லேட்டாக்க வேண்டாம்.. பொதுச்செயலாளர் ஆனதும் எடப்பாடி வேகம்! இது மட்டும் நடந்தா.. ஓபிஎஸ் கேம் ஓவர்!
சென்னை: அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள், மாற்றங்கள் குறித்த ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் அதிமுக தாக்கல் செய்தது. திருத்தம் செய்யப்பட்ட விதிகள் பற்றிய ஆவணங்கள் எடப்பாடி பழனிசாமி மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதை தேர்தல் ஆணையம் ஏற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சட்ட ரீதியாக பெரிய போராட்டங்களுக்கு இது வழிவகுக்க போகிறது. இந்த மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்கும் பட்சத்தில் அது ஓ பன்னீர்செல்வத்திற்கு பெரிய பின்னடைவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நேற்று சென்னை வானகரத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அதிகாரபூர்வமாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

மாற்றம்
ஓபிஎஸ் எதிர்ப்பிற்கு இடையில் உயர் நீதிமன்ற அனுமதியோடு கூட்டம் நடைபெற்றது. அதிமுக செயற்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை உருவாக்குவது தொடர்பாக தற்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த தீர்மானத்திற்கு பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்பின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

4 மாதங்கள்
இன்னும் 4 மாதங்களில் பொதுச்செயலாளரை தொண்டர்கள் தேர்வு செய்யும் வகையில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தல் அதிகாரிகளாக நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமனை நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட 10 ஆண்டுகள் கட்சியின் உறுப்பினராக இருக்க வேண்டும். தலைமைக் கழக பொறுப்புகளில் தொடர்ந்து 5 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் என்று விதி கொண்டு வரப்பட்டுள்ளது.

விதிகள் என்ன?
10 மாவட்ட செயலாளர்கள் போட்டியிட உள்ள வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று விதி கொண்டு வரப்பட்டுள்ளது. அதோடு இந்த கூட்டத்தின் முடிவில் ஓ பன்னீர்செல்வத்தை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தது நீக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதாவது அதிமுகவின் பொருளாளர், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு இருக்கிறார். மேலும் வைத்தியலிங்கம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.

பொருளாளர்
பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள், மாற்றங்கள் குறித்த ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் அதிமுக தாக்கல் செய்தது. திருத்தம் செய்யப்பட்ட விதிகள் பற்றிய ஆவணங்கள் எடப்பாடி பழனிசாமி மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் என்பதற்கான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கப்படுமா?
பொருளாளர் பதவியில் திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டதற்கான ஆவணமும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொதுவாக பொதுக்குழு மாற்றங்கள் ஆவணமாக மாற்றப்பட்டு 2-3 நாட்களுக்கு பின்னர்தான் தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கப்படும். ஆனால் எடப்பாடி தரப்பு கொஞ்சம் கூட தாமதிக்காமல்.. பொதுக்குழு நடந்த இரவே ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது, இந்த மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அதிகார்பூரவமாக மாற்றம் அமலுக்கு வரும். இதை எதிர்த்து ஏற்கனவே ஓ பன்னீர்செல்வம் தரப்பு தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்கும் பட்சத்தில் அது ஓ பன்னீர்செல்வத்திற்கு பெரிய பின்னடைவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications