காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் கொடுமை! காங்கிரஸ் திவ்யா மருந்தையாவுக்கு நேர்ந்த கதி! உதவி செய்யாத போலீஸ்
சென்னை: மைசூரில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு பெட்டிக்கு வந்த சில இளைஞர்கள் தங்களிடம் தகராறில் ஈடுபட்டு அவதூறாக பேசியதாக காங்கிரஸ் நிர்வாகி திவ்யா மருந்தையா புகார் அளித்துள்ளார். கன்னடத்தில் பேசச் சொல்லி தாக்குதல் நடத்த துணியும் அளவுக்கு நிலைமை கைமீறிப் போனதாம்.
இந்த சம்பவம் நடக்கும் போதே திவ்யா தனது ட்விட்டரில் தங்களுக்கு உதவி வேண்டும், பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டும் ரயில்வே பாதுகாப்பு படையினர் கூட உதவிக்கு வரவில்லை என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நீள் பதிவில் கூறியிருப்பதாவது: மைசூரில் இருந்து சென்னை செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் விரைவு ரயிலில் எஸ்1 பெட்டியில் நான் ஞாயிற்றுக்கிழமை இரவு பயணம் செய்தேன். அப்போது முன்பதிவு செய்த அந்த பெட்டிக்கு இரு இளைஞர்கள் வந்தனர்.
அவர்கள் இருவரும் ஆரம்பத்தில் அங்கு தூங்கிக் கொண்டிருந்த பயணிகளிடம் இடம் கேட்டு சண்டையிட்டனர். பிறகு அவர்கள் யாருக்கோ போன் செய்து அடுத்த ரயில் நிலையத்தில் நின்று இந்த கோச்சில் ஏறுமாறும் அழைத்தனர்.
இதனால் அங்கிருந்த ஆண், பெண் பயணிகளுக்கு சற்று பயம் ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த பயணிகளில் ஒருவர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தார். அப்போது அந்த பெட்டிக்கு ரயில் பாதுகாப்பு பணியாளர் வந்தார். அவரிடம் நடந்தவற்றை கூறியும் அவர் உதவி செய்ய முன்வரவில்லை.
பிறகு அந்த இரு நபர்களும் அந்த பிரச்சினையை தமிழ்- கன்னட விவகாரமாக மாற்றிவிட்டனர். நாங்கள் அவர்களை தமிழில் பேசுமாறு வற்புறுத்தியதாக கூறி, எங்களை கன்னடத்தில் பேசுமாறு திட்டினர்.மேலும் அந்த பெட்டியில் இருந்த ஒவ்வொருவரையும் தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்தனர். எங்களுக்கு உதவுங்கள் என கேட்டும் யாரும் வரவில்லை என்கிறார் திவ்யா.
நள்ளிரவு நேரத்தில் பெண்கள் பயணிக்கும் அந்த பெட்டியில் இது போன்ற முன்பதிவு செய்யப்படாத நபர்களால் பிரச்சினை ஏற்பட்ட போதிலும் ரயில்வே பாதுகாப்பு படை உதவி செய்ய முன்வரவில்லை என்பது கவலையளிப்பதாக திவ்யா தெரிவித்தார்.
139, 138, 198 என உதவி எண்களை அழைத்தும் எங்களுக்கு யாரும் உதவி செய்ய வரவில்லை. இந்த பிரச்சினைக்கு நடுவே ரயில் அடுத்த ரயில் நிலையத்தை அடைந்ததும் அந்த இருவருடன் மற்ற இளைஞர்களும் எஸ்1 பெட்டியில் ஏறினர்.
அப்போதுதான் ரயில்வே போலீஸார் அந்த பெட்டிக்கு வந்தனர். ஆனால் அவர்கள் அந்த இளைஞர்களால் பாதிக்கப்பட்ட பெண்களை வீடியோ எடுத்தனர். அந்த இரு இளைஞர்களையும் முன்பதிவு பெட்டியில் இருந்து இறங்குமாறு போலீஸார் கூறவே இல்லை.

100 க்கு அழைத்தால் அங்கிருந்த போலீஸார், "ரயில்வே போலீஸாரை அழைக்காமல் எங்களை ஏன் அழைக்கிறீர்கள்" என திட்டினர். இது போல் ரயில்வே போலீஸாரும் போலீஸாரும் இருந்தால் பெண் பயணிகள் நள்ளிரவு நேரங்களில் எப்படி பாதுகாப்பாக பயணிக்க முடியும்? என திவ்யா கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து சமூகவலைதளங்களில் வைரலானதை அடுத்து இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவரை கேட்ட போது அவரோ இந்த விவகாரம் நடந்தது தென்மேற்கு ரயில்வே பகுதிக்குள்பட்டதாகும் என தெரிவித்துவிட்டார்.
இந்த எஸ் 1 பெட்டியில் நடந்தவற்றை புகைப்படங்களாகவும் வீடியோவாகவும் திவ்யா வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் இரு இளைஞர்களும் கண்களில் ஆக்ரோஷத்துடன் பயணிகளை திட்டுகிறார்கள். அவர்களை சில பயணிகள் அமைதியாக இருக்குமாறு கேட்டும் அவர்கள் ஆக்ரோஷத்தை கைவிடவே இல்லை.
அண்மைக்காலமாக வட இந்தியாவில் ஓடும் ரயில்களில் இளைஞர்கள், முன்பதிவு பெட்டிகளில் ஏறிக் கொண்டு இடம் விட மறுப்பார்கள். மீறி கேட்டால் கண்டபடி பேசுவார்கள். ஆனால் தென்னிந்திய ரயிலில் கன்னட இளைஞர்கள் இருவர் இது போல் முன்பதிவு பெட்டியில் தகராறு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் மைசூர் மற்றும் பெங்களூர் இடையேயான கர்நாடக பகுதிக்குள் நடந்தது. மண்டியா போன்ற இந்த பகுதிகளிலுள்ள மாவட்டங்களில் ரயில் பயணிக்கும்போது இதுபோன்ற உள்ளூர்வாசிகளின் தொல்லைகளை அனுபவித்துள்ளதாக பலரும் தெரிவிக்கிறார்கள். இந்த பிராந்தியம், கல்வியறிவில்லாத நபர்களால் சூழப்பட்ட பகுதியாக காட்சியளிக்கிறது என்று பலரும் தங்கள் அனுபவத்தை வைத்து கொட்டித் தீர்த்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications