அம்மா செயல்தலைவர்?.. மகன் இளைஞரணி செயலாளர்?.. 2024 லோக்சபா தேர்தலில் புத்துயிர் பெறுமா தேமுதிக?
சென்னை: தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனுக்கு இளைஞரணி செயலாளர் பதவி வழங்கப்படலாம் என சொல்லப்படுகிறது.
விஜயகாந்த் என்றாலே இரக்கம், போர் குணம், நம்பியோரை கைவிடாத குணம், அள்ளிக் கொடுக்கும் வள்ளல் என இப்படி எத்தனையோ நல்ல குணங்களை சொல்லிக் கொள்ளலாம்.
பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்த புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார். தனது படத்தால் டிஸ்டிபியூட்டருக்கு நஷ்டம் ஏற்பட்டால் அதை சரி செய்வார். தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டலும் அடுத்த படத்தில் சம்பளம் பெறாமல் நடித்துக் கொடுத்துவிடுவார்.

வானத்தை போல மனம்
அந்த அளவுக்கு "வானத்தை போல மனம் படைத்த மன்னவன்" அவர். தற்போது உடல்நிலை பாதிப்பால் சிங்கம் போன்ற கர்ஜனை இல்லாமல் குழந்தையாக மாறிவிட்ட விஜயகாந்தை பார்க்கவே கண்களில் கண்ணீர் வருகிறது என்கிறார்கள் தொண்டர்கள். உடல்நலம் பாதிப்பால் கட்சிப் பணிகளில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தலைமை நிர்வாகம்
இதனால் தலைமை நிர்வாகத்தில் மாற்றங்களை ஏற்படுத்த பிரேமலதா விஜயகாந்த் முடிவு செய்திருக்கிறாராம். இது குறித்து கட்சி மாவட்டச் செயலாளர்களிடம் பிரேமலதா கருத்து கேட்டதாகவும் தெரிகிறது. அதில மா.செக்களும் ஓகே சொல்லிவிட்டனராம். இதனால் விரைவில் பொதுக் குழு கூட்டம் கூட்டப்படுகிறதாம்.

செயல் தலைவராகிறாரா பிரேமலதா
அதாவது பிரேமலதா செயல் தலைவராகிறாராம். பொருளாளர் பதவி எல்.கே.சுதீஷுக்கு தர வாய்ப்பிருக்கிறதாம். விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன சிறிய வயதில் சினிமாவில் விஜயகாந்தை பார்த்தது போலவே இருக்கிறார். அது மட்டுமல்லாமல் மாற்றுக் கட்சியினரை மரியாதை இல்லாமல் தைரியமாக விமர்சித்துள்ளார்.

சூறாவளி சுற்றுப்பயணம்
தேமுதிக சந்தித்த தேர்தல்களுக்கு சூறாவளி பிரச்சாரத்தையும் விஜய பிரபாகரன் செய்துள்ளார். எனவே அவருக்கு முக்கிய பதவி கொடுக்கப்பட வேண்டும் என்பது கட்சியின் மூத்த நிர்வாகிகளின் கோரிக்கையாகும். இதனால் சுதீஷ் வகித்து வந்த இளைஞரணி செயலாளர் பதவியை விஜய பிரபாகரனுக்கு வழங்கலாம் என தெரிகிறது. திமுகவில் செயல் தலைவர் பதவியை ஸ்டாலின் வகித்தது போல அந்த பதவியில் பிரேமலதாவும் திமுக இளைஞரணி தலைவர் பதவி வகித்து வரும் உதயநிதி ஸ்டாலினை போல் தேமுதிகவில் விஜய பிரபாகரனும் வகிக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் அதள பாதாளத்தில உள்ள தேமுதிகவுக்கு புத்துயிர் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எனவே பொதுக் குழு கூடினால் மட்டுமே யாருக்கு என்ன பதவி என்பது தெரியவரும்.












Click it and Unblock the Notifications