சசிகலாவை நேரில் சந்திப்பாரா ஓபிஎஸ்?.. தேனியில் இரவில் நடந்த திடீர் திருப்பம்.. இபிஎஸ் என்ன செய்வார்?
சென்னை: தேனி மாவட்டத்தில் சசிகலா, தினகரனுக்கான ஆதரவு குரல் எழுந்துள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமி என்ன செய்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுகவில் சசிகலா, தினகரன் இணைப்பு குறித்த விவகாரம் தற்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தல், சட்டசபைத் தேர்தல், நகர்ப்புற தேர்தல் ஆகியவற்றில் அதிமுக தோல்வியை தழுவியது.
இரட்டை தலைமையிலான இந்த கட்சி இன்னும் தேயும் என்பதை உணர்ந்த சில நிர்வாகிகளும், நகர்ப்புறத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றவர்களும் திமுகவில் இணைந்து வருகிறார்கள்.

அதிமுகவில் ஒற்றை தலைமை
எனவே அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை குறித்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. அன்று எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய ஒற்றை தலைமையின் கீழ் கட்சி நடந்ததால்தான் மாபெரும் வெற்றிகளை குவிக்க முடிந்தது என்பதை இன்று பெரும்பாலானோர் உணர்ந்துவிட்டனர். அந்த ஒற்றை தலைமை எடப்பாடி பழனிச்சாமியும் இல்லாமல் ஓபிஎஸ்ஸும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதுதான் பெரும்பாலானோரின் விருப்பமாக இருக்கிறது.

இரட்டை தலைமை
இந்த இரட்டை தலைமையில் இவர்களுக்கான ஆதரவாளர்களின் செல்வாக்குதான் கட்சியில் நிறைந்திருந்ததால் இவர்களுடைய தலைமையே வேண்டாம் என்ற முடிவில் சில நிர்வாகிகள் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இவர்கள் இருவரை தவிர்த்துவிட்டு கட்சியில் உள்ள மூத்த நிர்வாகிகளை தலைமை பொறுப்பில் வைத்து பார்க்க முடியாது என நிர்வாகிகள் கருதுகிறார்கள்.

சசிகலா
ஜெயலலிதாவுடன் சசிகலா இருந்ததால் அவருக்கு பிரிந்து கிடக்கும் கோஷ்டிகளை ஒன்றிணைப்பது குறித்து தெரியும். மேலும் அனைவருக்கும் பொதுவானவர் அவர் என்பதால்தான் சசிகலாவை தலைமை பொறுப்பில் கொண்டு வர வேண்டும் என நிர்வாகிகள் விரும்புகிறார்கள்.

தேனியில் முடிவு
நேற்றைய தினம் தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையது கான். இவர் தலைமையிலான தேனி அதிமுகவினர் சசிகலா, தினகரன் மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி அதை ஓபிஎஸ்ஸிடம் ஒப்படைத்துள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ்ஸின் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இது போல் தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள் என்றால், நிச்சயம் அது ஓபிஎஸ்ஸின் சம்மதம் இல்லாமல் நடந்திருக்காது என்கிறார்கள்.
Recommended Video

சசிகலா- தினகரன்
எனவே சசிகலா- தினகரனை கட்சியில் கொண்டு வர ஓபிஎஸ் ஏதேனும் முடிவை எடுத்திருப்பார் என்கிறார்கள். தனக்கான எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஓபிஎஸ் நிச்சயம் சசிகலாவை நேரில் சந்திக்க செல்வார் என தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. சசிகலாவிடம் அதிமுகவில் இணையுமாறும் தலைமை பொறுப்பை ஏற்குமாறும் நிச்சயம் ஓபிஎஸ் அழைப்பார் என்றும் கூறுகிறார்கள். மேலும் ஒருங்கிணைப்பாளரே சசிகலாவை அதிமுகவில் இணைய அழைத்தால் அதை இபிஎஸ்ஸால் தடுக்க முடியாது என்கிறார்கள். ஊரோடு ஒற்று போக வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு சசிகலா தலைமையில் எடப்பாடி பழனிச்சாமி இணைவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications