ஷாக் தீர்ப்பு.. பொதுக்குழுவில் பங்கேற்பாரா ஓபிஎஸ்.. அடுத்தகட்ட திட்டம் என்ன - வீட்டில் பரபர ஆலோசனை!
சென்னை : ஓ.பி.எஸ் தரப்புக்கு பாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கும் நிலையில், ஓபிஎஸ் ஏற்கனவே முடிவெடுத்தபடி நாளை நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video
நீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி தரப்ப்புக்கு சாதகமாக வந்துள்ளதால், நாளை நிச்சயமாக ஒற்றைத் தலைமை தீர்மானம் கொண்டு வரப்படும் எனக் கூறப்படுகிறது.
இதனால், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஓ.பன்னீர்செல்வம் தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஒற்றைத் தலைமை
எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஒற்றைத் தலைமை முழக்கத்தை முன்வைத்து வரும் நிலையில் நாளை அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. ஆனால் அக்கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தி வருகிறார். இரட்டைத் தலைமையின் கீழ் கட்சி சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், ஒற்றைத் தலைமைக்கு என்ன அவசியம் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால் ஒற்றைத் தலைமை வேண்டும் என்பதில் எடப்பாடி தரப்பினர் தீவிரமாக இருந்து வருகின்றனர்.

ஓ.பி.எஸ் நிலைப்பாடு
ஒற்றைத் தலைமை விவகாரம் தனக்கு எதிராக உள்ள நிலையில், பொதுக்குழுவை ஒத்தி வைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதினார். மேலும், பொதுக்குழு தடை தொடர்பாக உயர்நீதிமன்ற வழக்கில், பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் தவிர எந்தவொரு புதிய தீர்மானத்தையும் கொண்டு வரக் கூடாது என்றும், ஒருங்கிணைப்பாளர் பதவியை பொதுக்குழுவால் நீக்க முடியாது என்றும் ஓபிஎஸ் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

ஓபிஎஸ் பங்கேற்பார்
மேலும், பொதுக்குழுவை வழக்கமான முறையில் நடத்த ஆட்சேபணை இல்லை, பொதுக்குழு கூட்டத்தை நடத்தலாம், ஆனால் ஒற்றைத் தலைமை தீர்மானத்தை கொண்டு வரக் கூடாது. நாளை நடைபெறும் பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பார் என அவரது தரப்பினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான வைத்திலிங்கமும், நாளை நடைபெற உள்ள பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பங்கேற்க முடிவு செய்துள்ளது எனத் தெரிவித்தார்.

பரபரப்பு தீர்ப்பு
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள இடைக்காலத் தீர்ப்பில், அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த எந்த தடையும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்த அனுமதி அளித்து தீர்ப்பளித்துள்ள உயர்நீதிமன்றம், பொதுக்குழுவில் கட்சி விதிகளை திருத்தவும் தடை இல்லை என உத்தரவிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

பன்னீர் பங்கேற்பாரா?
ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு பாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கும் நிலையில், ஓபிஎஸ் ஏற்கனவே முடிவெடுத்தபடி நாளை நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. கோர்ட் தீர்ப்பும் எடப்பாடி தரப்ப்புக்கு சாதகமாக வந்துள்ளதால், நாளை நிச்சயமாக ஒற்றைத் தலைமை தீர்மானம் கொண்டு வரப்படும் எனக் கூறப்படுகிறது. இதனால், ஓபிஎஸ் பங்கேற்பது கேள்விக்குறிதான் இன்று கூறப்படுகிறது. தீர்ப்பைத் தொடர்ந்து ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இன்னும் சற்று நேரத்தில் இதுகுறித்து அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications