காலையிலேயே ஸ்தம்பித்த போக்குவரத்து.. இளைஞர் பலியால் உறவினர்கள் சாலை மறியல்.. பரபரத்த சென்னை!
சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தில் பால்கனி மேற்கூரை இடிந்து விழுந்து இளைஞர் பலியானதை அடுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கலங்கரை விளக்கம் லூப் சலை முதல் அடையாறு வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. காலை நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், பேச்சுவார்த்தைக்குப் பிறகு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இளைஞர் உயிரிழந்தார் .22 வயதான இளைஞர் குலாப் நேற்று இரவு தனது வீடு அருகே அமைந்துள்ள மசூதியில் தொழுகையை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த வழியில், திடீரென நான்காவது மாடியில் இருந்த பால்கனி மேற்கூரை இடிந்து அவர் தலை மீது விழுந்துள்ளது.

இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கிய அவரை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, இளைஞர் குலாபின் உறவினர்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல் காரணமாக சென்னை கலங்கரை விளக்கம் லூப் சாலையில் இருந்து அடையாறு வரை வாகனங்கள் நகர முடியாமல் வரிசை கட்டி நின்றன. மொத்தமாக போக்குவரத்து ஸ்தம்பித்தது. நீண்ட நேரம் போக்குவரத்து சிறிதும் நகராததால், பலரும் வாகனங்களை ஓரமாக நிறுத்திவிட்டு, அலுவலகங்களுக்கு நடந்தே செல்லத் தொடங்கினர்.
இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட இளைஞரின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மயிலாப்பூர் எம்.எல்.ஏ மயிலை வேலு மற்றும் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அடுக்குமாடி குடியிருப்பின் மேற்கூரை விழுந்து உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட வாக்குறுதிகள் அளித்ததன் அடிப்படையில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதையடுத்து, போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் போக்குவரத்துக் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் தற்போது போக்குவரத்து சீரடைந்து வருகிறது.
சென்னை பட்டினப்பாக்கத்தில் மேற்கூரை இடிந்து விபத்தில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு ரூபாய் 5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. 60 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்ததால் கட்டடம் சிதிலமடைந்த நிலையில் இருந்ததாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications