பாடலாசிரியர்களை இளையராஜா மதிக்கவே மாட்டார்.. பிரபல எழுத்தாளர் பகீர் குற்றச்சாட்டு
சென்னை: இளையராஜா பாடலாசிரியரை இப்படித்தான் நடத்துவார் என எழுத்தாளர் ஜெயமோகன் பேட்டி அளித்துள்ளார்.
அண்மைக்காலமாக இசைஞானி இளையராஜாவை சுற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. இதுவரை ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு இசையமைத்தவர். அதில் சில பாடல்களை பாடியும் உள்ளார். இந்த நிலையில் இளையராஜாவின் 4500 பாடல்களை எக்கோ அண்ட் அகி நிறுவனம் பயன்படுத்திக் கொள்ளலாம் என ஒரு ஒப்பந்தம் இளையராஜாவுக்கும் அந்த நிறுவனத்திற்கும் இடையே ஏற்படுத்தப்பட்டது.

இந்த ஒப்பந்தம் 2014 ஆம் ஆண்டுடன் முடிவடைந்தது. ஒப்பந்தம் முடிந்த பிறகும் தன்னுடைய பாடல்களை எக்கோ அண்ட் அகி நிறுவனம் பயன்படுத்துவதாக சென்னை நீதிமன்றத்தில் இளையராஜா மனு தாக்கல் செய்தார்.
அதன் அடிப்படையில் தயாரிப்பாளரிடமிருந்து உரிய அனுமதி பெற்று இளையராஜா இசையை பயன்படுத்திக் கொள்ளலாம். இளையராஜாவுக்கும் இசை பாடல்கள் மீதும் தார்மீக சிறப்புரிமை இருக்கிறது என அந்த வழக்கில் கூறப்பட்டிருந்தது. எனினும் இதை எதிர்த்து இளையராஜா வழக்கு தொடர்ந்தார்.
இந்த நிலையில் மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் தனது இசையை தன் அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் மீது இளையராஜா புகார் அளித்திருந்தார். ஆனால் குணா படத்தின் தயாரிப்பாளரிடம் உரிய அனுமதி பெற்ற பிறகு நாங்கள் பயன்படுத்தினோம் என மஞ்சுமெல் பாய்ஸ் பட குழு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இளையராஜா குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: எம்.எஸ். விஸ்வநாதனுக்கும் கண்ணதாசனுக்கும் இடையே சரியான புரிதல் இருந்தது. அவர்களுக்குப் பிறகு அந்த ஒரு புரிதல் இப்போது உள்ள காலகட்டத்தில் இருக்கும் இசையமைப்பாளர்களுக்கும் பாடலாசிரியர்களுக்கும் இல்லை.
இசையமைப்பாளர்கள் பீடத்தில் அமர்ந்திருப்பவர்கள் போன்றும் பாடலாசிரியர்கள் அவர்களுக்கு பணிவிடை செய்பவர்களாகவும் பார்க்கப்படுகிறார்கள். இப்படி இளையராஜாவின் முன் பல பாடலாசிரியர்கள் அமர்ந்திருப்பதை நான் பார்த்திருக்கிறேன். எம்.எஸ். விஸ்வநாதன் தனக்கு இணை கண்ணதாசன் என கூறியிருக்கிறார்.
ஆனால் அந்த புரிதல் இப்போது யாருக்குமே இருப்பதில்லை. இளையராஜாவை நான் கடவுள் போல் பார்க்கிறேன். அவர் மீது எனக்கு நல்ல மரியாதை உள்ளது. ஆனால் பல பாடலாசிரியர்களை இளையராஜா மதிப்பதே கிடையாது. பாடலாசிரியர்களும் கலைஞர்களே என்பதை இளையராஜா ஏற்க வேண்டும். இவ்வாறு ஜெயமோகன் தெரிவித்துள்ளார். எழுத்தாளர் ஜெயமோகன், மஞ்சுமெல் பாய்ஸ் குறித்து அவதூறாக பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications