என்றுதான் சொல்லி உள்ளோம்.
நாங்கள் இப்படி சொன்ன பிறகும் எங்களை எதிர்த்து வேலைநிறுத்த போராட்டம் நடத்துவோம் என்று கூறவது அரசியல் உள்நோக்கம் கொண்டது. பொது மக்களுக்கு இடையூறு செய்ய நினைக்குறாங்க.. நாடாளுமன்ற தேர்தல் வரும் நேரத்தில் இதை செய்தால் அரசின் மீது மக்களுக்கு கோபம் வரும் என்ற நோக்கத்தில் செய்யுறாங்க.. இது மக்களுக்கும் தெரியும். ஆனால் பொதுமக்களுக்கு அவர்கள் இடைஞ்சல் செய்தால், மக்களுக்கு அவர்கள்மீது கோபம் தான் வரும். இந்த வேலை நிறுத்தத்தில் யாரெல்லாம் ஈடுபட போகிறார்கள் என்பதை பார்ப்போம் அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications