ரூ. 415 கோடியில் புதுப்பொலிவு பெறும் கோவை மாநகர சாலைகள்.. செந்தில் பாலாஜி கொடுத்த அப்டேட்
கோவை: கோவை மாவட்டத்தில் சாலைகள், புதிய மேம்பாலங்கள், பெரியார் நூலகம், செம்மொழி பூங்கா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை மாநகராட்சியில் ரூ. 415 கோடி மதிப்பில் சாலைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருவதாக கூறியுள்ளார்.
கோவை இடையர்பாளையம் பகுதியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் கைத்தறி துறை அமைச்சர் காந்தி கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் பேசிய செந்தில் பாலாஜி, “திமுக ஆட்சியில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் கோவை மாவட்டத்தில் 17,000க்கும் மேற்பட்ட பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

கோவை மாநகராட்சியில் மட்டுமே ரூ. 415 கோடி மதிப்பில் சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாவட்ட நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று சாலை பராமரிப்புக்காக ரூ.200 கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக ரூ. 100 கோடிக்கு டெண்டர் விடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து கோவைக்காக முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை கொடுத்து வருகிறார்.” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய காந்தி, “கோவை மாவட்டத்தில் 1,554 ஏக்கர் பூமிதான நிலங்கள் உள்ளன. அவற்றில் தற்போது வரை 117 ஏக்கர் நிலங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சிறைச்சாலை, காவல் நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள் ஆகியவற்றுக்காகவும் பல்வேறு துறைகளுக்கு நிலங்கள் வழங்கப்பட்டுள்ளன. கோவை மத்திய சிறையில் 75 நாட்கள் இருந்த நானே, சிறைக்காக 95 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி கொடுத்திருப்பது பெருமையாக உள்ளது.
கலைஞர் கருணாநிதி மக்கள் வரிப்பணத்தை வீணடிக்க மாட்டார். கலைஞர் காலத்தில் வழங்கப்பட்ட கலர் டிவி தற்பொழுது வரை ஓடுகிறதா இல்லையா. அதற்கு பின்பு ஆட்சிப் பொறுப்பேற்றவர்கள் மிக்சி கிரைண்டர் மின்விசிறி எல்லாம் வழங்கினார்கள் ஆனால் தற்போது அவை பயன்பாட்டில் இல்லை. இரண்டு ஆட்சிக்கும் உள்ள வித்தியாசம் அதுதான்.
இந்த ஆட்சியை திமுக ஆட்சி என்று கூட நான் கூற மாட்டேன். காரணம் இது மக்களாட்சி. மக்களின் தலைவர் தான் ஸ்டாலின். தமிழக முதலமைச்சரை அண்டை மாநிலமான கேரளாவில் மிகவும் பாராட்டுகிறார்கள். பெரும்பாலான மாநிலங்களில் அவரை பின்பற்றுகிறார்கள். நம்முடைய முதலமைச்சர் கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்.
ஒரு மனிதனுக்கு ஓரளவு சிந்திக்கும் ஆற்றல் வந்து விட்டாலே நல்லது கெட்டது தெரிந்துவிடும். அதன் காரணமாக தான் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் மாநிலமே முன்னேறும். எல்லாவற்றிலும் நன்மைகள் நடக்கும். பத்து ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடந்து கொண்டிருந்தது. கடந்த மூன்றரை ஆண்டுகளாக என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை சிந்தியுங்கள். மக்கள் அனைவரும் சிந்தித்து செயல்பட வேண்டும்.
மகளிர் உரிமைத் தொகையை எங்களுக்கு அளிக்க கூடாதா என சில ஆண்கள் கேட்கிறார்கள். ஆண்களுக்கு உரிமைத் தொகை அளித்தால் என்ன ஆகும் என்று எங்களுக்கு தெரியும். குடும்பத் தலைவிகளுக்கு தான் குடும்பத்தை பற்றி தெரியும். நானும், செந்தில் பாலாஜியும் அமைச்சர்கள் தான். ஆனால் எங்களுக்கு குடும்பத்தை பற்றி தெரிந்தது பூஜ்ஜியம். என் மனைவிக்கு தான் குடும்பத்தை வழிநடத்த தெரியும். அதையறிந்து தான் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்படுகிறது.” என்றார்.












Click it and Unblock the Notifications