கோவை அவினாசி சாலையில் மெட்ரோ ரயில்... கோல்ட்வின்ஸ் டூ நீலாம்பூர்.. வரப்போகும் பிரம்மாண்டம்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மாநகரில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகளுக்கு தயாராகி வரும் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம், கோவையில் அவினாசி சாலையில் உள்ள கோல்ட்வின்ஸ் முதல் லு மெரிடியன் ஹோட்டல் வரை மாநில நெடுஞ்சாலைத்துறையுடன் இணைந்து 3 கி.மீ நீளத்திற்கு இரட்டை அடுக்கு மேம்பாலம் கட்ட திட்டமிட்டிருக்கிறது. இதன் காரணமாக அங்கு தனியாக நிலம் கையகப்படுத்த வேண்டியதிருக்காது.

தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய நகரம் என்றால் அது கோவை தான். கோவை மாநகரை பொறுத்தவரை அதிவேகமாக வளர்ந்து வரும் தென்னிந்திய நகரங்களில் ஒன்றாக இருக்கிறது. தற்போதைய நிலையில் கோவை மாநகரம் மற்றும் புறநகரில் சேர்த்து பார்த்தால் 35 லட்சம் பேர் வரை வசிக்கிறார்கள். வரும் காலத்தில் 50 லட்சத்தை எளிதாக தாண்டுவதற்கு வாய்ப்பு உள்ளது.

Coimbatore Metro rail flyover

கோவையில் அடுத்த 10 ஆண்டுகளில் போக்குவரத்து நெரிசலும் கடுமையாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதனை எதிர்கொள்ளும் வகையில் கோவையில் மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கப்பட வேண்டியது அவசியமாகும். இதற்கு அரசும் தயாராகி வருகிறது.இதன்படி கோவையின் முக்கிய வழித்தடங்களான அவிநாசி ரோடு, சத்தி ரோடு என இரு வழித்தடங்களில் 34.8 கி.மீ., துாரத்தில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட இருக்கிறது. முதல் வழித்தடம் உக்கடம் பஸ் நிலையத்தில் துவங்கி, நகர விமான நிலையம் வழியாக நீலம்பூர் ஒருங்கிணைந்த நிலையம் வரை 20.4 கி.மீ தூரத்துக்கு அமைய இருக்கிறது.

இரண்டாவது வழித்தடம், கோவை ரயில் நிலையத்தில் துவங்கி சத்தி ரோட்டில் வலியம்பாளையம் பிரிவு வரை 14.4 கி.மீ., தூரம் வரை அமைய இருக்கிறது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. முதற்கட்டமாக நிலம் எடுப்பதற்காக, 154 கோடி ரூபாயை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அண்மையில் ஒதுக்கீடு செய்திருந்தது. . நிலம் கையகப்படுத்தும் பணிகளை விரைவில் மெட்ரோ ரயில் நிறுவனம் அதிகாரிகளுடன் இணைந்து மாநகராட்சி துவங்க உள்ளது.

சத்தியமங்கலம் சாலையில் கணபதி பகுதியில் டெக்ஸ்டூல் பாலத்தில் இருந்து சூர்யா மருத்துவமனை வரையிலான பகுதி மிக குறுகலாக இருந்து வருகிறது. இந்த பகுதியில் டெக்ஸ்டூல் பாலத்தில் சாலையை 3.1 கி.மீ தூரத்துக்கு விரிவுப்படுத்த தேசிய நெடுஞ்சாலை திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு நிலத்தை கையகப்படுத்த ரூ.54 கோடியை தேசிய நெடுஞ்சாலை துறை ஒதுக்கி உள்ளது.அதனுடன் சேர்த்து கோவை மெட்ரோ ரயிலுக்கும் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.

இதனிடையே கோவையில் புதன்கிழமை அன்று 'கோயம்புத்தூர் நகர மேம்பாலங்கள் - லேட்டஸ்ட் அப்டேட்' குறித்து கோவையில் உள்ள இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சபை கருத்தரங்கு நடத்தியது. இதில் உரையாற்றியபோது, கோயம்புத்தூரின் நெடுஞ்சாலைகள் (சாலை பாதுகாப்பு) பிரிவு பொறியாளர் ஜி. மனுநீதி கூறும் போது, சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம், கோவையில் அவினாசி சாலையில் உள்ள கோல்ட்வின்ஸ் முதல் லு மெரிடியன் ஹோட்டல் வரை மாநில நெடுஞ்சாலைத்துறையுடன் இணைந்து 3 கி.மீ நீளத்திற்கு இரட்டை அடுக்கு மேம்பாலம் கட்ட திட்டமிட்டிருக்கிறது.

இதில் மேல் தளத்தில் மெட்ரோ ரயிலை இயக்கும் அதே வேளையில், கீழ் தளம் வாகன போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் என்றும் இதன் மூலம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கோவை சின்னியம்பாளையம் பகுதியில் தனியாக நிலம் கையகப்படுத்த வேண்டியதில்லை. இதனால் திட்டச் செலவு வெகுவாகக்குறையும் என்றார்.

தற்போதைய நிலையில் மாநில நெடுஞ்சாலைகள் (சிறப்பு திட்டம்) துறை, கோவை அவினாசி சாலையில் உப்பிலிபாளையத்திலிருந்து கோல்ட்வின்ஸ் வரை 10.1 கி.மீ நீளத்திற்கு ஒரு உயர்மட்ட மேம்பாலத்தை அமைத்து வருகிறது. கடந்த 2024 நவம்பரில் முதலமைச்சர் ஸ்டாலின், கோல்ட்வின்ஸ் முதல் நீலம்பூர் வரையிலான 5 கி.மீ நீளத்திற்கு உயர்த்தப்பட்ட வழித்தடம் நீட்டிக்கப்படும் என்றும், மாநில அரசு இந்த திட்டத்திற்காக ரூ.600 கோடி ஒதுக்கும் என்றும் அறிவித்திருந்தார். இதையடுத்து உடனடியாக, மாநில நெடுஞ்சாலைகள் (சிறப்பு திட்டம்) பிரிவு அந்தப் பகுதியில் நில அளவீடு மற்றும் மண் பரிசோதனையைத் தொடங்கியது. விரிவான திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து நீலம்பூர் வரை கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையம் வழியாக 20.4 கி.மீ நீளத்திற்கு வழித்தடம் ஒன்று பணியை செயல்படுத்தப்போவதாக சென்னை மெட்ரோ நிறுவனம் அறிவித்திருக்கிறது. அதன் ஒரு பகுதியாகவே மாநிலநெடுஞ்சாலை துறையுடன் இணைந்து கோல்ட்வின்ஸ் முதல் லு மெரிடியன் ஹோட்டல் வரை இரண்டு அடுக்குமே மேம்பாலத்தை அமைத்து செலவை குறைக்கவும், பணியை எளிதாக்கவும் சென்னை மெட்ரோ முடிவு செய்துள்ளது.

இதேபோல் இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) L&T பைபாஸ் சாலையை ஒட்டி ஒரு புதிய முனையக் கட்டிடத்தைக் கட்டத் திட்டமிட்டுள்ளதாகவும், ஹோட்டல் லு மெரிடியனில் இருந்து விமான நிலைய முனையக் கட்டிடம் வரை 100 அடி நீள சாலை அமைக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறினார்கள். அதற்காக ஹோட்டல் லு மெரிடியனில் இருந்து புதிய விமான நிலைய முனையக் கட்டிடம் வரை தூண்களை அமைக்கவும் சென்னை மெட்ரா ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+