கோவை பிரபல மருத்துவமனையில் இளைஞர் அடித்துக் கொலை.. கதறிய மனைவி.. காவலாளிகள் உட்பட 12 பேர் கைது!
கோவை: கோவையில் தனியார் மருத்துவமனையில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட நிலையில், காவலாளிகள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருட முயன்றதால் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜா என்கிற மணி. இவரது மனைவி சுகன்யா. இவருக்கு பள்ளி செல்லும் வயதில் ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். ராஜா தனது குடும்பத்தினருடன் கோவை காந்திமாநகர் பகுதியில் தற்போது வசித்து வந்துள்ளார். ராஜா நேற்று முன்தினம் அவினாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்குள்ள இரும்பு கம்பிகளை திருட முயற்சித்ததாக மருத்துவமனை செக்யூரிட்டிகள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினர் அவரை பிடித்து கடுமையாக அடித்ததாக தெரிகிறது.

கடுமையாக தாக்கியதில் ராஜா மயக்கமடைந்ததாக கூறப்படும் நிலையில், அவரை அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த பீளமேடு காவல்துறையினர் விசாரணையை துவக்கி உள்ளனர்.
இந்நிலையில் ராஜாவின் மனைவி மற்றும் குடும்பத்தினர் பீளமேடு காவல் நிலையத்திற்கு வந்து மருத்துவமனை நிர்வாகத்தினர் மீது புகார் அளித்தார். சிகிச்சைக்காக மருத்துமனைக்குச் சென்ற ராஜாவை அடித்துக் கொலை செய்து விட்டதாகவும் மருத்துவமனை மீதும், ராஜாவை தாக்கியவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளார்.
மேலும் மருத்துவமனை நிர்வாகத்தில் இருந்து மூன்று பேர் போலீஸ் என பொய் சொல்லி தனது வீட்டிற்கு வந்து விசாரித்து, தன்னை புகைப்படம் எடுத்துச் சென்றதாக கூறியுள்ளார். தொடர்ந்து மருத்துவமனைக்குச் சென்று தாங்கள் கேட்டதாகவும் பின்பு தான் தனது கணவர் இறந்து விட்டார் என்று எங்களிடம் கூறியதாக தெரிவித்தார்.
தனது கணவரை அடித்துக் கொன்றவர்கள் மீது, வீட்டிற்கு வந்த 3 பேர் மீதும், மருத்துவமனை நிர்வாகம், அதன் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றார். மாநகர காவல் துணை ஆணையர் தலைமையில் மருத்துவமனை செக்யூரிட்டிகள், நிர்வாகத்தினர் என 11 பேரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது.
விசாரணையில், ராஜா, மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் காவலர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதைத்தொடர்ந்து, மருத்துவமனை துணை தலைவர் நாராயணன் உள்ளிட்ட 15 பேர் மீது பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் காவலாளிகள் உள்ளிட்ட 12 பேரை கைது செய்துள்ளனர்.
மேலும், ராஜா, அடித்துக் கொலை செய்யப்பட்டாரா, எப்போது இறந்தார் என்பது பற்றி அறிய, அவரது உடல் இஎஸ்ஐ மருத்துவமனையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று மதியத்திற்குள், பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications