கோவை காட்டூரில் பயங்கர தீ விபத்து.. 2 மணி நேரப் போராட்டம்.. வானுயர எழும்பிய கரும்புகையால் பரபரப்பு
கோவை: கோவை மாவட்டம், காட்டூர் பகுதியில் வாகன உதிரி பாகங்கள் கடையில் பயங்கரமாகப் பற்றிய தீயால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தீயை அணைக்கும் போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். மாநகரின் மிக முக்கியமான பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதால் வானுயர கரும்புகள் எழும்பியது.
கோவை மாவட்டம், காட்டூர் பகுதியில் வாகனம் உதிரி பாகங்கள் விற்பனை கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் இன்று மாலை 4 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தக் கடை 3 அடுக்குமாடி கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கடையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மூன்று மாடியிலும், மொட்டை மாடியில் இருந்த குடோனும் முழுவதுமாக தீப்பற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மளமளவென பரவிய தீ
தீ மளமளவென அருகில் இருக்கக்கூடிய கட்டிடங்களுக்கும் பரவத் தொடங்கியதால் பொதுமக்கள் கடும் அச்சமடைந்தனர். உடனடியாகப் பொதுமக்கள் அருகில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் இருந்து தண்ணீரை எடுத்து ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மாலை 6 மணி வரையில் 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தண்ணீர் லாரிகள் கொண்டு வரப்பட்டு தீயை அணைத்தாலும் கரும்புகை வெளியேறிக் கொண்டே இருந்தது. இதையடுத்து, உடனடியாக கூடுதலாக வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை கட்டுப்படுத்தும் பணியானது தொடர்ந்து நடைபெற்றது. மாநகரின் மிக முக்கியமான பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதால் மாவட்ட ஆட்சியர் பவன் குமார், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் மாநகர காவல் ஆணையர் கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
போக்குவரத்து தடை
மாவட்ட ஆட்சியர் அலுவலக பணியாளர்கள், மாநகராட்சி அலுவலகப் பணியாளர்கள் தீயணைப்புத் துறை பணியாளர்கள் போக்குவரத்து மற்றும் காவல்துறை போலீசார் என 500க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்தில் குவிந்து தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்து ஏற்பட்ட சாலையில் பொதுப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, வாகனங்கள் மாற்று சாலையில் அனுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து, தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
தீயணைப்புத் துறை வாகனங்கள்
இச்சம்பவம் குறித்து கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் கூறியதாவது: தீ விபத்து ஏற்பட்ட உடனே தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். மாநகராட்சி அதிகாரிகளும், வருவாய்த் துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து பணிகளில் ஈடுபட்டனர். தீயணைப்பு துறையில் தண்ணீர் வாகனங்கள் மட்டுமின்றி ரசாயனம் கலந்த தெளிப்பான்களும் பயன்படுத்தப்பட்டன. எந்த ஒரு உயிர் பாதிப்பும் இந்த சம்பவத்தில் ஏற்படவில்லை.
பொதுமக்களுக்கு பாதுகாப்பு அறிவுரைகள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது. இரண்டரை மணி நேரத்திற்குள் தீ அணைக்கப்பட்டுவிட்டது. தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணைக்குப் பின்னர் தீ விபத்திற்கான காரணம் தெரிவிக்கப்படும் என்றார்.
அப்புறப்படுத்தப்பட்ட பொதுமக்கள்
தொடர்ந்து, கோவை மாநகர காவல் ஆணையாளர் கண்ணன் கூறுகையில், இந்த சம்பவம் குறித்து தெரிந்த உடனே குறிப்பிட்ட இடத்திற்கு காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் வந்து விட்டோம். உயிர் சேதம் ஏற்படக்கூடாது என்பதற்காக பொதுமக்களையும் இங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டோம். அருகில் இருந்த வீடுகளில் சிலிண்டர்கள் போன்று எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை அகற்றப்பட்டுள்ளன. ரசாயன உதவிகள் தேவைப்பட்டதால் இந்திய விமானப்படை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்க உதவினர்.
ஏறத்தாழ சுற்றுப் பகுதியில் 35க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்தவர்களை வெளியேற்றி உள்ளோம். ஃபோம் பஸ்ட் இயந்திரம் விமானப்படை மூலம் கொண்டுவரப்பட்டது. முழு விசாரணைக்கு பின்பு எதனால் தீ பிடித்தது என்று தெரிய வரும். அரசு கூறிய விதிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றினாலே இதுபோன்ற விபத்துகளை தடுக்கலாம் என்றார்.












Click it and Unblock the Notifications