பரந்தூர் விசிட் சக்ஸஸ்! அடுத்து வேங்கைவயல் செல்கிறாரா விஜய்? பக்கா வியூகம்?
சென்னை: புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் குறிப்பிட்ட ஒரு பிரிவினர் குடிக்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் இதுவரை மற்றொரு பிரிவினர் கைது செய்யப்படாத நிலையில் பரந்தூர் விவசாயிகளை சந்தித்ததை போல் வேங்கைவயலில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க தவெக தலைவர் விஜய் செல்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கினார். இந்த நிலையில் 11 மாதங்கள் ஆன நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கட்சியின் முதல் மாநில மாநாடு நடந்து முடிந்தது.

அந்த மாநாட்டில் வைத்து கட்சியின் கொள்கை, தங்கள் அரசியல் எதிரி யார் என்பதை கடுமையாக விமர்சித்து விஜய் தெரிவித்திருந்தார். அது போல் அடுத்தடுத்து தமிழகத்தில் நடந்த சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கும் குரல் கொடுத்தார்.
மழை, வெள்ளத்தின் போது பனையூர் கட்சி அலுவலகத்திற்கு பாதிக்கப்பட்ட மக்களை வரவழைத்து நிதியுதவிகளை வழங்கினார். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்காமல் பனையூரிலும் அறிக்கையிலும் அரசியல் நடத்துகிறார் விஜய் என்ற விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில் இரு தினங்களுக்கு முதல் முறையாக கள அரசியலுக்கு விஜய் வந்தார். அதாவது பரந்தூரில் 2ஆவது விமான நிலையம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து 13 கிராமங்களை சேர்ந்த மக்கள் தொடர்ந்து 910 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அவர்களை களத்திற்கே போய் சந்திக்க விஜய்க்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து பரந்தூர் அருகே ஒரு திருமண மண்டபத்தில் மக்களை சந்தித்தார். பிரச்சார வாகனத்தில் வந்த அவர் பொதுமக்களிடையே மைக்கில் பேசினார்.
அப்போது திமுக அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். டங்கஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் போட்டுள்ள நிலையில் பரந்தூர் நில கையகப்படுத்த துடிப்பதை பார்த்தால் ஏதோ லாபம் இருக்கிறது என விஜய் விமர்சித்திருந்தார்.
மேலும் நாடகம் போடுவதில் இவர்கள் (திமுக) கில்லாடிகளாச்சே என்றும் கடுமையாக பேசியிருந்தார். விஜய்யின் இந்த நிகழ்வுக்கு பாசிட்டிவ் கமென்ட்ஸ் வந்ததால் அவர் குஷியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் சமூகவலைதளங்களிலும் விஜய் கேட்கும் கேள்விகள் எல்லாம் சரிதான் என்கிறார்கள்.
ஏதோ லாபம் இருக்கு என பேசியதுமே பரந்தூரில் தங்கள் நிறுவனத்திற்கு எந்த நிலங்களும் கிடையாது என ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கமளிக்கிறார்கள். அது போல் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படும் என தமிழக அரசு நேற்று விளக்கம் அளித்துள்ளது.
எனவே பரந்தூருக்கு தனது வருகையை அடுத்து இத்தனை விஷயங்கள் நடந்துள்ளதால் விஜய் தான் எடுத்து வைத்த அடி சிறப்பாக மாறியுள்ளதாக கருதுகிறாராம். அது போல் கிராம மக்களும் "எங்கள் 13 கிராமத்தினரின் ஓட்டுக்களும் விஜய் கட்சிக்குத்தான்" என தெரிவித்திருந்தனர். இது யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்!
இந்த நிலையில் அடுத்தபடியாக வேங்கைவயலுக்கும் விஜய் செல்ல வேண்டும் என தொண்டர்கள் விரும்புகிறார்களாம். பரந்தூருக்கு பிறகு வேங்கைவயல் என டிவிட்டரிலும் விஜய்க்கு கோரிக்கைகள் பறக்கின்றனவாம். எனவே வேங்கைவயலுக்கும் விஜய் செல்லக் கூடும் என சொல்லப்படுகிறது. வேங்கைவயல் சம்பவத்தில் தவறிழைத்தவர்கள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இதுகுறித்து மரபணு சோதனை உள்ளிட்டவை நடத்தப்பட்ட நிலையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் வேங்கைவயல் சம்பவத்தில் தமிழக அரசு அரசியல் ஆதாயம் தேடுவதாக விமர்சித்து வருகிறார்கள். இப்படி ஆளும் கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கும் நிலையில் வேங்கைவயலில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதன் மூலம் அவர்களின் ஆதரவை பெறலாம் என்பதும் ஒரு யுத்திதான் என்கிறார்கள். ஆனால் அவை தேர்தலில் வாக்குகளாக மாறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.











Click it and Unblock the Notifications