1952 முதல் அனைத்து சட்டமன்ற தேர்தல்களிலும் வாக்களித்த 105 வயது தாத்தா மாரப்ப கவுண்டர்
கோவை: 1952 முதல் 2021 சட்டமன்ற தேர்தல் வரை தவறாது வாக்களித்த பெருமைக்குரியவர் மாரப்ப கவுண்டர். இவருக்கு வயது 105. இப்போது தனது வாக்கை பதிவு செய்தார். அதுவும் தள்ளாத வயதில் நீண்ட தூரம் நடந்து வந்து வரிசையில் நின்று வாக்களித்தார்.
Recommended Video
கோவை கருப்பராயன் பாளையத்தைச் சேர்ந்த மாரப்ப கவுண்டர் 1916 ஆம் ஆண்டு ஜீன் 1 ஆம் தேதி பிறந்தவர். தற்போது அவரது வயது 105. இவரது பிறந்த தேதியை அவரது பெற்றோர்கள் ஓலையில் தேதி உள்ளிட்ட விபரங்கள் தமிழில் எழுதப்பட்டிருக்கின்றன. விவசாயியான இவருக்கு 1 மகன், 3 மகள்கள், 4 பேரன்கள் மற்றும் 4 பேத்திகள் உள்ளனர். காமராஜர் மற்றும் காந்தியடிகள் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களின் பங்களிப்புகளையும் தான் பார்த்துள்ளதாக கூறினார்.
மக்களுக்கு நல்லது செய்யும் ஆட்சியாளர்களைத் தேர்வு செய்ய அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என அனைவரையும் வலியுறுத்தினார். தள்ளாத வயதிலும் தனது வீட்டிலிருந்து 2000 அடி தூரம் நடந்து சென்று , கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளோடு மாரப்ப கவுண்டர் தனது ஜனநாயகக்கடமையை ஆற்றினார்.
105 வயதானவர் வாக்களித்து செல்கிறார் என தேர்தல் நடத்தும் அலுவலர் சொன்னதும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் அவரது காலில் விழுந்து ஆசி பெற்றனர். 105 வயதில் ஓட்டுப்போட்டு திரும்பியவரை, கருப்பராயன்பாளையத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் பெருமையோடு பார்த்தனர்.