"ஜகா" வாங்கி.. சவாலில் வெல்லும் முஸ்தீபுகளுடன் தினகரன்.. மறுபக்கம் திமிறி எழும் தேமுதிக?
அமமுக - தேமுதிக கூட்டணி தென்மாவட்டங்களில் பலம் பெறுமா என்ற சந்தேகம் எழுகிறது
சென்னை: மிகப்பெரிய மாறுதலும், அதனை ஒட்டிய தாக்கமும் தமிழக அரசியல் களத்தில் மெல்ல ஏற்பட்டு வருகிறது.. இதற்கு காரணம் அமமுக - தேமுதிக கூட்டணி!
நடக்க போகும் தேர்தலில் திமுகவை தோற்கடிப்பதே எங்கள் நோக்கம் என்று தினகரன் சொல்லி கொண்டாலும், அதிமுகவுக்கு எதிராக எத்தனை வாக்குகளை தினகரன் பிரிக்கக்கூடும் என்ற சந்தேகமும் எழுந்து வருகிறது.
தினகரனை பொறுத்தவரை, மிக குறுகிய காலத்தில் முன்னெடுத்த, 2 விஷயங்கள் அலசப்படுகிறது.. ஒன்று, உரிமையியல் வழக்கு வாபஸ் மற்றொன்று தேமுதிகவுடன் கூட்டணி வைத்தது.. இவை இரண்டுமே அதிமுகவை நிலைகுலைய வைத்து வருகிறது.

எடப்பாடியார்
வழக்கை தினகரன் வாபஸ் வாங்கியது சமயோஜித புத்தியாகவே பார்க்கப்படுகிறது. காரணம், "அமமுகவெல்லாம் ஒன்றுமே கிடையாது, இரட்டை இலை தங்களிடம் உள்ளது" என்ற எடப்பாடியாரின் தொடர் பேச்சு ஒருபக்கம் இருந்தாலும், தினகரன் திடீரென ஏன் இந்த வழக்கை வாபஸ் வாங்குகிறார் என்ற சந்தேகமும் எழுந்தது.

வழக்கு
அதிமுகவை மீட்டெடுக்கப் போகிறோம் என்று சொல்லிதான் அமமுக என்ற கட்சியே ஆரம்பித்தார்.. இப்போது வழக்கு வாபஸ் என்றால், அதிமுக என்ற கட்சிக்கும் அமமுகவுக்கும் சம்பந்தமே இல்லாமல் போய்விடுமே என்ற சந்தேகமும் எழாமல் இல்லை. அந்த வகையில் எடப்பாடியாரின் ஆதிக்கம் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாகவே பலரும் சொல்கிறார்கள்.

தீர்ப்பு
ஆனால் இங்குதான் தினகரன் வேறு மாதிரி கணக்கு போடுகிறார் என்கிறார்கள்.. பொதுவாக உரிமையியல் வழக்கு என்றாலே அது காலதாமதமாக நடக்கும் வழக்கு.. உடனடி தீர்ப்புகள் இதுபோன்ற கேஸ்களில் வராது.. அப்படி தீர்ப்பு வருவதற்கு முன்பேயே கட்சியை மீட்டெடுக்க, அல்லது கட்சியை இணைப்பதற்கான தேவை எழுந்துள்ளது.. அதற்கு ஒரு வாய்ப்பாகவே இந்த தேர்தல் அமைந்துள்ளது.. அதனால் மக்கள் தீர்ப்பை வைத்தே, கட்சி விவகாரங்களில் இணைப்பா? மீட்பா? என்று முடிவுக்கு வந்துவிடலாம் என்ற தினகரன் யோசிக்கிறாராம்.., அதனாலேயே வழக்கை வாபஸ் வாங்குவதாக அறிவித்தாராம்.

கூட்டணி
மற்றொரு விஷயம் தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வந்து சேர்த்தது.. இந்த தேர்தலில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சசிகலா தனக்கு பலமாக இல்லாத சூழலில் தனித்து களம் காணும் சூழலுக்கு தள்ளப்பட்டார் தினகரன்... இதற்குதான் கூட்டணி என்ற விஷயத்தையே ஆரம்பித்தார். இதில் முதல் குறியே சக்சஸ்தான்.. தேமுதிகவை யாருமே கண்டுகொள்ளாத நிலையில், தினகரன் போட்ட ஸ்கெட்சை கண்டு மிரண்டு போய்விட்டது அதிமுக.. கோவில்பட்டியை குறி வைத்ததும், நாயுடு ஓட்டுக்களை அள்ள தேமுதிகவுக்கு அள்ளி அள்ளி சீட் தந்ததுமே இதற்கு சாட்சியாக உள்ளது.

தென்மண்டலம்
தினகரன் தனித்து போட்டியிட்டாலே, அதிமுக தென் மண்டலத்தின் பல தொகுதிகளில் ஓட்டுக்களை பிரிக்கும்.. சில தொகுதிகளில் மண்ணை கவ்வும்.. இது கடந்த தேர்தலிலும் எதிரொலித்தது.. முக்குலத்தோர் வாக்குகள், செல்வாக்கு, தனிபலம், பண பலம் என எதிலுமே தினகரனை சமாளிக்க முடியாத நிலை, அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.. இப்போது தேமுதிகவையும் கூட்டணியில் இணைத்து கொண்டுள்ளது அதிமுகவுக்கு மேலும் சறுக்கலாகவே பார்க்கப்படுகிறது. இதனால், டெல்டாவையும் தாண்டி, மத்திய மாவட்டங்களிலும் இந்த கூட்டணி பலம் விரிவடைந்து வருகிறது.

குற்றச்சாட்டுகள்
இது எல்லாவற்றையும்விட, தேமுதிகவை அதிமுக நடத்திய விதமும் மக்களை கவனிக்க வைத்து வருகிறது.. கிட்டத்தட்ட தேமுதிகவை அதிமுக அவமானப்படுத்திவிட்டதாகவே ஒரு பார்வை உள்ளது.. இதில் பிரேமலதாவும் செல்லும் இடமெல்லாம் அதிமுக மீது குற்றச்சாட்டுகளை அடுக்கவும்,தேமுதிக மீதான அனுதாப வலையும் வீசப்பட்டு வருகிறது. ஒரு பக்கம் வழக்கு வாபஸ்.. மறுபக்கம் மறைமுக முஸ்தீபுகள்.. இன்னொரு பக்கம் தேமுதிகவை வைத்து ஒரு பிளான் என தினகரன் சமயோஜிதமாகவே செயல்படுவதாக அவருக்கு இமேஜ் கூடியுள்ளது.












Click it and Unblock the Notifications