திடீரென வெடித்த பிரிட்ஜ்.. பொள்ளாச்சி தீ விபத்தில் சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் பலி
சென்னை அயனாவரம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த சபரிநாத் அவ்வப்போது கோவை மாவட்டம் பொள்ளாச்சி நல்லூர் கிராமத்தில் உள்ள வீட்டுக்கு வந்து செல்வார்.
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் சென்னை அயனாவரம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த சபரிநாத் மற்றும் கீழ் வீட்டில் வசித்து வந்த சாந்தி ஆகியோர் உடல் கருகி பலியாகி உள்ளனர். வீட்டில் பிரிட்ஜ் வெடித்து சிதறிய நிலையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளதால் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அயனாவரம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் சபரிநாத் (வயது 40). இவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நல்லூரை சேர்ந்தவர்.
சென்னையில் பணி செய்து வருவதால் சபரிநாத் அவ்வப்போது மட்டும் நல்லூர் வீட்டுக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் அவரது மனைவி உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார்.

விடுப்பில் சொந்த ஊர் சென்றவர்
பணி நிமித்தமாக சபரிநாத் சென்னையிலேயே இருப்பதால் அவர் நல்லூரில் உள்ள மாடி வீட்டின் ஒருபகுதியை வாடகைக்கு விட்டார். இன்னொரு பகுதியை மட்டும் பயன்படுத்தி வந்தார். அதாவது சொந்த ஊர் செல்லும்போது சபரிநாத் வீட்டின் மாடியில் தங்குவார். இந்நிலையில் தான் சபரிநாத் மருத்துவ விடுப்பில் நல்லூரில் உள்ள வீட்டுக்கு சென்றார்.

திடீர் தீயில் சிக்கிய 2 பேர்
இதையடுத்து இன்று காலையில் அவர் தனது வீட்டில் இருந்தார். அப்போது கீழ் வீட்டில் வசித்து வந்த சாந்தி என்பவரும் வீட்டில் இருந்தார். சபரிநாத்துக்கு சமையல் செய்து கொடுக்க அவர் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் திடீரென்று வீட்டில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதனால் வீட்டில் இருந்த இருவரும் தீயில் சிக்கி கொண்டனர்.

உடல் கருகி பலி
இதுபற்றி அறிந்தவுடன் பொள்ளாச்சி மேற்கு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து கதவை உடைத்து தீ அணைக்கப்பட்ட நிலையில் வீட்டில் சபரிநாத் மற்றும் சாந்தி ஆகியோர் உடல் கருகி இறந்தது தெரியவந்தது. இதையடுத்த இருவரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார் பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காரணம் என்ன?
மேலும் வீட்டில் தீவிபத்து எப்படி ஏற்பட்டது என்பது பற்றி போலீசார் விசாரிக்க தொடங்கினர். இதில் வீட்டில் இருந்த பிரிட்ஜ் திடீரென வெடித்ததால் தீவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் தடயவியல் ஆய்வு நிபுணர்களும் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர். வீட்டில் இருந்து சபரிநாத்தின் செல்போன் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகம் இருப்பதாக..
மேலும் இந்த சம்பவத்தில் போலீசாருக்கு சில சந்தேகங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நல்லூர் கிராமத்தில் இன்று பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications