தலைக்கேறிய போதை.. பல்லாவரம் போலீஸை பாடாய்படுத்திய சூர்யா.. என்னம்மா இப்படி பன்றீங்களேமா!
சென்னை: சென்னை பல்லாவரம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட போதை ஆசாமி, காவல் நிலையத்தின் மொட்டை மாடியில் ஏறி நின்று தற்கொலை செய்யப்போவதாக மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பல்லாவரத்தில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுப்பதாக அவரது தாயார் தரப்பில் இருந்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்துள்ளது.

அந்த புகாரின் அடிப்படையில் பல்லாவரம் போலீசார் அந்தப் பகுதிக்கு விரைந்து சென்று குறிப்பிட்ட நபரை பிடித்து வந்து, டி-3 பல்லாவரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் அவர் பெயர் சூர்யா (28 வயது) என்பதும், அவர் பல்லாவரம் பகுதியில் உடற்பயிற்சி மையத்தில் பயிற்சியாளராக இருந்தது தெரியவந்தது.
இவர் ஆம்பூரை சேர்ந்தவர் என்பதும், மனைவி அண்மையில் சண்டை போட்டு அவரது தாய் வீட்டுக்கு பிரிந்து சென்றுவிட்டார் என்பதும், அதனால் வீட்டின் மாடியில் ஏறி தற்கொலைக்கு முயற்சித்தததும் தெரியவந்தது.
ஜீம் பயிற்சியாளர் சூர்யாவை விசாரணைக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து வரும் போதே அவர் போதையில் இருந்தது காவலர்களுக்கு தெரியவந்தது. அத்துடன் சூர்யா அதிக அளவு ஸ்டீராய்டு ஊசியை பயன்படுத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. விசாரணையின் போது போலீசாரிடம் சூர்யா கடுமையான ரகளையில் ஈடுபட்டார். இதையடுத்து பெயர் உள்ளிட்ட விவரங்களை பெற்றுக்கொண்ட போலீசார், நாளைக்கு வருமாறு கூறியுள்ளனர்.
அப்போது சூர்யா திடீரென பல்லாவரம் காவல் நிலையத்தின் 3 வது மாடியில் ஏறினார். மொட்டை மாடியில் நின்று கொண்டு சாகப்போவதாக போலீசாரை மிரட்டி உள்ளார்.
கீழே இறங்குமாறு போலீசார் எவ்வளவே மன்றாடியும் இறங்கவில்லை. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மொட்டை மாடியில் நின்று கொண்டு குதித்து சாகப்போவதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து கேள்விப்பட்டு உயர் காவல் அதிகாரிகள் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனாலும் சூர்யா கீழே இறங்கவில்லை. தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பல்லாவரம் உதவி ஆய்வாளர் வெங்கட் குமார் தொடர்ந்து சூர்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், 3 மணி நேரத்திற்கு பிறகு சூர்யாவை பத்திரமாக மீட்டனர்.












Click it and Unblock the Notifications