திருவல்லிக்கேணியில் மலராத தாமரை... காலில் விழுந்து வாக்குசேகரித்த குஷ்புக்கு வேறு தொகுதி கிடைக்குமா?
தொகுதிப்பங்கீடு முடியும் முன்பே கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து ஒப்பந்தம் கையெழுத்து ஆகும் முன்பாகவே சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் வீடு வீடாக போய் வாக்கு சேகரித்தார் குஷ்பு.
சென்னை: சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பாகவே சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் ஆரம்ப கட்ட வேலைகளை செய்யத் தொடங்கியவர் நடிகை குஷ்பு. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தன்னை அந்த தொகுதியில் வேட்பாளராகவே நினைத்து வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கத் தொடங்கினார். தொகுதிப்பங்கீட்டில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பாமகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது குஷ்புவிற்கு ஏமாற்றமாகவே இருந்தாலும் இன்னமும் வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்படாததால் தனக்கு வேறு தொகுதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் குஷ்பு.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி பா.ஜ.க. பொறுப்பாளராக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார் நடிகை குஷ்பு. அந்த தொகுதியில் தனி கவனம் செலுத்த ஆரம்பித்த குஷ்பு தினந்தோறும் அங்கு சென்று அடிப்படை பணிகளை செய்ய ஆரம்பித்தார்.
திருவல்லிக்கேணி தொகுதிக்குட்பட்ட அண்ணாசாலையில் ஹை-டெக் பாணியில் கண்டெய்னரில் தேர்தல் பணிமனை அமைத்தார். தேர்தல் அறிவிப்பதற்கு முன்னதாகவே குஷ்பு செய்த அடிப்படை வேலைகள் பலராலும் பாராட்டப்பட்டது.

சொந்த தொகுதியாக நினைத்த குஷ்பு
ஏசி வசதியுடன் கூடிய 4 கன்டெய்னர்களை தேர்தல் பணிமனையாக மாற்றினார். ஒரு கன்டெய்னரில் குஷ்புவின் அலுவலகம் செயல்பட்டது. மற்ற கண்டெய்னர்களின் நிர்வாகிகள் அமர்ந்து மக்களின் குறைகளை கேட்டனர். தினமும் காலையில், இந்த தேர்தல் பணிமனைக்கு வந்து, அங்கு கட்சி தொண்டர்கள், பொதுமக்களை சந்தித்து பேசினார் குஷ்பு. இந்த தேர்தல் பணிமனையை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்துச்சென்றனர்.

ஓடி ஓடி உழைத்த குஷ்பு
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் தனக்கு போட்டியிட சீட் கொடுத்துவிட்டதாகவே நினைத்து நடிகை குஷ்பு ஓடி ஓடி உழைத்தார். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் எதிர்கட்சி வேட்பாளர்களுக்கு சவாலான வேட்பாளராக குஷ்பு நிச்சயம் இருப்பார் என்று பேசப்பட்டது.

களமிறங்கிய குஷ்பு
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியை பாமகவுக்கு ஒதுக்கியுள்ளது அதிமுக. அத்தொகுதியை பெரிதும் எதிர்பார்த்திருந்த பாஜகவிற்கும் பம்பரம் போல சுழன்றி தேர்தல் பணியாற்றிய குஷ்புவுக்கும் பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கத் தொடங்கினார் குஷ்பு.

வாக்காளர்களில் காலில் விழுந்தார்
நடிகையாக இருந்த குஷ்பு வேறு கட்சிகளில் இருந்த போது பணியாற்றியதை விட பாஜகவில் இணைந்த பின்னர் பம்பரமாக சுழன்றார். வாக்காளர்களின் காலில் விழுந்து வீடு வீடாக வாக்கு சேகரித்தார். பெண்கள் வேலை செய்யும் இடங்களில் தேடிப்போய் அவர்களுடன் சகஜமாக பழகினார். சேப்பாக்கம் தொகுதி இப்போது பாமகவிற்கு ஒதுக்கப்பட்டதால் குஷ்பு பட்ட பாடுகள் அனைத்து வீணாகி விட்டதாக பாஜகவினர் கருதுகின்றனர். இதுவரை வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகவில்லை என்பதால் குஷ்புவிற்கு வேறு தொகுதி ஏதேனும் ஒதுக்க வாய்ப்புள்ளதாகவே அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றனர்.












Click it and Unblock the Notifications