சிஎஸ்கே அணி தோல்வியை கிண்டல் செய்ததால் இளைஞர் கொலையா? சென்னை சம்பவம்.. விசாரணையில் ஷாக் ‘ட்விஸ்ட்’!
சென்னை: சென்னை துரைப்பாக்கத்தில் சிஎஸ்கே - ஆர்சிபி இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் பெண் விவகாரம் இருப்பதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை பெருங்குடி பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் 7 பேர் கல்லுக்குட்டை பகுதியில் கடந்த 28 ஆம் தேதி இரவு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை பார்த்துக் கொண்டே ஒன்றாக மது அருந்தி உள்ளனர். அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்ததால் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் வெற்றி குறித்து ஜீவரத்தினம் என்ற இளைஞர் பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் மது அருந்திக் கொண்டிருந்த இளைஞர்களுக்கு இடையே வாக்குவாதம் வெடித்து மோதல் ஏற்பட்டது. இதில் ஜீவரத்தினத்தை ஐந்து நண்பர்கள் சேர்ந்து தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார். மீட்கப்பட்ட ஜீவரத்தினம் உடனடியாக சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
துரைப்பாக்கம் போலீசார் இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில் ஐபிஎல் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தபோது, அவரவர் ஆதரிக்கும் அணிகளை குறித்து பேசுகையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது.
இதையடுத்து, அப்பு, கோகுல், ரமேஷ், அஜய், ஜெகதீஷ் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் இதில் பெண் விவகாரம் ஒன்றும் இருந்தது தெரியவந்தது. அப்புவின் மனைவியிடம் ஜீவரத்தினம் நெருங்கிப் பழகி வந்ததால் இந்த கொலை நிகழ்ந்ததாகத் தெரியவந்துள்ளது.
மேலும், உயிரிழந்த ஜீவரத்தினம் மீது 9 திருட்டு வழக்குகள் இருப்பதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கொலை தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications