3 பேரும் இணையனும்.. டெல்லி போட்ட ஆர்டர்.. சசிகலா "கவுண்டவுன் ஸ்டார்ட்".. எடப்பாடிக்கு எகிறிய பிரஷர்!
சென்னை: அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் - சசிகலா - டிடிவி தினகரன் இணைவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளன. இவர்கள் மூவரும் இணைவது வெகு விரைவில் நடக்கலாம் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுதான் தற்போது எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு பிரஷரை அதிகரிக்க வைத்துள்ளது.
அதிமுகவில் மீண்டும் சசிகலா - டிடிவி தினகரன் இணைய வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளார். எம்ஜிஆர் காலத்தில் அதிமுகவில் இருந்தவர்கள். ஜெயலலிதா காலத்தில் அதிமுகவிற்காக பணிகளை செய்தவர்கள் யாராக இருந்தாலும் மீண்டும் அதிமுகவிற்குள் வர வேண்டும். நாம் எல்லோரும் சேர்ந்து பணியாற்ற வேண்டும். இதற்காக யாரையும் சந்தித்து பேச நான் தயார் என்று கூறியுள்ளார்.
இதை இன்னும் சசிகலா வெளிப்படையாக ஏற்கவில்லை. இன்னொரு பக்கம் டிடிவி தினகரன் இதை வரவேற்றுள்ளார். தீயசக்தியான தி.மு.க.வை வீழ்த்துவதற்கு அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் இணக்கத்துடன் செயல்படவேண்டும் என்ற ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் கருத்தை சுயநலமற்ற, ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவர் ஒருவரும் வரவேற்கவே செய்வார்கள்.
அதேசமயம், சுயநலத்தின் உச்சமாக, பதவி வெறிபிடித்தாடும், துரோக சிந்தனை உடைய ஒரு கும்பல் நல்லதை எப்போதும் ஏற்காது என்பதும் அனைவரும் அறிந்ததே, என்று டிடிவி தினகரன் குறிப்பிட்டார்.

பாஜக தனித்து களமிறங்க முடியாது
இவர்கள் மூவரும் இப்படி திடீரென இணையும் முடிவில் இறங்கியதற்கு டெல்லி பாஜகதான் காரணம் என்றும் கூறுகிறார்கள். சமீபத்தில் தமிழ்நாடு பாஜக பொறுப்பாளர் சிடி ரவி ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் அதிமுகவில் மோதல் நிலவுகிறது. அவர்கள் கட்சியில் நிலவும் மோதல் கூட்டணியான எங்களையும் ஓரளவிற்கு பாதிக்கும் என்று கூறினார். டெல்லியும் அதிமுக மோதலை இப்படித்தான் பார்ப்பதாக கூறப்படுகிறது. அதாவது அதிமுக மோதலால் பாஜக கூட்டணிக்கே சிக்கல் வரும் என்று அக்கட்சி நினைக்கிறதாம்.

எடப்பாடியை விரும்பவில்லை
எடப்பாடி, ஓபிஎஸ், சசிகலா எல்லா பிரிந்து கிடந்தால் அதிமுக வாக்குகள் பிரியும். இதனால் அவர்களின் கூட்டணியில் இருக்கும் நமக்கும் சிக்கல் ஏற்படும். 2024 லோக்சபா தேர்தலில் இது சிக்கலை ஏற்படுத்தும் என்று பாஜக நினைக்கிறதாம். இதன் காரணமாகவே எடப்பாடி ஒற்றை தலைமைக்கு திட்டம் போடுவதை பாஜக விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அதனால்தான் எடப்பாடி ஒற்றை தலைமைக்கு வந்த போது அதை பாஜகவின் டாப் தலைகள் வாழ்த்தவில்லை என்றும் கூறப்படுகிறது.

டெல்லி அனுமதி
எல்லோரும் ஒன்றாக இருங்கள். அப்போதுதான் வெற்றிபெற முடியும் என்பதே பாஜகவின் நிலைபாடாம். இதனால்தான் தற்போது ஓபிஎஸ் - சசிகலா - டிடிவி மூவரும் இணைய வேண்டும் என்று டெல்லி பிரஷர் போட்டதாக கூறப்படுகிறது. சமீப நாட்களாக அதிமுகவில் ஓபிஎஸ் கை ஓங்கவும் இதுவே காரணம் என்கிறார்கள். அதோடு.. சசிகலா பற்றி வெளிப்படையாக அவர் சின்னம்மா சசிகலா என்று சொல்லவும்.. அண்ணன் டிடிவி என்று சொல்லவும் இதுவே காரணம் என்று கூறுகிறார்கள். எல்லாம் டெல்லி தந்த கிரீன் சிக்னல்!

எடப்பாடிக்கு உள்ள ஆப்ஷன் - பிரஷர்
இன்னொரு பக்கம் எடப்பாடிக்கும் இதில் சில ஆப்ஷன்கள் தரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி ஓபிஎஸ் - சசிகலா - டிடிவி மூவரையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் உங்களை கட்சியில் ஓரம்கட்ட நேரிடும் என்று டெல்லி தரப்பில் இருந்து இவருக்கு பிரஷர் வந்ததாகவும் பேச்சுக்கள் அடிபடுகின்றன. அதாவது ஒருங்கிணைந்த அதிமுகவையே பாஜக விரும்புகிறது. அப்போதுதான் அவர்கள் கூட்டணியில் உள்ள தங்களுக்கும் பலன் கிடைக்கும் என்று கட்சி தலைகள் நினைக்கிறாராம்.

பாஜக விளக்கம்
ஆனால் பாஜக தலைவர் அண்ணாமலையோ, அதிமுக விவகாரத்தில் நாங்கள் தலையிட மாட்டோம். 2017ல் இருந்து எப்போதும் இதில் பாஜக தலையிட்டது கிடையாது. நாங்கள் பல இடங்களில் பல கட்சிகளோடு கூட்டணியில் இருந்துள்ளோம். சில இடங்களில் கூட்டணியில் பிரச்சனைகள் ஏற்பட்டது இயல்புதான். அவர்கள் பிரச்சனைகளை, அவர்கள்தான் தீர்க்க வேண்டும். அதிமுக உட்கட்சி விவகாரத்தில் நாங்கள் தலையிடவில்லை. அதை அவர்கள் முடிவு எடுப்பார்கள், என்று அண்ணாமலை குறிப்பிட்டார்.

எடப்பாடி விளக்கம்
இன்னொரு பக்கம் அதிமுக விவகாரத்தில் பாஜக தலையிடுகிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி, அதுக்கு நான் என்ன சொல்ல முடியும். அதிமுக தனித்தே இயங்கி வருகிறது. அதிமுகவில் எம்ஜிஆர் காலத்திலும் சரி, ஜெயலலிதா காலத்திலும் சரி தனித்தே இயங்கி இருக்கிறது. அவர்கள் வழியைத்தான் நாங்கள் பின்பற்றி வருகிறோம். இரண்டு பெரும் தலைவர்களின் வழிகாட்டுதல்களை பின்பற்றித்தான் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். அவர்கள் எங்களுக்கு போட்டுக்காட்டிய வழியை நாங்கள் பின்பற்றி வருகிறோம், என்று குறிப்பிட்டார்.

எதிர் வாதம் என்ன
அதோடு ஓபிஎஸ்ஸுக்கு நெருக்கமான சிலரோ.. அதிமுகவில் இப்படி மூவரும் இணைய முயற்சிப்பதற்கு பின் டெல்லி காரணமாக இல்லை. இவர்கள் மூவருக்கும் பொது எதிரி எடப்பாடி. அவரை வீழ்த்த வேண்டும் என்று இவர்கள் 3 பேரும் நினைக்கிறார்கள். 3 பேரும் எடப்படியால் ஏமாற்றப்பட்டு உள்ளனர். அதனால் இவர்கள் ஒரு குடையின் கீழ் இணைந்துள்ளனர் என்கின்றனர். உண்மையில் இவர்கள் மூவரையும் இணைப்பது எடப்பாடி என்ற புள்ளியா.. அல்லது டெல்லி என்ற புள்ளியா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஆனால் ஓபிஎஸ் - சசிகலா - டிடிவி மூவரும் விரைவில் இணைய போகிறார்கள்.. அதற்கான கவுண்டவுன் தொடங்கிவிட்டது என்றே அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications