வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும்.. தேர்தல் ஆணையம்
சென்னை: வாக்குச்சாவடியில் உள்ள, வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த ஐந்து வருடம் தமிழகத்தை ஆளப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் இந்த தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று மக்கள் மிகுந்த ஆர்வமுடன் உள்ளனர். காலை 7மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.
நீங்கள் வாக்களிப்பதற்காக செல்லும் போது உங்கள் அடையாளத்தை நிரூபிப்பதற்காக வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை கொண்டு செல்ல வேண்டும். ஒருவேளை அந்த அட்டை இல்லாவிட்டால், ஆதார் அட்டை, ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் பணி அட்டை, வங்கி கணக்கு புத்தகம், மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு ஆகிய ஏதேனும் ஒன்றை கொண்டு செல்லலாம்.
இதேபோல் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், பொதுத்துறை நிறுவனங்களால் வரையறுக்கப்பட்ட பணி அடையாள அட்டைகள், நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற அலுவலக அடையாள அட்டை போன்ற ஏதாவது ஒரு ஆவணத்தை எடுத்து செல்லலாம்.
எனினும் வாக்குச்சாவடியில் உள்ள, வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.