விஜய் கட்சியில் குஷ்பு? மன மாற்றமா? தடுமாற்றமா? திமுக முதல் பாஜக வரை நடந்தது என்ன?
சென்னை: பாஜக மாநிலத் தலைமை மீதும் தேசிய தலைமை மீதும் குஷ்பு அதிருப்தியில் உள்ளதாகவும் அவர் வரும் சட்டமன்றத் தேர்தலுக்குள் விஜய் கட்சிக்குச் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் ஒரு தகவல் வேகமாகப் பரவி வருகிறது.
தமிழ்நாட்டு அரசியலில் குஷ்பு தனது அரசியல் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பாகவே அவர் ஒரு விவாத பொருளாக இருந்திருக்கிறார். பல ஆண்டுகள் முன்பாக, அதாவது 2005 ஆம் ஆண்டு இவர் திருமணத்திற்கு முன்பாகவே உடல்ரீதியாக உறவு வைத்துக் கொள்வது தொடர்பாக அவர் 'இந்தியா டுடே’வுக்கு அளித்த பேட்டி தமிழ்நாடு முழுவதும் பற்றி எரிந்தது. அவருக்கு எதிராக விசிக மிகப் பெரிய போராட்டத்தைக் கையில் எடுத்தது. இறுதியாக சட்டரீதியாக அவர் தன் மீது போடப்பட்ட வழக்குகளைச் சமரசம் இல்லாமல் எதிர்கொண்டு, அதில் வெற்றியும் பெற்றார்.

அந்தச் செல்வாக்கைக் கொண்டுதான் அவர் திமுகவில் இணைந்தார். அப்போது ஜெயா டிவியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த குஷ்பு, அதிமுகவில்தான் இணைவார் என்று ஒரு தகவல் கசிந்தது. ஆனால், அவர் யாரும் எதிர்பார்க்காத விதமாக திமுகவில் மு.கருணாநிதி தலைமையில் 2010இல் இணைந்தார்.
கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் திமுகவில் செயல்பட்டு வந்தார் குஷ்பு. 2014இல் திமுகவிலிருந்து விலகினார். இன்னும் அழுத்தமாகச் சொன்னால் விலக வேண்டிய நிர்ப்பந்தத்தை திமுக தலைமை அவருக்குக் கொடுத்தது. அதற்குக் காரணம் இவரையும் முன்னாள் திமுக தலைவரையும் சேர்த்து வைத்து ஒரு வார ஏடு தரம் தாழ்ந்து ஒரு செய்தியை வெளியிட்டது. அப்போது அவர் வேறு வழியில்லாமல் கட்சியைவிட்டு விலகி, காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். கூடவே அவர் ஸ்டாலினுக்கு எதிராக சில கருத்துகளை முன்வைத்ததால், திமுக முதல் குடும்பத்தின் பகையைச் சம்பாதிக்க வேண்டிய நிலை உண்டானது. காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இருந்த போதுதான் சோனியா காந்தி தலைமையில் கட்சியில் இணைந்தார் குஷ்பு.
ஆகவே இவருக்கும் இளங்கோவனுக்கும் நல்ல மதிப்பு நட்பு இருந்தது. இளங்கோவன் வந்த பிறகே காங்கிரஸ் கட்சி புதிய எழுச்சி பெற்றுள்ளது என்றும் அவர் கூறிவந்தார். இதனிடையே திடீரென்று 2016 ஆம் ஆண்டு இளங்கோவன் தனது மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இளங்கோவன் மீது தேசிய தலைமை அதிருப்தி அடைய குஷ்புதான் காரணம் என்று சொல்லப்பட்டது.
அதாவது காங்கிரஸ் கட்சியினர் போட்டியிட்ட சட்டசபை தொகுதிகளில் பிரச்சாரம் செய்த குஷ்பு, ஒவ்வொரு வேட்பாளரிடமும் ஒரு லட்சம் ரூபாய் தனது மூலம் உதவியாளர் மூலம் வாங்கியதாகவும், திருநாவுக்கரசர் பணம் கொடுக்காத காரணத்தினால்தான், குஷ்பு அறந்தாங்கி தொகுதிக்குப் பிரச்சாரத்திற்குச் செல்லவில்லை என்றும் ஒரு தகவல் கூறப்பட்டது. குஷ்பு தரப்பினரின் வசூல் வேட்டை பற்றி ஈவிகேஎஸ் இளங்கோவன் விசாரணை செய்யவில்லை என்பதால்தான் டெல்லி தலைமைக்குப் புகார் சென்று, அவரை அழைத்துக் கண்டித்ததாக அப்போது ஒரு பேச்சு அடிப்பட்டது.
காங்கிரஸ் கட்சிக்கு குஷ்பு போகும்போதே திமுக மறைமுகமாக இவரது வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் என்ற ஒரு வாதம் முன்வைக்கப்பட்டது. ஆனால், ஊகங்களைக் கடந்து இவர் 2020வரை அங்கே தாக்குப் பிடித்தார். தேசிய செய்தி தொடர்பாளர் பதவி வரை அவருக்கு உடனடியாக வழங்கப்பட்டது. உள்ளூர் ஊடகங்களைத் தாண்டி தேசிய ஊடகங்களில் நடைபெறும் விவாதங்களில் பங்கேற்று தனது திறமையை நிரூபித்து வந்தார்.
அதன் பின்னர் பாஜகவுக்கு இவர் கட்சி மாற உள்ளதாகத் தகவல் கசிந்தபோது அதை முற்றாக மறுத்துவந்த குஷ்பு, எதிர்பார்த்ததைப் போலவே அக்கட்சியில் 2020இல் இணைந்தார். காங்கிரஸ் கட்சியிலிருந்தபோது சிறுபான்மை நலன், சமூக நீதி எனப் பேசிய குஷ்பு, பாஜக சென்ற பிறகு தன்னை ஒரு இந்துப் பெண்ணாக அடையாளப்படுத்த ஆரம்பித்தார். இந்த மாற்றம் அவரது மீது இருந்த நம்பிக்கையைக் குறைந்தது.
ஆனால் அவர் எதிர்பார்த்ததைப் போலவே உடனடியாக சட்டமன்றத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பும் வழங்கப்பட்டது. ஆனால், இந்தத் தொகுதி திமுகவின் கோட்டை. அதை அறிந்தும் கால் பதித்த குஷ்புவைத் தோல்வியை தழுவச் செய்தது திமுக. இருந்தாலும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக குஷ்பு நியமிக்கப்பட்டார். கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரியில் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக குஷ்பு நியமிக்கப்பட்டார்.
சரியாக ஒன்றரை ஆண்டுகள் வரை கட்சி பணியில் ஈடுபடாமல் இருந்து வந்த குஷ்பு இப்போது தனது ஆணைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதற்கு கட்சிக்காக உழைக்க முடியாமல், கருத்து கூற முடியாமல் உள்ளது. ஆகவே நான் மீண்டும் கட்சி பணி செய்வதற்காகப் பதவியை விட்டு விலகி இருக்கிறேன் என்று விளக்கம் அளித்துள்ளார். ஆனால், பாஜக வட்டாரம் அவர் சட்டமன்றத் தேர்தலுக்கு இப்போதே தயாராகி வருகிறார். இப்போது இருந்தே செய்திகளில் தென்பட்டால்தான் சட்டமன்றத் தேர்தலுக்கு மைலேஜ் கிடைக்கும். ஆகவே தான் இந்த முடிவை எடுத்துள்ளார் என்கிறார்கள்.
இன்னொரு தரப்பு அவர் நட்டா உள்ளிட்ட தேசிய தலைவர்களைச் சந்தித்து முன்வைத்த கோரிக்கைகள் எதையுமே கட்சி நிறைவேற்றி தரவில்லை. ஒன்றுக்கும் உதவாத இந்த வாரிய பதவியை அதன் பொருட்டே தூக்கி வீசி உள்ளார் என்கிறார்கள். மற்றொரு தரப்பு அவர் பாஜக மீதும் ,மாநிலத் தலைமை மீதும் அதிருப்தியில் உள்ளார். அதன் வெளிப்பாடுதான் இது என்றும் சொல்கிறார்கள்.
இந்நிலையில் அவர் வரும் சட்டமன்றத் தேர்தலில் விஜய் கட்சி பக்கம் தாவ இருப்பதாகவும் சொல்கிறார்கள். குஷ்புவும் விஜய் பற்றிப் பேசும்போது, “விஜய் எனது தம்பி. அவர் மிகவும் புத்திசாலி. ஆகவே அவருக்கு அறிவுரை என்பதே தேவைப்படாது. நான் அவரை பாஜக கூட்டணிக்கு வரச் சொல்லி அழைக்கமாட்டேன். அதைத் தேசிய தலைமை முடிவு செய்யும். கட்சியின் விருப்பம்தான் என் விருப்பம்” என்று கூறியிருக்கிறார்.
கடந்த கால ட்ராக் ரெக்கார்ட்டை அலசி ஆராயும் போது குஷ்பு தரும் வாக்குறுதிகளை நம்ப முடியாது என்றே தெரிகிறது. ஒருவேளை அவர் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும்போது எந்த முடிவையும் எடுக்கலாம் என்கிறார்கள் அவரை நன்கு உணர்ந்தவர்கள்.












Click it and Unblock the Notifications