அண்ணாமலை வேட்பு மனுவில் செய்த 2 மிகப்பெரிய பிழைகள்.. திமுக எதுவுமே பேசல.. கொந்தளித்த நாதக வேட்பாளர்!
கோவை: கோவை லோக்சபா தொகுதியில் அண்ணாமலையின் வேட்பு மனுவில் ஏகப்பட்ட பிழைகள் இருந்ததாகவும், ஆனால் தங்கள் ஆட்சேபனையை கண்டுகொள்ளாமல் அண்ணாமலையின் வேட்பு மனு ஏற்றுக்கொண்டனர் என்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளார் கலாமணி ஜெகநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை லோக்சபா தொகுதியில் திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன், பாஜக சார்பில் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி சார்பில் கலாமணி ஜெகநாதன் உள்ளிட்டோர் களம் காண்கின்றனர். இதனால் ஸ்டார் தொகுதி அந்தஸ்தைப் பெற்றுள்ளது கோவை நாடாளுமன்றத் தொகுதி. இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் வேட்பு மனுக்கள் பரிசீலனை இன்று நடைபெற்றது.

கோவையில் பரபரப்பு: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. அப்போது பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்பு மனுவை ஏற்பதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். இதற்கு அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அண்ணாமலை வேட்பு மனுவில் விவரங்கள் முழுமையாக நிரப்பப்படவில்லை எனக் கூறி நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர்.
அண்ணாமலைக்கான வாக்கு எந்த தொகுதியில் இருக்கிறது என்பது வேட்புமனுவில் முறையாக தெரிவிக்கப்படவில்லை, அண்ணாமலையின் வேட்பு மனுவும் முழுமையாக முறையாகவும் நிரப்பப்படவில்லை. எனவே அண்ணாமலையின் வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என அதிமுக, நாம் தமிழர் கட்சியினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தேர்தல் ஆணைய கையேட்டில் உள்ள விதிகளை சுட்டிக்காட்டி வாதிட்டனர்.
அண்ணாமலை வேட்பு மனு ஏற்பு: இதனால் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், அண்ணாமலையின் வேட்பு மனுவை ஏற்பதாக தேர்தல் அதிகாரி திட்டவட்டமாக அறிவித்தார். அப்படியெனில் எதற்காக இந்த விதிமுறைகளை கொடுத்துள்ளீர்கள். அதை சரியாக செய்யாத வேட்பாளரின் மனுவை எதற்காக ஏற்கிறீர்கள் என்று நாம் தமிழர் கட்சியினர் என கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நாம் தமிழர் கட்சி கொந்தளிப்பு: இதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த கோவை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலாமணி ஜெகநாதன், "அண்ணாமலையின் வேட்பு மனுவில் 2 பெரிய தவறுகள் உள்ளன. அண்ணாமலையின் படிவம் 26 தேர்தல் ஆணையம் கொடுத்த முறைப்படி இல்லை. அது முதல் தவறு. படிவம் 26ல் பக்கம் பார்ட் A, வரிசை எண் 5, பார்ட் B பக்கம் 30ல் முதல் தவறு.
அண்ணாமலையின் வாக்கு எங்கு உள்ளது, எந்த தொகுதியில் போட்டியிடுகிறார் என்பதைக் குறிப்பிடாமல், மொத்தமாக கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதி எனக் குறிப்பிட்டுள்ளனர். அது இரண்டாவது தவறு. வேட்பாளர்கள் அனைவருக்கும் தேர்தல் ஆணையம் ஒரு கையேட்டு புத்தகம் கொடுத்துள்ளது. அதில் பக்கம் 54, 55ல் எதற்காக எல்லாம் வேட்பு மனு நிராகரிக்கப்படலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
2 பெரிய தவறுகள்: தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ள ஃபார்மட்டில் இல்லை என்றால் வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும். ஆனால், அண்ணாமலை தாக்கல் செய்துள்ள படிவத்தில் பார்ட் 5ல் குற்ற வழக்குகள் குறித்த அட்டவணையில் தேர்தல் ஆணையம் கூறியுள்ள ஃபார்மட்டில் போடாமல் அவர்களாக ஒரு ஃபார்மட்டில் போட்டிருக்கிறார்கள்.
அதன்படி அண்ணாமலையின் வேட்பு மனுவை ஏற்கக்கூடாது. நாங்கள் ஆதாரப்பூர்வமாக எடுத்துரைத்தும் தேர்தல் அதிகாரி ஏற்கவில்லை. சுயேட்சைகளாக போட்டியிடுபவர்கள் சிறு தவறு செய்திருந்தாலும் வேட்பு மனுவை நிராகரிக்கின்றனர். ஆனால், அண்ணாமலையின் வேட்பு மனுவில் இவ்வளவு பெரிய தவறுகள் இருந்தும் ஏற்கின்றனர். தேர்தல் விதி அனைவருக்கும் ஒன்றுதானே? ஆளுங்கட்சி வேட்பாளர் என்றால் அனுமதிப்பார்களா?
திமுக எதிர்ப்பே காட்டவில்லை: நாங்கள் அவ்வளவு சொல்கிறோம். ஆனால், திமுக எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. அமைதியாகவே இருந்தனர். பாஜகவின் 'பி டீம்' திமுக தான். நாங்கள் அவ்வளவு குரல் கொடுத்தும் திமுகவினர் அமைதியாக இருக்கின்றனர். அண்ணாமலையின் வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என பிழைகளைச் சுட்டிக்காட்டி தேர்தல் அலுவலரிடம் கடிதம் அளித்துள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications