வீட்டில் பெண் இருந்தால் கேட்கத்தானே செய்வார்கள்.. தேமுதிக கோரிக்கைக்கு.. முதல்வர் செம பதில்!
சென்னை: தேமுதிக கட்சிக்கு மாநிலங்களவை தேர்தலில் எம்.பி. சீட் வழங்குவது குறித்த கேள்விக்கு முதல்வர் பழனிசாமி சுவாரசியமான பதில் அளித்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த மாநிலங்களவை எம்பிக்கள் பதவிக்கலாம் முடிகிறது. இவர்களின் பதவிக்காலம் வரும் ஏப். 2 ஆம் தேதி உடன் முடிவடைகிறது. தமிழகத்தில் திருச்சி சிவா, முத்துக்கருப்பன், செல்வராஜ், டி.கே ரங்கராஜன், சசிகலா புஷ்பா, விஜிலா சத்யானந்த் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் முடிகிறது.
இதையடுத்து மார்ச் 26ஆம் தேதி மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் அதிமுக, திமுக சார்பில் தலா 3 மாநிலங்களவை எம்பிக்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. அதிமுகவின் இந்த 3 சீட்களில் ஒரு எம்பி பதவி வேண்டும் என்று தேமுதிக நேரடியாக கோரிக்கை வைக்க தொடங்கி உள்ளது.
ராஜ்யசபா சீட் இல்லை.. அதிமுக அதிரடி முடிவு..அதிர்ச்சியில் தேமுதிக.. விஜயகாந்த் வீட்டில் பஞ்சாயத்து!
கோரிக்கை
நாடாளுமன்ற தேர்தலின் போது கூட்டணி பேச்சுவார்த்தையில் தங்களுக்கு ஒரு எம்பி சீட் வேண்டும் என்று தேமுதிக கேட்டது. கடந்த மாநிலங்களவை எம்பி தேர்தலில் அதிமுக சார்பில் பாமகவுக்கு ஒரு சீட் வழங்கப்பட்டது பாமக போலவே எங்களுக்கும் சீட் வேண்டும். நாங்கள் இதனால்தான் அதிமுக கூட்டணியில் இணைந்தோம். கண்டிப்பாக சீட் தர வேண்டும் என்று தேமுதிக கோரிக்கை வைத்தது.
மீண்டும்
ஆனால் அப்போது எம்பி பதவிக்கு தேர்தல் நடந்த போது தேமுதிகவின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. அதன்பின் தற்போது மீண்டும் எம்பி பதவி வேண்டும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா கோரிக்கை வைக்க தொடங்கி உள்ளார். அவரின் சகோதரர் மற்றும் தேமுதிக செயலாளர் சுதீஷ் இது தொடர்பாக முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசனை செய்தார்.
காரணம்
சுதீஷுக்கு எம்பி பதவி கிடைக்க வேண்டும் என்றுதான் தேமுதிக நெருக்கி வருகிறது. இந்த நிலையில் தேமுதிக எம்.பி. சீட் குறித்த கேள்விக்கு முதல்வர் பழனிசாமி பதில் அளித்துள்ளார். அதில், எல்லோருக்கும் எம்பி சீட் கேட்க உரிமை உள்ளது. கூட்டணி என்றால் இப்படித்தான் இருக்கும். ஒரு வீட்டில் பெண் இருந்தால் திருமணம் செய்ய கேட்பதைபோல், கூட்டணி கட்சியினரும் சீட் கேட்கதான் செய்வார்கள். ஒரு பெண் நல்ல பெண் என்று பலர் வந்து கேட்பார்கள். பலர் போட்டி போட்டுகொண்டு கேட்பார்கள்.
கட்சி வளர வேண்டும்
இதை தவறாக சொல்ல முடியாது. தங்கள் கட்சி வளர வேண்டும் என்று பலர் நினைப்பார்கள். தங்கள் கட்சியில் ஒரு எம்பி இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பார்கள். பரஸ்பரம் எல்லோரும் இப்படித்தான் நினைப்பார்கள். இது ஒரு ஆர்வம். இதை நாங்கள் கூடி முடிவு செய்வோம். தலைமை கழகம் கூடி இறுதி முடிவை எடுக்கும், என்று தேமுதிக எம்.பி. சீட் குறித்த கேள்விக்கு முதல்வர் பழனிசாமி பதில் அளித்துள்ளார்.