Sridhar Vembu: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு பிடிக்காட்டி பணிநீக்கமா? கொதித்த ஸ்ரீதர் வேம்பு!
சென்னை: திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் சொன்ன தீர்ப்பில் உடன்பாடு இருக்கிறதோ இல்லையோ அவரை பணிநீக்கம் செய்ய சொல்வது தவறு என ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீர்ப்பில் உடன்பாடு இருக்கிறதோ இல்லையோ, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பணிநீக்கம் செய்ய சொல்வது தவறு. நீதிபதி லஞ்சம் வாங்கினாரா, அவரது நடத்தை சரியில்லையா? தீர்ப்பு பிடிக்கவில்லை என்றால் மேல்முறையீடு செய்வதற்கு வழிமுறைகள் இருக்கின்றன. இதை அரசியல் ஆக்கக் கூடாது என ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

ஸ்ரீதர் வேம்பு சமூகம் சார்ந்த பிரச்சனைகள் குறித்து அடிக்கடி பேசி வருகிறார். அண்மையில் கூட அவர் ஆட்டிஸம் பாதிப்பு குறித்தும் தடுப்பூசி போடுவது குறித்தும் பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத்தின் போது மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் விளக்கேற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தீர்ப்பளித்திருந்தார்.
எனினும் தீபத்திருநாளின் போது எப்போதும் ஏற்றப்படும் உச்சி பிள்ளையார் கோயில் தீபத்தூணில்தான் தீபம் ஏற்றப்பட்டது. இதனால் பாஜக, இந்து முன்னணியினர் அதிர்ச்சி அடைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கிருந்த தடுப்புகளை உடைத்தெறிந்தனர். இதையடுத்து போலீஸார் அந்த சூழலை கட்டுக்குள் கொண்டு வந்து திருப்பரங்குன்றம் மலை பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டனர்.
இந்த நிலையில் நீதிபதியின் தீர்ப்பை அமல்படுத்தவில்லை என கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அரசுக்கு எதிராக மனுதாரர் ராமரவிக்குமார் தாக்கல் செய்திருந்தார். இது ஒரு புறமிருக்க, நீதிபதியின் தீர்ப்பு மத கலவரத்தை உண்டாக்கும் வகையில் இருப்பதாக கூறி அந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கக் கோரி திமுக- காங்கிரஸ்- சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் நோட்டீஸ் அளித்தனர். அதே நேரம் நீதிபதிக்கு பாஜக, அதன் கூட்டணி கட்சிகள், இந்து அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருந்தன.
நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவு தெரிவித்து உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் உள்பட 56 நீதிபதிகள் கூட்டறிக்கை வெளியிட்டிருந்தனர். தற்போது மேலும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் உள்ளிட்ட 36 பேர் நீதிபதிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அந்த 36 பேர், சுவாமிநாதனுக்கு ஆதரவாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பதவி நீக்க தீர்மானம் அச்சுறுத்தும் முயற்சி. நீதிபதிகளை அரசியல் எதிர்பார்ப்புகளுக்கு இணங்க கட்டாயப்படுத்தும் ஒரு வழிமுறையாக பதவி நீக்க அச்சுறுத்துலை பயன்படுத்துவது அரசியலமைப்பு சட்டத்தை மீறும் செயலாகும்.
பதவியில் இருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் தனது நீதித்துறை கடமையைச் செய்ததற்காக அவரை பதவி நீக்கம் செய்வதா? இது வெட்கக்கேடான முயற்சி. இது தொடர அனுமதிக்கப்பட்டால், ஜனநாயகம் மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்தை பாதிக்கும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications