காமராஜர் குறித்து சர்ச்சை பேச்சு.. யூடியூபர் முக்தார் கைது செய்யப்படுவாரா? நாடார் அமைப்புகள் ஆவேசம்
சென்னை: தனியார் யூடியூப் சேனலின் நெறியாளர் முக்தார் அகமது, முன்னாள் முதல்வர் கல்விக்கண் தந்த காமராஜரைப் பற்றிய தவறான தகவலை அவதூறாக பேசியதுடன் நாடார் சமுதாய மக்களையும் ஆதாரமில்லாமல் உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டதாக நாடார் அமைப்புகள் கடும் கோபத்தில் இருக்கின்றன. நேரடியாகவே காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளன. யூடியூபர் முக்தார் அகமதுவை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.
தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்கத்தின் தலைவர் சந்திரன் ஜெயபால், நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத்தலைவர் ஆனந்தராஜ், பொதுச்செயலாளர் சந்திரசேகர பாண்டியன், தமிழ்நாடு நாடார் சங்கத்தலைவர் முத்துரமேஷ், தேசிய நாடார் சங்க பொதுச்செயலாளர் விஜயகுமார், திருவான்மியூர் வட்டார நாடார் ஐக்கிய சங்கத்தலைவர் திருப்புகழ், ஆலந்தூர் வட்டார நாடார் ஐக்கிய சங்கத்தலைவர் கணேசன் உள்ளிட்ட ஏராளமானோர் திரண்டு வந்து நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.

அந்த புகார் மனுவில் கூறுகையில், சமூக வலைதளங்களில் சில நாட்களாக மறைந்த முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் செயல்திட்டங்களையும், அவர் ஆற்றிய மக்கள் பணியையும் சிதைக்கும் நோக்கத்தில் திட்டமிட்டு அவதூறு தகவல்கள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளது. காமராஜர் கட்டிய அணைகள் ஓட்டை விழுந்து பயனற்றவை என்றும், அவரது அரசு நிர்வாகத்தில் ஊழல் முறைகேடு நடந்ததாகவும் அதனால்தான் 1963-ம் ஆண்டு அவர் முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் பல்வேறு அவதூறு கருத்துகள் பரப்பப்படுகிறது.
இதுபோன்ற அவதூறு கருத்துகள் மூலம் தமிழ்நாட்டில் சாதிய, மத மோதல்களை உருவாக்கி சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் முயற்சிகள் நடக்கிறது. இதற்கு முக்கிய காரணமான நபர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த புகார் மனு குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு 'சைபர்' கிரைம் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நாடார் மஹாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், "பொது வாழ்க்கைக்கு வந்ததிலிருந்தே தன்னைப் பெற்ற தாயைக்கூட கவனிக்காமல் காந்திய வழியில் தாய்நாட்டைப் பற்றி மட்டுமே சதா சிந்தித்து செயல்பட்டு வந்த காமராஜரை தனது சாதி பாசத்தால் செயல்பட்டு தான் சார்ந்துள்ள சாதியினருக்கு சலுகைகள் வழங்கினார் என்று எள்ளளவுகூட உண்மையில்லாத அபாண்டமான பழியினை பெருந்தலைவர் மீது சுமத்துவது போன்று சமீபகாலமாக திரைப்படங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பெருந்தலைவரைப் பற்றி அவதூறான செய்திகள் திட்டமிட்டே பரப்பப்பட்டு வருகிறது.
சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலின் நெறியாளர் முக்தார் அகமது தமிழ்நாட்டின் பொற்கால ஆட்சி நடத்திய முன்னாள் முதல்வர் கல்விக்கண் தந்த காமராஜரைப் பற்றிய தவறான தகவலை அவதூறாக பேசியதுடன் நாடார் சமுதாய மக்களையும் ஆதாரமில்லாமல் உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். இது சாதிய தீண்டல் வன்கொடுமையாகும்.
எனவே, அவர் வெளியிட்ட பதிவிற்கு எங்களது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். முக்தார் அகமதுவை கைது செய்து அவர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அவரைப்போன்று சாதி துவேசங்கள் செய்து, சமூகத்தில் அமைதியை குலைத்து சுயலாபம் அடைய நினைக்கும் மனிதத்தன்மையற்ற நபர்களின் செயல்களை தடுத்து நிறுத்த முடியும். தமிழ்நாட்டில் சாதி துவேசங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முக்தார் அகமது மீது சட்டப்படியான கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழ்நாடு முதல்-அமைச்சரை கேட்டுக்கொள்கிறோம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications